மொழிப் போராட்டம் : வட நாட்டில் மொழிச் சண்டை

Viduthalai
8 Min Read

நாவலர் இரா. நெடுஞ்செழியன்

மொகலாயர் ஆட்சியில் பாரசீக மொழி அரசாங்க மொழியாக விளங்கியது. அரச அவையிலும், அரண்மனையிலும் பாரசீக மொழியே பேசப்பட்டது. அரசாங்கத்தின் ஆதரவில் வளர்ந்ததால் பாரசீகச் சொற்கள் அரண்மனையின் வெளியிலேயும் உலவ ஆரம்பித்தன. இக்காரணம் பற்றி தான் வடநாட்டு மொழிகளில் பாரசீகச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மொகலாய ஆட்சி மங்கி, கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுங் கூட்டமானதும், பாரசீக மொழிக்கு இருந்த மதிப்பும், ஆதரவும் குறைந்து விட்டன.

அரசாங்க மொழியாக உருது

கடைசியாக 1837இல் பாரசீக மொழிக்குப் பதிலாக உருது அரசாங்க மொழியாக ஆக்கப்பட் டது. மதவேற்றுமையும், மொழிச் சண்டையும் தலை தூக்காத அந்தக் காலத்தில் உருது அர சாங்க முதன்மொழியாவதற்கு எந்த எதிர்ப்பும் உண்டாக வில்லை. உருது மொழியே வட இந்தியாவின் பெரும் பகுதியில் வழங்கும் மொழியாக இருந்தது. இன்று கருதப்படுவதைப் போல அக்காலத்தில் உருது முஸ்லிம்களின் மொழி என்று எண்ணப்படவில்லை. இந்து – முஸ்லிம் வேற்றுமை இன்றி எவரும் உருதுவை ஏற்றுக் கொண்டனர். இன்றுகூட வட இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில்தான் உருதுமொழி மிகுதியாக வழங்கப்படுகிறது.
அன்றிருந்த அமைதியான நிலை நீடித்திருந்தால் உருது மொழி வட இந்தியாவிலுள்ள எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் முதன் மொழியாக வந்திருக்கும். ஆனால் எதிர்பாராத வரலாற்று நிகழ்ச்சிகளால் சமாதான வளர்ச்சி தடைப்பட்டதல்லாமல், சச்சரவே மூண்டது.

பதிலடிப் பக்கம்காந்தியார்-ராஜேந்திர பிரசாத்

தேசிய உணர்ச்சி
சிப்பாய்க் கலகத்துக்குப்பின் இந்தியாவில் தேசிய உணர்ச்சி உண்டாயிற்று. தேசிய உணர்ச்சியின் விளைவாக தேசிய காங்கிரஸ் பின் தோன்றியது. தேசிய இயக்கத்தில் ஈடுபட்டோர் துவக்கத்தில் பெரும்பாலும் இந்துக்களாக இருந்ததால் அவர்கள் பேசியவை பெரும்பாலும் இந்து தேசியம் பற்றியவையாக இருந்தன. இந்தியா என்று கூறும்பொழுது வேதகாலம், இந்து மதத்தின் பெருமை, இந்துக்களின் வரலாறு, இந்து கலாச்சாரம் இவை பெரும்பாலும் பேசப்பட்டன. தேசிய உணர்ச்சி இந்துமத மறுமலர்ச்சி இயக்கமாக எதிரொலித்தது.

தெய்வீக மொழி

இத்துடன் சேர்ந்து சுவாமி தயானந்தர் ஆரம்பித்த இந்துமத தர்ம பிரச்சாரமும் வலுத்தது. வேதத்தின் மகிமையும், சமஸ்கிருதத்தின் பெருமையும் பேசப்பட்டன. இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக சமஸ்கிருதம் விளங்குகிறது என்ற எண்ணம் ஏற்பட்டதும், அயலார் மொழிகளுக்குப் பதிலாக சமஸ்கிருதத்திற்கு ஆதரவு காட்டவேண்டுமென தேசிய இயக்கத்தினர் கருதினர். இறந்தமொழி எனினும் தெய்வீக மொழி என்ற அளவில் அதற்கு மதிப்பு உயர்த்தப்பட்டது. சமஸ்கிருதத்தின் சொற்களை மிகுதியாக வழங்கும் அவா வளர்ந்தது. இந்த நிலையில் சமஸ்கிருதச் சொற்களை நிரம்ப சேர்த்து லல்லுலால் உண்டாக்கிய இந்தியின் மீது கற்றோர் – எழுத்தாளர் கவனம் சென்றது. வழக்கத்திலிருந்த உருது மொழியுடன் லல்லுலால்ஜியின் இந்தி போட்டியிட்டது.

ஹிந்து – உருது பிரச்சினை

இந்து – முஸ்லிம் இருபாலாரும் உருது மொழியைப் பேசிய போதிலும் மொழிப் பிரச்சினையில் சமஸ்கிருதம் மிகுந்த இந்தி இந்துக்களின் கலாச்சாரத்தையும் அரபி பாரசீகம் கலந்த உருது முஸ்லீம்களின் கலாசாரத்தையும் காட்டுவனவாகும் என்ற எண்ணம் பிறந்தது. தேசிய இயக்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்தி – உருது மொழிப் பிரச்சினை உண்டாகி விட்டது என்று சொல்லலாம். மொழிப் பிரச்சினை பற்றிய கட்டுரையில் பண்டித ஜவஹர்லால் நேரு இதை ஒப்புக்கொள்ளுகிறார். அவர் கூறுவது:
“பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதி யில்தான் இந்தி – உருது என்ற சொற்கள் இரண்டு வேறுபட்ட மொழிகளை உணர்த்தும் சொற்களாயின. இந்தப் பிரிவு உணர்ச்சி வளரலாயிற்று. தேசிய உணர்ச்சியில் இந்துக்கள் முதலில் ஈடுபட்டதால் தூய்மையான இந்தி மொழியையும், தேவநாகரி எழுத்தையும் வற்புறுத்தினார்கள். இதன் எதிரொலியே மொழி பற்றிய பிளவு, தேசியம், ஆரம்பத்தில் அவர்களுக்கு இந்து தேசியமாகப்பட்டது. சிறிது காலத்துக்கெல்லாம் முஸ்லிம்கள் தேசிய உணர்ச்சி பெற்றதும், அவர்கள் வகையில் தேசியம் பரவியதுடன் உருது மொழியில் அதிக அக்கறை காட்டத் தொடங்கினார்கள்” என்பதாகும்.

இந்து – முஸ்லீம்

மேலும் தொடர்ந்து அவர் கூறும் போது, “தேசிய உணர்ச்சி முற்றிலும் வளர்ந்ததும், இந்த வேறுபாடுகள் மறைந்துவிடும்” என எழுதியுள்ளார். அவர் எழுத்துக்கள் இவ்விதமாக இருந்தனவே யொழிய, வரலாற்றின் எழுத்துக்கள் வேறுவிதமாக இருந்தன. இந்தி -உருது பிரச்சினை, இந்து – முஸ்லிம் பிணக்காகி, இந்து கலாச்சாரம் -இஸ்லாமிய கலாச்சாரம் என்ற பேச்சாகி, இந்து தேசியம் – முஸ்லிம் தேசியம் என வளர்ந்தது. நேரு கூறியதற்கு மாறாக தேசியம் பழுத்துப் பயன் தரும் சமயத்தில் இந்தியா பிரிக்கப்பட்டால்தான் விடுதலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டு, இறுதியாக விடுதலையும் பிரிவினையும் ஒரே காலத்தில் நிகழ்ந்து தீர வேண்டியவைகளாகி விட்டன. ஆனால் ஆரம்பத்தில் இந்தி-உருது என்ற மொழிப் பிரச்சினை மட்டுமே இருந்தது.
இந்தி-உருது தகராறில் அரபிச் சொற்களை வைத்துக் கொள்வதா அல்லது அவற்றைத் தள்ளி விட்டு சமஸ்கிருதச் சொற்களை நுழைப்பதா என்று ஆரம்பக் கேள்வி எழும்பொழுது இந்து-முஸ்லிம் என்ற மத வேறுபாடு தோன்றவில்லை. வழக்கிலிருக்கும் பாரசீக-அரபிச் சொற்களைத் தள்ளக் கூடாது என்று வாதிட்டவர்களில் முதன்மையாக விளங்கியவர் ராஜா சிவபிரஸாத் என்பவராவர்.

ஆங்கில அதிகாரிகள்

சமஸ்கிருதச் சொற்களை நிரப்பவேண்டும் என்று வாதிட்டவர்களில் தலைமை தாங்கியவர் ராஜா லட்சுமணசிங் என்பவராவார். இவர்கள் இருவரும் இந்துக்களே. ஆனால் மொழிப் பிரச்சினையில் இவர்களேயன்றி வெள்ளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சிற்சில பொழுது தாங்கள் கூறுவதையே முடிவாகக் கொண்டு நடைமுறையில் கொணரவும் செய்தனர். இந்தி மொழியின் ஆரம்பத்தை நோக்கு கையில், இந்துக்களுக்கென தனி மொழி வேண்டும் என லல்லுலால், சடல்மிஸ்ரா போன்றவர்களை அழைத்துப் புதுமொழியை உருவாக்கச் சொன்னவர் கில் சிர்ஸ்ட் என்ற ஆங்கில அதிகாரியாவார்.
பின்பு சிவ பிரஸாத், லட்சுமண் சிங் இருவரும் முறையே பாரசீக அரபி சொற்களுக்கும் – சமஸ்கிருதச் சொற்களுக்கும் வாதிட்டபொழுது, சிவபிரஸாத் சார்பாக ஜான் பீம்ஸ் என்ற ஆங்கிலேயரும், லட்சுமண் சிங் சார்பாக எப்.எஸ்.கிரவுஸ் என்ற ஆங்கிலேயரும் விடாப்பிடியாக நின்று வாதிட்டனர்.

இந்த மொழிப் பிரச்சினையில் கிருத்துவ பிரச்சார சபைகளும் பங்கு கொண்டன. பொதுவாக வெள்ளையதிகாரிகளின் பக்க துணையும் அரசாங்க ஆதரவும் சமஸ்கிருதம் மிகுந்த இந்தியின் பக்கமே இருந்தன. இதைப்பற்றி இந்திய மொழியாராய்ச்சியில் தலை சிறந்த சர்.ஜி.ஏ.கீரையர்சன் தாம் எழுதிய ‘இந்திய மொழி ஆராய்ச்சி’ என்ற நூலில்:
“கெட்டவாய்ப்பாக ஆங்கில அதிகாரிகளின் பலமான ஆதரவனைத்தும் சமஸ்கிருதவாதிகளின் பக்கமே இருந்தது. சமஸ்கிருதங் கலந்த இந்திக்கே கிறித்தவ பிரச்சார சபைகள் ஆதரவு காட்டின; கிருத்துவ மத வேதமான பைபிள் சமஸ்கிருதம் மிகுந்த இந்தியிலேயே மொழி பெயர்க்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடான, ஆனால் தவறான முயற்சியை எதிர்த்து ஒரு சில இந்திய எழுத்தாளர்கள் போராடியது பலனளிக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.
பதிலடிப் பக்கம்

மொழிச் சண்டை
இந்து மத மறு மலர்ச்சியையும், சமஸ்கிருதம் மிகுந்த இந்தி மொழியையும் முஸ்லிம்களுக்கு எதிராக வெள்ளை அதிகாரிகள் வளர்த்து வந்ததற்குக் காரணம் இருந்தது. சிப்பாய்க் கலகம் திரும்பவும் மொகலாய அரசை உண்டாக்க முயன்றதால், சிப்பாய்க் கலகம் அடக்கப்பட்டதும் முஸ்லீம்களுக்குள்ள பலத்தையே ஒடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவு மதவேற்றுமைகளையும், மொழிச் சண்டையையும் தூண்டிவிட்டது. இந்துக்களின் தனிப்பட்ட முயற்சி, பிளாவட்ஸ்கி, அன்னி பெசன்ட், ஆல்காட் போன்றவர்களாலும் வளர்ச்சியடைந்தது.
மத வேறுபாடு காரணமாக எழுந்த வகுப்பு வேற்றுமையில் மொழிச் சண்டை முதல் கட்டமாக இருந்தது. இந்தியை ஆதரித்து 1867இல் பீகார், மாகாணத்தில் பிரச்சாரம் ஆரம்பித்தது. பின் அது அய்க்கிய மாகாணத்தில் பரவி, அலகாபாத் காசி போன்ற இடங்களில் இந்திப் பிரச்சார சபைகள் நிறுவப்பட்டன. இலக்கிய ஆசிரியராக விளங்கிய சர் சையது மகமது என்பவர் இந்த முயற்சிகளைக் கண்டித்து உருது மொழிக்காகப் போராடினார். தன்னாலான வரையிலும் முயன்று பார்த்தார். பயனேதும் ஏற்படவில்லை.

ஆங்கிலேயரின் ஆதரவு

அய்க்கிய மாகாணத்தில் அந்தோனி மாடனால்ட் என்பவர் கவர்னராக வந்ததும், இந்திக்கு ஆதரவு அதிகரித்தது. ஆங்கிலத்திற்கு அடுத்த முக்கிய மொழியாக இந்தியைக் கொண்டுவர புது கவர்னர் பாடுபட்டார். சையது மகமது இறந்ததும் அவருடைய இடத்தில் உருதுவுக்காகப் பாடுபட அப்துல் மல்க் என்பவர் முன் வந்தார். உருதுவை ஆதரித்து மல்க் பேசுவது கவர்னருக்கு சீற்றத்தை உண்டாக்கியது. உருதுவுக்குப் பரிந்து பேசுவது நிற்கவில்லையானால், கல்லூரியொன்றில் மல்க் வகித்து வந்த பதவியைவிட்டு அவர் வெளியேற வேண்டி நேரிடும் என கவர்னர் அவருக்கு எச்சரித்தார். அதன்பின் உருதுவுக்கு ஆதரவு கொடுப்பதை மல்க் நிறுத்திக் கொண்டார். மக்டனால்ட் ஆட்சியில் இந்தி முக்கிய மொழியாக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின் சில காலம் இந்தி வளர்ச்சி தேங்கியே இருந்தது. பாரசீக, உருது மொழிகளிலிருந்த இலக்கியங்களில் சமஸ்கிருதச் சொற்களை அமைத்து உண்டாக்கப்பட்ட இலக்கியங்களைத் தவிர விரிவான இலக்கியம் எதுவும் உண்டாகவில்லை. மாளவியா இந்திக்காகப் பாடுபட்ட பொழுதுதான் தனியான இலக்கியம் இந்தியில் தோன்ற ஆரம்பித்தது. மாளவியாவும், அவரது சநாதன ஆதரிப்பாளர்களும் சமஸ்கிருதப் பயிற்சியை வளர்த்ததுடன், இந்தியில் இலக்கிய வளர்ச்சியையும் உண்டாக்கினார்கள்.
1910இல் இந்தி சாஹித்ய சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தேசிய காங்கிரஸ் வலுவடையத் தொடங்கியது. தேசிய உணர்ச்சியோடு இந்தியாவின் அரசாங்க மொழியாக இந்தி வரவேண்டுமென்ற எண்ணமும் வளர்ந்தது. காந்தியார், ராஜேந்திர பிரசாத், காகா கலேல்கார் போன்றவர்கள் இந்தி அரசாங்க மொழியாக வேண்டுமென்ற இயக்கத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர். காந்தியாரின் தனிப்பட்ட செல்வாக்கும், காங்கிரசின் விரிந்த அமைப்பும் உதவி செய்ததால் இந்திப் பிரச்சாரம் இந்தியா முழுவதும் பரவியது. லட்சக் கணக்கில் நிதி சேர்க்கப்பட்டு, பிரச்சாரம் பலப்படுத்தப்பட்டது.
இந்தியின் உச்சரிப்பை முன்பின் கேட்டறியாத எல்லைப்புறம், பஞ்சாப், சென்னை மாகாணங்களில் கூட இந்திப் பிரச்சார சபைகள் ஆரம்பிக்கப்பட்டன. விடுதலையடைய இந்தியா ஒன்றுபட்டுப் போராடவேண்டும்; அந்த ஒற்றுமையை அடைய ஒரே மொழியாக இந்தி ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்ற பிரச்சாரம் தேசிய இயக்கத்துடன் வளர்ந்தது.
பதிலடிப் பக்கம்

இந்து – முஸ்லீம் வேற்றுமை
இந்தி-உருது சண்டை வலுக்க வலுக்க, சமஸ்கிருத சொற்கள் தேடிப் பிடிக்கப்பட்டு இந்தியில் மிகுதியாக சேர்க்கப்பட்டன. இந்தியில் எழுத ஆரம்பித்த தேசிய தலைவர்களும் சமஸ்கிருதச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தினர். அதே போல் உருது மொழியாசிரியர்கள் அரபி, பாரசீக சொற்களை நிரம்ப எடுத்தாளுவதில் முனைந்தனர். இதனால் இரு மொழிகளுக்குமிடையில் இருந்த பிளவு பெருகியதுடன் மொழிப் பிரச்சினையோடு மட்டும் நில்லாமல் இந்து-முஸ்லிம் வேற்றுமைக்கு அழைத்துச் சென்றது.

இந்துஸ்தானி

பொதுமொழி ஒன்று வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததற்குக் காரணம், நாட்டு மக்களிடையே ஒற்றுமை உண்டாக்க வேண்டுமென்பதற்காகும்: ஆனால் அது இரு வகுப்பினரிடையேயும் சச்சரவை உண்டாக்குவதற்குத்தான் காரணமாயிருந்தது. இந்தச் சச்சரவு விடுதலை இயக்கத்தைப் பாதிக்குமளவுக்கு வளர்ந்ததால், அதைச் தணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காகப் பொது மொழிக் கொள்கை கைவிடப்படவுமில்லை. மாறாக இரு வகுப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சி ஒன்று செய்யப்பட்டது. அதுதான் இந்துஸ்தானி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *