சென்னை, மார்ச் 15 கல்வி திட்ட நிதி, புயல், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இனங்களில் ஒன்றிய அரசிடம் இருந்து வரும் தொகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வரும் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையை விளக்கி பேசியதாவது: நடப்பு 2024-2025-ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1,95,173 கோடியாக மதிப்பிடப்பட்ட மாநில மொத்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு களில் மாநில சொந்த வரி வருவாய் ரூ.2,20,895 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது.
வருவாய் வளர்ச்சி
இது வணிக வரி ரூ.1,63,930 கோடி, முத்திரைத்தாள், பத்திரப் பதிவு கட்டணம் ரூ.26,109 கோடி, வாகன வரி ரூ.13,441 கோடி, மாநில ஆயத்தீர்வை ரூ.12,944 கோடி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மாநில பொருளாதார வளர்ச்சி, வரிவிகித திருத்தங்கள், வரி வசூல் திறன் முன்னேற்றத்தால் மாநில சொந்த வரி வருவாய் வரும் ஆண்டில் 14.60 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில வரி வருவாய்
நடப்பு ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.30,728 கோடியாக மதிப்பிடப்பட்ட வரியல்லாத வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.28,124 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இது ரூ.28,819 கோடியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக வரும் ஆண்டில் மாநில சொந்த வருவாய் மதிப்பீடான ரூ.2,49,713 கோடி, மொத்த வருவாய் வரவுகளில் 75.31 சதவீதமாக இருக்கும். அரசின் முயற்சியால் மாநில சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள், ஒன்றிய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வருகிறது. ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்தது, ஃபெஞ்சல் புயலுக்கான நிதியை விடுவிக் காதது, மிக்ஜாம் புயல், தென் மாவட்ட பெருவெள்ள நிவாரணமாக சொற்ப நிதி ரூ.276 கோடியை விடுவித்தது ஆகியவை மாநில நிதிநிலையை வெகுவாக பாதித் துள்ளது.
ஒன்றிய அரசின் பாரபட்சம்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.23,364 கோடியாக மதிப்பிடப்பட்ட ஒன்றிய அரசு உதவி மானியங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.20,538 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கல்வி திட்டத்தின் முழு பங்குத் தொகையை ஒன்றிய அரசு விடுவிக்கும் என எதிர்பார்த்து, வரும் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ஒன்றிய அரசு உதவி மானியங்கள் ரூ.23,834 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, ஒன்றிய வரிகளில் தமிழ்நாட்டுக்கான பங்கு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.49,755 கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில், திருத்த மதிப்பீடுகளில் ரூ.52,491 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த மதிப்பீடுகளில் இது உயர்ந்திருந்தாலும், மேல்வரிகள், கூடுதல் கட்டணங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து அதிக அளவில் விதிப்பதால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய பங்கு மிக குறைவாகவே உள்ளது.
அநீதி
ஒன்றிய பட்ஜெட் அடிப்படையில் வரும் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு களில் ஒன்றிய வரிகளின் பங்கு ரூ.58,022 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதத்தை கொண்டுள்ள நாம், தேசிய பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீத பங்களிக்கும் அதே வேளையில், ஒன்றிய வரிகளில் தமிழ்நாட்டிற்கு பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது மாநிலத்துக்கு இழைக்கப்படும் அநீதி.
இழப்பு
ஒன்றிய அரசிடம் இருந்து வரும் தொகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநில அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையில் 44.43 சதவீதம் ஆகும்.
உறுதிப்பாடு
நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1,08,690 கோடியாக மதிப்பிடப்பட்டது. திருத்திய மதிப்பீடுகளில் ரூ.1,01,698 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இது ரூ.1,06,963 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக இருக்கும். இது நிதிநிலையை மேம்படுத்துவதில் அர சுக்கு உள்ள உறுதிப்பாட்டை காட்டுகிறது.
நிகர கடன் குறைந்துள்ளபோதும், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 26.41 சதவீதமாக உள்ள கடன் விகிதம், திருத்திய மதிப்பீடுகளில் 26.43 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 பட்ஜெட்டில் 26.07 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்எம்எஸ் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14.3.2025) நண்பகல் 12 மணி அளவில் வாசித்து முடித்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், முக்கிய அறிவிப்புகள் ஆகியவை குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் பொதுமக்களின் அலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசின் எக்ஸ் வலைதள பக்கத்தின் லிங்க் இணைக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்து மேலும் பல அறிவிப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடிந்தது.