வயது ஆக ஆக உடலை சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. உடலை சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது, சிறு மூளை, கண், சதைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புண்டு. இம்மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதுமைக்காலத்தில் அடிக்கடி கீழே விழுந்துவிடுகிறார்கள்.
காரணங்கள்
வயதான காலத்தில் கீழே விழுவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான காரணங்கள் :
• நரம்பு சார்ந்த நோய்கள (எ.கா.) அறிவுத்திறன் வீழ்ச்சி. உதறுவாதம். பக்கவாதம்
• காது சார்ந்த நோய்கள்
• கண் பார்வைக் குறைதல் (எ.கா.:) கண் புரை
• மூட்டுவலி மற்றும் சதைகள் சார்ந்த நோய்கள்
• இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவது. அதாவது. ஒருவர் படுத்த நிலையில் இருக்கும் பொழுது இரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும் பொழுது இரத்த அழுத்தம் வேகமாகக் குறைந்து விடுகிறது (Postural hypotension). இதனால் கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகிறது
• மருந்துகள் (எ.கா.) நீர் மாத்திரை, ஊக்க மாத்திரை, உயர் இரத்த அழுத்தம். மன நோய்க்குக் கொடுக்கும் மாத்திரை
• அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.
கீழே விழுவதற்கு வேறு காரணங்கள்
முதியவர்கள் கீழே விழுவதற்கு சுற்றுப்புற சூழ்நிலையும் ஒரு முக்கிய காரணமாகும்.
அவை :
• வழுவழுப்பான தரை, ஈரமான தரை, மேடுபள்ளமான தரை, அதிகம் உயரமுள்ள படிக்கட்டுக்கள்
• மங்கிய வெளிச்சம்
• அறையிலுள்ள தேவையற்றப் பொருட்கள்
(எ.க.) டேபிள், நாற்காலி
ஆகையால் முதுமையில் கீழே விழுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு.
தொல்லைகள்
• கீழே விழுவதினால் சிறிய சிராய்ப்பிலிருந்து எலும்பு முறிவு ஏற்படுவது வரை பல தொல்லைகள் வரலாம். சுமார் 20 % முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. தலையில் அடிபட்டு காயம் மற்றும் மூளையில் இரத்க் கசிவும் ஏற்பட வாய்ப்புண்டு.
• ஒருமுறை கீழே விழுந்ததும் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்கிற பயத்தினால் பலர் மறுபடியும் நடக்க பயந்து படுத்தப் படுக்கையாகி விடுகிறார்கள்.
முதுமையில் கீழே விழுவதைத் தடுக்க
• உடலை முழுமையாக பரிசோதனை செய்து, கீழே விழுவதற்கு நோய்கள் ஏதேனும் காரணமா? என்று கண்டறிந்து அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்
• கண் பார்வை சரியாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியில்லாத கண் கண்ணாடி கூட கண் பார்வைக் குறைவினால் கீழே விழு ஒரு காரணமாகும். ஆகையால் பரிசோதனை செய்யப்பட்ட சரியான கண்ணாடி அணிவது மிகவும் அவசியம்
• காதை முழுமையாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் கூட நிலை தடுமாறலாம். அதை அகற்றிவிட்டால் இதுபோன்ற தொல்லை ஏற்படாது
• முதியவர்கள், சாப்பிடும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் பக்கவிளைவுகளினால் கீழே விழ
வாய்ப்புண்டு
• மது அருந்துவதை நிறுத்த வேண்டும்
• படுக்கையில் இருந்து எப்பொழுதும் வேகமாக எழுந்து, உடனே நடக்கக்கூடாது
• தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர், எழும்போது முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க ஆரம்பிக்க வேண்டும்
• நடக்கும் பொழுது கைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்களை எவ்விதத் தயக்கமுமின்றி உபயோகிக்க வேண்டும். மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்று கூச்சப்படத் தேவையில்லை. நம் உடலை நாம்தான் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.
• சரியான, அதே நேரத்தில் பொருத்தமான காலணிகளை அணிவது நல்லது
• நாள்தோறும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் திறனை அதிகப்படுத்தி கீழே விழுதலைத் தடுக்க உதவுகிறது. உடலைச் சரிசமமாக வைத்துக்கொள்ள சிறப்பு உடற்பயிற்சிகளும் உண்டு.
கீழே விழுவதை தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
• படுக்கை அறை, குளியல் அறை மற்றும் படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் மிகவும் அவசியம்
• அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கைக்கு எட்டும் தூரத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும். (எ.கா.) டெலிபோன், பேனா, கண்ணாடி, டைரி, சாவி
• இரும்புக் கைப்பிடிகளை முதியவர்கள் அதிகமாக உபயோகிக்கும் இடங்களில் பொருத்த வேண்டும். (எ.கா.) குளியலறை, கழிவறை, படிக்கட்டு
• குளியலறை வழுவழுப்பு இல்லாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முதுமையில் கீழே விழுதல் என்பது ஓர் பெரிய தொல்லையாகும். அது மனதளவில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ஒருவர், தான் எப்பொழுது விழுவோம் என்பது அவருக்கே தெரியாது.
ஆனால், அப்படி விழுதலை தடுக்க உதவுவது கைத்தடியே! அதை நண்பனாக ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் உபயோகித்தால் கீழே விழுதலை ஓரளவுக்குத் தவிர்த்து, முதுமையில் மகிழ்ச்சியுடன் வாழலாம்.