வெளி மாவட்டங்களில் இருந்து பணிபுரிய வரும் பெண்கள் ‘தோழி விடுதி’களில் தங்கிட முன்பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 13 வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணிபுரியும் பெண்கள், தமிழ்நாடு அரசின் ‘தோழி விடுதி’களில் தங்கி பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் பெண்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் ‘தோழி விடுதிகள்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதியின் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சார்பில் சென்னை அடையாறில் ‘தோழி விடுதி’ அமைக்கப்பட்டது. இதில், 98 படுக்கைகள், 24 மணிநேர சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு, இலவச இணைய சேவை, காற்றோட்டமான அறைகள், சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

முன்பதிவு செய்யலாம்

மாத வாடகையாக ரூ.4,200 முதல் ரூ.6,850 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ‘தோழி விடுதி’யில் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் தங்க விரும்பும் பெண்கள், https://www.tnwwhcl.in/ என்ற இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499988009, 9445724179 என்ற அலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னையைப் போலவே கோவை, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ‘தோழி விடுதிகள்’ செயல்பட்டு வருகின்றன. மேலும், காஞ்சிபுரம், கரூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் உள்பட 9 நகரங்களில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற
15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு

சென்னை,மார்ச் 13 பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (12.3.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை ((PM YASASVI Postmatric Scholarship For OBC’s, EBC’s & DNT’s Students) பெறுவதற்காக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்கள் (https://umis.tn.gov.in) கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரை வரவேற்கப்பட்டன.

15ஆம் தேதி வரை நீட்டிப்பு

தற்போது மாணவர்களின் நலன் கருதியும், கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள எந்த மாணவரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டும் கல்வி உதவித்தொகைக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது. காலஅவகாச நீட்டிப்பு விவரத்தை மாணவர்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து கல்வி நிலையங்களின் முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோல், மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு
செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஒப்பந்தம்

 

சென்னை, மார்ச் 13 அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ‘ரிலையன்ஸ்’ குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வா்த்தக வலைதளங்கள் மூலம் ஸ்பேஸ்-எக்ஸ் தங்களின் ஸ்டார்லிங்க் இணைய சேவை மற்றும் அதற்கான உபகரணங்களை விற்பனை செய்வதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய கைப்பேசி தொலைதொடா்பு நிறுவனமான ஜியோவும் உலகின் முன்னணி செயற்கைக்கோள் இணையசேவை நிறுவனமான ஸ்டார்லிங்க்கும் இணைந்து இந்தியாவின் மிகவும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் நம்பகமான இணைய சேவைகளை வழங்கும்’ என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *