சிதம்பரம் நடராஜன் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜன் கோயிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து கனகசபைமீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக கூறி தீட்சிதர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர காவல்துறையில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் கோபி, வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டுபேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டுப் பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
சிதம்பரம் கோயில் என்பது ஏதோ தீட்சதப் பார்ப்பனர்களின் தனிச் சொத்து என்பது போல் செருக்கு வெறி தலையில் ஏற, ஆரியத் தாண்டவம் ‘தாம் தூம்’ என்று எகிறிக் கூத்தாடுகிறது. மற்றதற்கெல்லாம் நீதிமன்றத் தீர்ப்பு என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று சட்டத்தை மதிப்பவர்கள்போல கூச்சல் போடும் இந்தத் தீட்சதர்கள் கூட்டம், கனகசபைமீது ஏறி நின்று பக்தர்கள் நடராஜனைத் தரிசிக்கலாம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருந்தும், அதனை மதிக்காதது ஏன்?
சிதம்பரத்தில் தீட்சிதர்களின் வீடுகளில் குழந்தைத் திருமணங்கள் என்பது சர்வ சாதாரணம்; இது சட்டப்படி குற்ற செயலே! இதன்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக் கூடாது. நந்தன் நுழைந்தார் என்று கூறி கோயில் தெற்கு வாசல் கதவை இன்றுவரை முடி வைத்திருப்பதற்கும் முடிவு காணப்பட வேண்டும்.
சிதம்பரம் கோயில் வளாகத்துக்குள் கிரிக்கெட் விளையாடுகின்றனர் தீட்சிதர்கள். இவை எல்லாம் தீட்சிதர்கள் கூறும் எந்த ஆகமத்தில் அனுமதிக்கப்படுகின்றன.
எந்தக் காலத்தில் எந்தக் கிறுக்கரோ எழுதி வைத்தது எல்லாம் சட்டமா? மாற்றம் என்பதுதான் மாறாதது! தீட்சிதர்களை வெளியேற்றி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை சிதம்பரம் நடராஜன் கோயிலிலும் முதல் கட்டமாக நியமித்தாலே – தீட்சிதர்களின் கொட்டம் ஒடுங்கும். அரசு ஆவன செய்யும் என்றும் எதிர்பார்க்கிறோம்.