மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு மார்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு

சென்னை, மார்ச் 16- தமிழ் நாட்டில் கூடுதலாக 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
மருத்துவர், செவிலியர் பணி
சென்னை மாநகராட்சியிலும், பிற இடங்களிலும் மொத்தம் 708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்தார்.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140 மய்யங்கள் உள்பட 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைத்தார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மய்யத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் இந்த மய்யங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகள் மருத்துவர்களை காணொலி மூலமாக தொடர்பு கொண்டும் சிகிச்சை பெற முடியும்.

ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

இந்த நிலையில், எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் தொடங்கப்பட உள்ளது. அங்கு பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதில், மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப் பிக்கலாம். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்பட்டு, 2ஆம் தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *