எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

viduthalai
1 Min Read

மதுரை, மார்ச் 13 எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவந்து 57 ஆண்டுகளாகியும், எந்த மாநிலத்திலும் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு தேசிய சராசரியைவிட சிறப்பான நிலையை அடைந்துள்ளது.

தோல்வி அடைந்த கொள்கை

முற்றிலும் தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. வெற்றி அடைந்த நமது மாடலை எடுத்துவிட்டு, தோல்வியடைந்த மாடலை பின்பற்றச் சொன்னால் என்ன அர்த்தம்? அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியிருந்தால் மூன்றாவது மொழியே தேவைப்படாது. 2-ஆவது மொழியாக ஆங்கிலத்தை ஒழுங்காகக் கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்.

அதிகாரமில்லை

எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. 2-ஆவது மொழியைக் கற்றுத்தர முடியாதவர்கள், 3-ஆவது மொழியைப் படிக்கச் சொன்னால் ஏற்க முடியுமா? இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *