பிற இதழிலிருந்து…நீதிபதியின் தீர்ப்புகள் ஆண்டவனின் கட்டளையா?

Viduthalai
9 Min Read

ஒருவர் நீதிபதி ஆவது தெய்வத்தின் விருப்பமா?
கே.சந்துரு
(ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி)

நீதிபதிகள் எழுதக்கூடிய தீர்ப்புகள் மனித மூளையில் உருவானவையே, தீர்ப்புகளில் பிழை இருந்தால் திருத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளில் மக்கள் விரோதப் போக்கு இருந்தால் அவற்றின் ஆதாரத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். எனவே, பிழையுற்ற மனித செயல்களுக்கு தெய்வாம்சம் கற்பிக்காமல் பணிபுரிவதே அவர்களின் பதவிகளுக்கு அழகு!

நான் வழங்கிய அந்தத் தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வில் (2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) ரத்து செய்யப்பட்டது. அதை ரத்து செய்யுமாறு அந்த நீதிபதிகளுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.
நீதிமன்றங்களுக்குள் கடவுள்கள் அதிகம் வரத் தொடங்கிவிட்டார்கள். கடவுளின் பெயரில் வழக்குகள் தொடரப்படுகின்றன. கடவுள் சத்தியமாக சாட்சியம் அளிக்கப்படுகிறது. இவற்றைத் தாண்டி, கடவுள் தீர்ப்புகளையும் எழுதத் தொடங்கிவிட்டார். ராமர் கோயில் வழக்கில், இளம் ராமரே வாதியாக (பாலராம விரஜ்மான்) இருந்தபோதும், அந்த தீர்ப்பை எழுதுவதற்குப் பிடிபடாமல் இருந்த நிலையில், கடவுளை பிரார்த்தித்ததன் விளைவாக, தன்னால் தீர்ப்பை எழுத முடிந்தது என்று மேனாள் தலைமை நீதிபதி தனஞ்செய் சந்திரசூட் கூறினார். அவ்வாறு அவர் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவர் மட்டுமா கடவுளின் ஆசி பெற்றவர்? சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சொக்கலிங்கம் தன் உரையொன்றில், தான் 28 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்த காலத்தில் கொடுத்த சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகளை முருகக் கடவுள்தான் எழுதினார் என்று குறிப்பிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மதுரை திருநகரில் தேவர் நினைவு மண்டபம் அமைப்பதற்கான நிலக் கையெடுப்பை எதிர்த்து ஒரு கல்வி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு என் முன்பு விசாரணைக்கு வந்தது. தேவர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு ஜாதி வட்டத்திற்குள் அடைத்துவிடாமல், அவருக்கு நினைவுச்சின்னத்தை அரசே அமைத்து பராமரிப்பதுதான் உரிய மரியாதை என்று சொல்லி அதற்கான நிலக் கையெடுப்பு சட்டப்படி சரியானது என்று தீர்ப்பு வழங்கினேன்.

சிறப்புக் கட்டுரை

மறுநாள், அது குறித்த செய்தி இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது (ஜூலை 2007). அன்றைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, என் எதிரே ஒரு நீதிபதி வந்துகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன், அந்த செய்தியைப் படித்ததாகவும், அது ஒரு சிறப்பான தீர்ப்பு என்றும் குதூகலத்துடன் அவர் குறிப்பிட்டார். மேலும், ‘‘சகோதரரே, அந்த தீர்ப்பை நீங்கள் எழுதவில்லை. அவன் சொல்கிறான், அதை நீங்கள் செய்கிறீர்கள்’’ என்றார்.
அவரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்டேன். ‘‘தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யும்போது, அதை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தால், அந்த உத்தரவைப் பிறப்பிப்பது யார்?” என்பதுதான் நான் கேட்ட கேள்வி. அதைக் கேட்டு அந்த நீதிபதிக்கு கோபம் வந்து, என் கையை உதறிவிட்டு, ‘‘உங்களையெல்லாம் யார் காப்பாற்றுவார்கள்?’’ என்று சொல்லிவிட்டு, விருட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டார்.

நான் வழங்கிய அந்தத் தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வில் (2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) ரத்து செய்யப்பட்டது. அதை ரத்துசெய்யுமாறு அந்த நீதிபதிகளுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.
சாய்பாபாவின் தீவிர பக்தராக இருந்து, 42 ஆண்டுகளுக்கு மேல் தன்னைச் சட்ட சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் புகழ்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி. அவர், சாய்பாபாவின் மறைவிற்குப் பிறகு ஒரு பேட்டி அளித்தார். அதில், தனது அனைத்து தீர்ப்புகளையும் எழுதி வழிகாட்டியது பகவான் சத்ய சாய்பாபாதான் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.
கோயில்களின் மரபு சார்ந்த வழிபாட்டு வழக்கு முறைகளுக்கு குறுக்கீடு வரும்போதோ, அவற்றை மரபு மீறி மாற்றும்போதோ, சில வழக்குகள் நீதிமன்றங்களில் கதவைத் தட்டும் சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடகலை சம்பிரதாயமா, தென்கலை சம்பிரதாயமா என்ற கேள்வி எழுந்தது. சிறீவில்லிபுத்தூர் உரிமையியல் நடுவர் மன்றமும், மேல்முறையீட்டை விசாரித்த மாவட்ட நீதிமன்றமும், இந்தச் சம்பிரதாயங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல… கடவுளின் சந்நிதானத்தின் முன் அனைவரும் சமமே என்ற பொது தத்துவத்தின் அடிப்படையில் உரிமையியல் வழக்கை முடிவு செய்தனர்.

சிறப்புக் கட்டுரை

அந்தத் தீர்ப்புகளுக்கு எதிரான இரண்டாம் மேல்முறையீட்டை நான் விசாரித்தேன். நாச்சியார் திருக்கோயில் தென்கலை சம்பிரதாயத்தைச் சேர்ந்தது என்றும், அதை எவரும் மாற்ற முடியாது என்றும், வைணவ பிரிவில் வடகலை/தென்கலை பிரிவுகளுக்குள்ள அடிப்படை வேறுபாடுகள் என்ன என்பதையும் விளக்கி நீண்டதொரு தீர்ப்பு அளித்தேன் (2011). சிறீரங்கத்தில் இருந்த மேனாள் தொலைபேசி கழகத்தலைவர் எஸ்.ராஜகோபாலன் அந்தத் தீர்ப்பை சிலாகித்து கடிதம் எழுதியிருந்தார். அவர், எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர். ரங்கநாதரே என்னுடைய சிந்தனைகளுக்குள் புகுந்து தீர்ப்பு எழுத வழிகாட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
வடலூரில் வள்ளலார் துவக்கிய சத்திய ஞான சபையில் கடவுளின் உருவச்சிலையை வைத்து ஆகம விதிப்படி வழிபாடு நடத்த உரிமை கேட்டு, சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் அறநிலையத்துறை அதி காரிகளிடம் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த அறநிலைய இணை ஆணையர், மனுவை தள்ளுபடி செய்ததுடன், சத்தியஞான சபையில் உருவ வழி பாட்டிற்கு வழியில்லை என்று கூறியிருந்தார். அதை எதிர்த்து அந்த சிவாச்சாரியார் தொடுத்த வழக்கை நான் விசாரிக்க நேர்ந்தது, வள்ளலாரின் தத்துவம் என்ன என்று அறிந்துகொள்ள அந்த வழக்கு வாய்ப்பளித்தது.

வள்ளலாரின் தத்துவப் பின்புலத்தை விரிவாக எடுத்துக் கூறியதுடன், ‘‘ஜாதியும், மதமும், சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெரும்சோதி’’ என்ற பாடலை மேற்கோள் காட்டி வள்ளலாருடைய ஆறாம் திருமுறை மட்டுமே அவருடைய உண்மை யான தத்துவமாக இருக்க முடியும் என்று கூறி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தேன் (2010). சக்தி தீபாவளி மலரில் எழுதிய பேரா. வை.நமசிவாயம், ‘‘வடலூர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் படித்தபோது, அந்தத் தீர்ப்பு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பு அல்ல… அவருடைய சரீரத்திற்குள் புகுந்து வள்ளலாரே வழங்கிய தீர்ப்பு என்று வடலூர் இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி திரு.கிருஷ்ணகுமார் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்தவர் பலர்” (2013) என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்னமும் சில நீதிபதிகள் தாங்கள் அளிக்கும் தீர்ப்புகள் தெய்வத்தின் கட்டளை என்று நம்புவதுடன், அதை ஊடகங்களிலும் பதிவு செய்கிறார்கள்.
சிறப்புக் கட்டுரை

தாங்கள் நீதிபதியாக ஆனதற்கு காரணமே கடவுளின் விருப்பம்தான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்ட நீதிபதி டி.எஸ்.அருணாசலம், தான் தொடர்ந்து நீதிபதியாக பணியில் இருக்கவேண்டுமா என்ற முடிவை அவருக்கு சூசகமாக தெரிவித்தது துவாரகை கோயில் மூலவரான கிருஷ்ணர் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும், தான் வழக்குரைஞராகப் பணி யாற்றிய போது கொலைக்குற்றம் புரிந்த குற்ற வாளிக்கு (அவ்விஷயம் தெரியாமலேயே) தனது வாதத்திற மையால் விடுதலை பெற்றுத் தந்ததாகவும், அந்தக் குற்றவாளி சில மாதங்களிலேயே ஒரு பேருந்து விபத்தில் மரணமடைந்தது, அந்தக் குற்றவாளிக்கு தெய்வமளித்த தண்டனை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தேவதூதர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்ளாமல் சட்டத்தின்படி தீர்ப்பு சொல்லவேண்டிய நீதிபதிகளே கோயில் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் குற்றங்களைத் தடுத்து உடனடி தண்டனை வழங்க வேண்டுமென்று நீதிமன்றங்களையே அந்த இடங்களுக்கு நகர்த்திச் சென்று நீதிபரிபாலனம் செய்யும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பல உண்டு.

திருச்செங்கோடு வட்டத்திலுள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தன்று தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க, திருவிழாக் கால சிறப்பு நீதிமன்றத்தை காளிப்பட்டி யிலேயே நடத்தும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர், காளிப்பட்டிக்கு வந்து சிறப்பு முகாம் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து உடனடி தீர்ப்பு வழங்கி வருகிறார்.
நாமகிரிப்பேட்டையை அடுத்த ஆர்.புதுப்பட்டி யில் துலுக்க சூடாமணியம்மன் கோயில் தேர்த்திரு விழாவின்போது ஏற்படும் குற்றச்செயல்களை விசாரிக்க, விழா நாட்களில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் ஆர்.புதுப்பட்டியிலேயே செயல்படும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே விழாக்கால நீதிமன்றம் செயல்படுகிறது. திருவிழாக்கள் நடைபெறும் இடங்களுக்கே சென்று நீதிபரிபாலனம் செய்தது போக, மக்கள் தெய்வங்களின் சன்னதிகளிலேயே தங்கள் வழக்குகளை தீர்த்துக்கொள்ள தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளன.
சிறப்புக் கட்டுரை

கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குத் தீர்ப்பளிக்கும் இடமாக வெட்டுடையார் காளிகோவில் உள்ளது. இரு தரப்பினரும் வந்து அம்மனிடம் சத்தியம் செய்ய வேண்டும். தவறு இருக்கும் தரப்பினர் பாதிக்கப்படுவது உறுதியென நம்பப்படுவதால் தமது தவறை ஒப்புக்கொண்டு விடுவர். தாங்க முடியாத தொல்லை கொடுக்கும் எதிரிகளைக் கட்டுப்படுத்துமாறு வேண்டி இங்கு காசுவெட்டிப் போட்டால் அம்மன் எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார் என்று நம்புகிறார்கள். அதனால், தகராறு வந்தால் ‘‘கொல்லங்குடி போய் காசு வெட்டிப் போட்டுடுவேன்’’ என்றாலே அஞ்சுவர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவமோ விசித்திரமானது. கொங்கு மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழியர்கள், அதிகாரிகள் தங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பயனில்லாமல் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலிலுள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து முறையிட்டனர்.

நீதிக்கல்லில் மிளகாயும் அரைக்க வேண்டாம், கொல்லங்குடியில் காசு வெட்டியும் போடவேண்டாம். நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக வரவேண்டுமென்று வேண்டிக்கொள்வதற்கும் ஒரு கோயில் இருக்கிறது. அதுதான் காஞ்சிபுரத்தில் காந்தி சாலையிலுள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தலைசிறந்த வழக்குரைஞர்களை எல்லாம் வைத்து திறமையாக வாதாடிய பின்னரும் தீர்ப்பு எப்படியிருக்குமோ என்ற அச்சத்தில் கோயிலுக்கு வரும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தினமும் கூடிக்கொண்டே வருகிறது.
வழக்காடிகளின் கடைசிப் புகலிடமாக மாறிவிட்டதோடு, வழக்கின் தீர்ப்பை இறுதியில் முடிவு செய்பவர் வழக்கறுத்தீஸ்வரர்தான் என்று சிலர் நம்புவது விந்தையிலும் விந்தை! தற்போதைய நீதிமன்றங்கள் தெய்வாம்சம் பொருந்தியவை அல்ல. தற்போது நீதிபதிகளாக உள்ளவர்கள் அரசர்களின் நீதி அதிகாரத்தைப் பெற்ற வாரிசுகளும் அல்ல. நீதிமன்றங்கள் சட்டத்தின்படியே தமது தீர்ப்புகளை வழங்கக் கடமைப்பட்டவை. நீதிமன்றங்களில் புகுந்துவிட்ட லஞ்சக் குற்றச்சாட்டுகளை நன்கே அறிந்த மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை கைக்கூலி பெறும் நீதிபதிகளை பாலியல் தொழி லாளர்களைவிட இழிந்தவர்கள் என்று தனது பாட லொன்றில் பதிவுசெய்திருக்கிறார்.
‘‘கடையனும் வேசையினும் கைக்கூலி பெறுவோன்
காசதி கந்தனைக் கருதி வாதந் தீர்த்து
ஏசுற ஏழைகட் கிடர்செய் வோன்தனம்
மீசரங் குறைவுபா ராது மேலிடுந்
தாசிய ரினுமிழி தகவு ளானன்றோ’’
-என்பதுதான் அந்தப் பாடல்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஒருவர், காவலர் ஒருவரின் ஊர்மாற்றத்தை ரத்து செய்வதற்கான காரணம் இல்லை என்றாலும், தன்னுடைய கர்மவினையினால் தலையிட வேண்டியுள்ளது என்று கூறி தீர்ப்பளித்திருந்தார். அதை எதிர்த்து காவல்துறை தொடுத்த மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‘‘நம்மை நடத்திச்செல்வது அரசமைப்புச் சட்டமே ஒழிய, கர்மவினைச் செயல்கள் அல்ல’’ என்று கூறி தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்றைக்கு நியமிக்கப்படுவோர் அனைவரும் அரசமைப்புச் சட்டத்திலுள்ள ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்பால் பற்றுறுதியுடன், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிப்பேன். மேலும், உண்மையோடு எனது அறிவு, திறனுடன் தீர்ப்புகளில் பயமோ அல்லது சார்புத்தன்மையோ புத்தன்மையோ இன்றி, ஈர்ப்பு அல்லது காழ்ப்புணர்வோ இன்றி அரசியல் சட்டத்தைத் தூக்கிப்பிடிப்பேன்’ என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பின்னர்தான் பணியாற்ற முடியும்.
நீதிபதிகள் எழுதக்கூடிய தீர்ப்புகள் மனித மூளையில் உருவானவையே, தீர்ப்புகளில் பிழை இருந்தால் திருத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளில் மக்கள் விரோதப் போக்கு இருந்தால் அவற்றின் ஆதாரத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். எனவே, பிழையுற்ற மனித செயல்களுக்கு தெய்வாம்சம் கற்பிக்காமல் பணிபுரிவதே அவர்களின் பதவிகளுக்கு அழகு!

நன்றி: ‘விகடன்’, 9.3.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *