பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலை) அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா– மகளிர் நாள் விழா!

Viduthalai
7 Min Read

தஞ்சை, மார்ச் 14 பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தில் (நிகர்நிலை) அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் நாள் விழா
10.3.2025 அன்று நடைபெற்றது.
விழாவில் எழுத்தாளர் கவின்மலர் பேசும் போது, ‘‘அன்னை மணியம்மையார் தொண்டறத்தாய். அவர் இயக்கத்தை மட்டும் வாழ வைக்கவில்லை; தமிழ்ச் சமூகத்தையே வாழ வைத்தவர். சர்ச்சை புதைக்குழிக்குள் அகப்பட்டாலும் மீண்டு வந்தவர். என்னுடைய பெற்றோர்களின் திருமணம் 1972 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்து -முஸ்லிம் மத மறுப்பு திருமணமாகும். மகளிர் நாள் என்பது 1910 ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். 1911 முதல் வேறு வேறு நாடுகளில் வேறு வேறு தேதிகளில் மகளிர் நாள் கொண்டாடப்பட்டது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டது. ஜார் மன்னன் வீழ்ந்தான். 1921 முதல் மார்ச் எட்டாம் தேதி மகளிர் நாள் கொண்டாடுவது என்பது உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிலை நிறுத்தும் நாள்!

இதனை இரா. ஜவகர் எழுதிய ‘மகளிர் தினம் -உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தில் காணலாம். உழைக்கும் பெண்களின் உரிமையை வெளிப்படுத்துவது மகளிர் நாள். ஆனால், மகளிர் நாளில் கோலப்போட்டி, அழகிப் போட்டி முதலியவற்றை நடத்தி மகளிர்நாள் நுகர்வோர் நாளாகிவிட்டது. புரட்சிநாள் பொழுதுபோக்கு நாளாகிவிட்டது. மகளிர் நாளின் தன்மை இதுவல்ல. ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிலை நிறுத்தும் நாள். உரிமை தினத்தை மலினப்படுத்தி விட்டார்கள். வியாபார உத்திக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மகளிர் நாளில் பேசுவதற்காகப் பல இடங்களுக்கு செல்கின்றேன். ஏராளமாக பெண்கள் மட்டும் கூடியிருக்கிறார்கள். தாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்பது பெண்களுக்கும் தெரியும். அவர்களிடம் மட்டும் பேசுவதால் விழிப்புணர்வு ஏற்பட்டு விடாது. ஆண்களிடம் பேச வேண்டும். ஆண் – பெண் பாகுபாடு என்பது எல்லா நிலைகளிலும் அமைந்திருக்கிறது.

பெண் உரிமைக்குப் பாடுபட்டவர்களில் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு!
பிறப்பு முதல் அனைத்து நிலைகளிலும் வேறுபாட்டைக் காணலாம். வீட்டில் சாப்பாட்டில் பாகுபாடு தொடங்குகிறது. விளையாட்டு இடத்தில் நடக்கின்றது. ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டமாக இருக்கிறது. ஆணுக்கு ஓர் அளவுகோல் பெண்ணுக்கு ஓர் அளவுகோல் ஆக இருக்கிறது. கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் டாக்டர் ஆவதற்கு எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டார். ஆண்கள் பள்ளிக்கூடத்தில் தனி ஒரு பெண்ணாக படித்தார். மாணவர்களுக்கிடையே திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருந்தது. எவ்வளவு ஏளனப் பேச்சுகள் இருந்திருக்கும். எதிர்ப்புகள் தொடர்ந்திருக்கும். இதுபோன்ற பெண்கள்தான் முன்னோடிப் பெண்கள் ஆவார்கள். பெண் உரிமைக்குப் பாடுபட்டவர்களில் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து பெரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எல்லாத் துறைகளிலும் பெண்கள் வர வேண்டும் என்று விரும்பினார். விளையாட்டிலும் கூட பெண்களுக்கென்று தனியாக சில விளையாட்டுகளை ஒதுக்கி வைத்திருந்தார்கள். இவைகளெல்லாம் பெண்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடியவைகள் ஆகும்.
பெரியார் கல்வி நிறுவனங்கள்

திரைப்படத்துறை மிகப்பெரிய துறை. அதில் உள்ள பெண் இயக்குநர்கள் என்று எடுத்துக் கொண்டால் வெறும் 15 பேர்கள் மட்டுமே. அவர்க ளும் கூட பெண்களுக்கு எதிரான காட்சிகளையே படமாக்குகிறார்கள். தொலைக்காட்சி நெறி ஆளுநர்களாக ஆண்கள்தான் இருக்கிறார்கள். வெள்ளை யாக இல்லாவிட்டாலும் அறிவுள்ள ஆண்களை நெறி ஆளுநராக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் அழகாக இருக்க வேண்டும் அப்போதுதான் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஊடகத்துறையில் இருப்பதால் நான் அறிவேன். செய்தி வாசிப்பாளராக ஒரு கருப்பு பெண்கூட இல்லை என்பதை நீங்கள் கவனியுங்கள். கணவன் அடித்து விட்டான் என்று துணிச்சலாக காவல் நிலையத்திற்கும் செல்ல முடியவில்லை. காவலர்கள் நீதியை நிலைநாட்டுவதை விட சமரசம் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.

நிர்பயா வழக்கின் தன்மையை நீங்கள் அறிவீர்கள். பாதிப்படைந்த பெண்ணின் மீதே எத்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்? இரண்டு பெண்களின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது. இரண்டு பெண்களும் இறந்து போகிறார்கள். பத்திரிகையில் ஒரு பெண்ணுக்கு மூன்று பக்கங்களில் படத்துடன் செய்தி வெளி வருகிறது. மற்றொரு பெண்ணுக்கு கால் பக்கம் தான். காரணம் கேட்டேன். அந்தப் பெண் அழகாய் இல்லை என்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.எல்லா இடங்களிலும் பொறுப்புகளில் பெண்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆண்களுக்கு 24 மணி நேரம் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு 12 மணி நேரம் மட்டும்தான். பெண்கள் அனைத்து துறைகளையும் கைப்பற்ற வேண்டும். எல்லாத் துறைகளிலும் ஊடுருவ வேண்டும்’’ என்று பேசினார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) இணைத் துணை வேந்தர்

இரா.மல்லிகா தம்முடைய தலைமை உரையில் ,

குறுகிய காலத்தில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்!
‘‘அன்னை மணியம்மையார் ஆளுமை மிக்க பெண்மணி. தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் வாழ வைத்த பெருமாட்டி. திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தது 5 ஆண்டுகள் மட்டுமே. குறுகிய காலத்தில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று சொன்னால் அதற்கெல்லாம் வித்திட்டவர் அன்னை மணியம்மையார். தந்தை பெரியார் அவர்கள் அளித்த சொத்து, தம்முடைய தனிப்பட்ட சொத்து, இயக்கத்தவர்கள் கொடுத்தது எல்லாவற்றையும் இணைத்து மணியம்மை கல்வி அறப்பணி கழகத்தை உருவாக்கினார். அந்த அறக்கட்ட ளையின் கீழ்தான் இப்போது கல்வி நிறுவனங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை பெரியார் திடலில் மிகச்சிறந்ததொரு நூலகம் -ஆய்வகம் செயல்பட்டு வருகின்றது .அதனை உருவாக்கிய பெருமை அன்னை மணியம்மையார் அவர்களையே சாரும்’’ என்று குறிப்பிட்டார்கள்.
பதிவாளர் சிறீவித்யா பேசும்போது, தைரியம், தன்னம்பிக்கை, துணிவு மூன்றின் கலவைதான் அன்னை மணியம்மையார் என்றார். தந்தை பெரியார் பெண் கல்வியை வலியுறுத்தினார். அன்னை மணியம்மையார் செயல்படுத்தினார். பிற கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மகளிர் நாள் விழாவில் பெண்கள் மட்டும்தான் கலந்து கொள்வார்கள்; ஆனால், நம்முடைய பல்கலைக்கழகத்தில் மகளிர் நாள் விழாவில் ஆண்களும் கலந்து கொண்டு, பெண் அடிமைப்பட்டிருக்கின்ற சூழலை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

இந்திரா கண்ணன் ஏற்புரையில், ‘விழுந்தால் எழுவோம்’ என்ற தத்துவமே எங்களை உயர்த்தி யிருக்கிறது என்றார். உழைப்பு மட்டுமே உயர்வை தரும், நேர்மறை சிந்தனை அவசியம் என்று வலியுறுத்தியவர், மனக்கட்டுப்பாடு அவசியம் என்றார்.
விழாவில், தொழில் முனைவோருக்கான , ‘டாக்டர் முத்துலட்சுமி விருது’ தஞ்சாவூர், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மேலாளர் டாக்டர் இந்திரா கண்ணன் அவர்களுக்கும்,
சமூக தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்குபவருக்கான, ‘அன்னை மணியம்மையார் விருது’ சுற்றுச்சூழல் அறிவியல் ‘விதையால் ஆயுதம் செய்வோம்’ ஒரத்தநாடு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு யாழினி அவர்களுக்கும்,
பெண்கள் தலைமைத்துவத்திற்கான ,‘வாழ்நாள் சிறப்பு விருது’ தஞ்சாவூர் – அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா அவர்களுக்கும்,
முன்மாதிரி சாதனையாளருக்கான ,‘மேரி கியூரி விருது’ பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவி வீரம்மாள் அவர்களுக்கும்,
‘கல்பனா சாவ்லா விருது ‘ என்.சி.சி. அதிகாரி மேஜர் விஜயலட்சுமி அவர்களுக்கும்,
சாதனையாளருக்கான, ‘சாவித்திரி பாஃபுலே விருது’ ஆண்டனி லில்லி புஷ்பம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ‘பெரியார் காண விரும்பிய பெண்ணுலகு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கும்ப கோணம், அரசினர் கலைக் கல்லூரி மாணவர் நிஜேந்தி ரன் முதல் பரிசினையும்,
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி இரண்டாம் பரிசினையும்,
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவி அபிராமி மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள்.
‘பெரியாரின் பெண்ணியப் புரட்சி’ என்ற தலைப்பில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி கனிமொழி முதல் பரிசினையும்,
தஞ்சாவூர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி மாணவர் பிரைசிங் ஜோஸ்வா இரண்டாம் பரிசினையும்,
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவி குணசீலி மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்குப் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) பதிவாளர் சிறீவித்யா முன்னிலை வகித்தார். பாடநெறி கல்விப் புல முதன்மையர் வயலட் ஜூலி வரவேற்புரை நிகழ்த்தினார். இளங்கலை இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவி சரோஜினி நன்றியுரை கூறினார். விழாவில் மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம் (நிகர்நிலை)-
இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 40 பேர் குருதிக் கொடை செய்தனர். அரசினர் மருத்துவக் கல்லூரிக்கு ரத்தம் வழங்கப்பட்டது.
முன்னதாக அன்னை மணியம்மையார் சிலைக்கும் , தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *