படுக்கைப் புண் வராமல் தவிர்க்கும் முறைகள்

viduthalai
3 Min Read

வி.எஸ்.நடராஜன்

படுக்கைப் புண் என்பது அழுத்தப் புண் (Pressude sole). அதாவது தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், பிராண வாயுவும் ஊட்டச் சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது.

தசைகளிலிருந்து கழிவுப் பொருள்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள் இறந்து புண்ணாகிவிடும். முதலில் தோலில் நிற மாற்றம் இருப்பதைக் காணலாம். பிறகு புண்ணாகி மிகவும் ஆழமானதாக மாறிவிடும். இது உடலில் பெரும்பாலும் எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும்.
அந்த இடங்கள் படுக்கைகளில் அழுத்தப்படும்போது அழுத்தம் அதிகரித்து ரத்த ஒட்டம் குறைந்து திசுக்கள் இறந்து அழுத்தப்புண் உண்டாகிறது.

படுக்கைப்புண் வர காரணங்கள்

முதியோர் நீண்ட நேரம் ஒரே பக்கமாகப் படுத்திருத்தல். (எ.கா.: பக்கவாதம்.)

சத்துணவுக் குறைவு

கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல். (எ.கா.: நீரிழிவு)
ரத்த அழுத்தம் குறைந்த நிலை. உதாரணம்: நீர் வறட்சி.
முதுமையின் காரணமாக தோல் தேய்மானம்.

தோல் மேல் தடவும் ஸ்டீராய்டு களிம்பு, வறண்ட தோல், தோல் வெடிப்பு – மலம் கழிக்கும் பாத்திரத்தில் உட்காரும் போது காயம் படுதல்.
மேடு பள்ளங்கள் கொண்ட படுக்கை
சாப்பிட்ட உணவுப் பொருள்கள் படுக்கையில் சிதறி அதன் அழுத்தத்தால் புண் ஏற்படுதல்.
படுக்கை விரிப்புப் துணி சுருக்கங்களுடன் இருப்பது.

கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் மலம், சிறுநீர் காரணமாக.
அதிக நேரம் ஈரமான படுக்கை விரிப்பில் படுக்க வைப்பதால்.
வியர்வை அல்லது வாந்தி ஏற்படுவதால்.

அதிக நேரம் ஒரே இடத்தில் (சக்கர நாற்காலியில்) அமர்ந்திருத்தல்.
புண் வருவதற்கான உடல் பாகங்கள்
முதுகின் கீழ்ப்புறம், இடுப்பின் இரு பக்கங்கள்
தோள் பட்டை எலும்புகள் முதுகு எலும்பு
தலையின் பின்புறம்.

தவிர்க்கும் வழிமுறைகள்

முதியோர்களுக்கு, குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளோருக்கு எளிதில் படுக்கைப் புண் வர வாய்ப்புண்டு.
படுக்கைப் புண் ஏற்பட்டு விட்டால் அதைப் பூரணமாக குணப்படுத்துவது மிகவும் சிரமம்.
படுக்கைப் புண்கள் வராமல் நோயாளியை கவனித்துக் கொள்ள வேண்டும்.
குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுத்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

பவுடர்

முதுகிலும் அழுத்தும் பாகங்களிலும் துடைத்து பவுடர் போட்டுப் படுக்க வைக்க வேண்டும்.
படுக்கை விரிப்பு மாற்றும்போது உண்ட உணவுப் பொருள்கள் படுக்கையில் இல்லாமலும், சுருக்கங்கள் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
படுக்கையில் மலம் கழிக்கும் தொட்டி கொடுக்கும்போது அது உடையாமல், கீறல் இல்லாமல் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காற்றுப் படுக்கை அல்லது தண்ணீர் படுக்கை உபயோகிப்பதால் ரத்த ஓட்டம் சீராக சரிசமமாகப் பரவிப் படுக்கைப் புண் வராமல் தடுக்கலாம்.

தொற்றுக் கிருமி

2 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது புண் இருக்கும் இடத்துக்கு அழுத்தம் ஏற்படாமல் நிலையை மாற்றிப் படுக்க வைக்க வேண்டும்.
புண் உள்ள இடத்தில் தொற்று நோய்க் கிருமிகள் இருந்தால் அந்த இடத்தைச் சுத்தமாக துடைத்து தகுந்த மருந்துகளை வைத்து கட்டுப் போட வேண்டும்.
உடல் நலம் தேறத் தேவையான கலோரி, புரதம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகளைக் கொடுக்கலாம்.
புண் மிகவும் ஆழமாகவோ அழுகியோ இருந்தால் அதை மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *