திருவள்ளுர், மார்ச் 13 மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:
நாடாளுமன்றம் துவங்கியதும் 10.03.2025 அன்று, கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தமிழர்களை ‘‘ஜனநாயகமற்றவர்கள் மற்றும் நாகரிகமற்றவர்கள்’’ என்று அழைத்தார்.
பின்னர் மறுநாள் 11.3.2025 அன்று நாடாளுமன்றத்தில், பாஜக ஜார்கண்டைச் சேர்ந்த எம்.பி நிஷி காந்த் துபே ‘‘சமஸ்கிருதம் தமிழை விட பழைமையானது தமிழ்நாடு கோவில்களில் சமஸ்கிருதத்தில் பூஜை செய்யப்படுகிறது’’ என்று கூறினார்.
அதன் பிறகு 12.3.2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் கல்வித்தரம் மோசமாக உள்ளது. தமிழை காட்டுமிராண்டி என்று இகழ்ந்த பெரியாருக்கு சிலை வைத்துள்ளீர்கள். எங்கு பார்த்தாலும் அரசு அலுவலகங்களில் அவர் படம் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பாஜகவினரின் தமிழர் வெறுப்பு உச்சத்தை அடைந்துவிட்டது
‘‘தமிழை நீச பாஷை’’ என்றும் ‘‘சமஸ்கிருதத்தை தேவ பாஷை’’ என்றும் உண்மையில் யார் அழைத்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.
உண்மையில் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் (யுபிஎஸ் சி) மற்றும் சிவில் சர்வீஸ் பணிக்கான ஒன்றிய அரசு தேர்வு(சிஎஸ்டி) போன்ற தேர்வுகளில் வேண்டுமென்றே தமிழ்நாட்டு இளைஞர்கள் திட்டமிட்டு புறக்கணிப்பப்படுகிறார்கள் என்ற எனது தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்த முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் உள்ள, உங்கள் கட்சி பிரமுகர்களாவது தெளிவுபடுத்துவார்களா?
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்கள் மற்றும் தமிழை இழிவுபடுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்