மே பதினேழு இயக்கம் நடத்தும் தமிழ் அறிவர் மாநாடு

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 14- மே பதினேழு இயக்கம் நடத்துகின்ற “தமிழ்த் தேசியப் பெருவிழா – 2025” நாளை மற்றும் மறுநாளில் (15, 16.3.2025) சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறுகின்றது.
15.3.2025 காலை 9 மணிக்கு சைதாப்பேட்டை மேட்டுப் பாளையம் வி.கே.எம்.மகாலில் தொடங்கும் அறிஞர் அவையம் – இரண்டாம் தமிழ் அறிவர் மாநாட்டை ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்து உரையாற்றுகின்றார். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ சிறப்புரையாற்றுகின்றனர்.
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நோக்கவுரையாற்றுகிறார். அறிஞர் அவையத்தில் “தமிழர் வாழ்வும் – வரலாறும்” என்கின்ற பொதுத் தலைப்பின் கீழ் பல்வேறு தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் பலரும் சொற்பொழிவு ஆற்றுவர்.
பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் அறிஞர் அவையத்தின் இரண்டாம் அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்துரையாற்றுவார். மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் மூன்றாம் அமர்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்துரை வழங்குவார். இவ்வமர்வுகளில் பல்துறை அறிஞர்கள், பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
16.3.2025 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் அறிஞர் அவையத்தின் நான்காம் அமர்வில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தொடக்க உரையாற்றுவார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்துரையாற்றுவார். தமிழ்ப் பேராசிரியர்கள் உரையாற்ற உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு எஸ்.டி.பி.அய். கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்துரை வழங்க மாநாட்டின் அய்ந்தாம் அமர்வு நடைபெறுகின்றது.
வீ.குமரேசன்
நிறைவாக 16.3.2025 அன்று மாலை 5 மணிக்கு சைதாப் பேட்டை தேரடித் தெருவில் நடைபெறும் தமிழ்த் தேசியப் பெருவிழாவிற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை வகிக்கின்றார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் பலவும் நடக்க உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *