சென்னை,மார்ச் 15- ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது என்று நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் கூறினார்.
2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14.3.2025) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப 28 சதவிகிதம் கடன் வாங்கலாம் என நிதி குழு பரிந்துரைத்துள்ளது. அதில் தமிழ்நாடு 26.7 சதவிகிதம் மட்டுமே கடன் வாங்கியுள்ளது. மாநிலத்தின் பொருளாதார உற்பத்திக்கு உட்பட்டுதான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு உள்ளது என நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சிறப்பாக உள்ளது
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 41 ஆயிரத்து 635 கோடியாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து பல திட்டங் களுக்கான நிதி வராமலேயே நாம் சிறப்பாக கையாண்டு வருகிறோம். நிதி வந்திருந்தால் மேலும் சிறப்பாக கையாண்டிருப்போம். நாட்டின் சராசரி வளர்ச்சியை விட, தமிழ்நாட்டின் சேவை வரி உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள்தொகை தற்போது 8 கோடியை தாண்டியிருக்கும், இது ஜெர்மனிக்கு நிகரானது. தமிழ்நாட்டின் பொருளாதார அளவு பின்லாந்தை ஒட்டியுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாட்டில் 6 சதவிகித மக்கள்தொகை உள்ளனர். நாட்டின் பொருளாதார பங்களிப்பு 9 சதவீதமாகும். இது தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் பொருளாதாரம் நன்றாக வளர்ந்து வருகிறது என்பதான அடையாளமாகும்.
தமிழ்நாடு அரசின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது
தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3 சதவீதமாக குறையும். பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப 28 சதவிகிதம் கடன் வாங்கலாம் என நிதிப் குழு பரிந்துரைத்துள்ளது. அதில் தமிழ்நாடு 26.7 சதவிகிதம் மட்டுமே கடன் வாங்கியுள்ளது. மாநிலத்தின் பொருளாதார உற்பத்திக்கு உட்பட்டுதான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு உள்ளது. நிதி மேலாண்மை சிறப்பாக இருப்பதால் வருவாய் பற்றாக்குறை நடப்பாண்டில் 41 ஆயிரத்து 635 கோடியாக குறைந்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகள் சேரும் பட்சத்தில் அவர்களுக்கான நிதியை உடனடியாக விடுவிப்போம். தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.9 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட ரூ.7ஆயிரம் கோடி குறைவாக இந்த ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.