முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு அளித்த முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற சிறப்பு விருதினைப் பெற்ற வரும், விடுதலைப் போராட்ட வீரரும், எளிமையும், தியாகமும், கொள்கை உறுதியும் என்றும் அவரது வாழ்க்கையின் பல தனிச் சிறப்பு அம்சங்கள் கொண்ட வருமான 102 வயது வாழ்ந்த தோழர்
என். சங்கரய்யா அவர்கள் இன்று (15.11.2023) இயற்கையெய்தினார் என்ற செய்தி கேட்டு நாம் மிகவும் கலங்குகிறோம்.
நூறாண்டு கடந்த வாழ்வு என்பது ஓரளவு நமது துன்பத்தைத் துயரத்தைக் குறைக்கும் என்றாலும், அவரது இழப்பு என்பது எளிதில் சமாதானம் அடையக் கூடியதல்ல; ஈடு செய்ய இயலாத பெரும் இழப்பாகும்.
அவரது பொதுவாழ்க்கை என்பது பொதுத் தொண்டாற்றுப வர்களுக்கு என்றென்றும் வழிகாட்டும் திறந்த பாட புத்தகமாகும்.
அவரது தெளிவும், துணிவு மிகுந்த லட்சிய உறவும், பழகுவதில் பாசத்தோடும், மனிதநேயத்தோடும் எவரிடமும் பழகும் பான்மையாளர் என்பதும் இறுதிவரை என்றும் எடுத்துக்காட்டாகவே நிற்கும் என்பது உறுதி!
அவரது லட்சியத் தொண்டு, கொள்கை வாழ்க்கைத் துவக்கம் திராவிடர் கழகத்தின் – சுயமரியாதை இயக்கத்தின் ஈர்ப்பிலிருந்து தொடங்கியது ஒரு வரலாறு.
அவரது மறைவு பொது வாழ்க்கையில் நிரப்பப்பட முடியாத ஒன்று. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், அவரது குருதிக் குடும்ப உறவு களுக்கும் மட்டுமல்லாமல் – தமிழ்நாட்டிற்கும், கம்யூனிச உலகிற்கும் அவரது மறைவு பெரும் இழப்பாகும்.
அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.11.2023