பெ. கலைவாணன்
திருப்பத்தூர்
இந்த மானுட சமூகத்தின் பால் அன்புக் கொண்டு, மனிதர்கள் அனைவரும் அனைத்து நிலைகளிலும் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்றெண்ணி, தன் வாழ்நாள் முழுவதும் தொண்டற வாழ்க்கையை வாழ்ந்து உருவத்தால் மறைந்தாலும் அவர்தம் சிந்தனையால் நம் உள்ளத்தில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை பெரியார். அந்த மாமனிதருடன் இணைந்து தமிழ் சமூகத்திற்காக தொண்டு செய்த என்றும் நம் நினைவில் வாழும், தன்னை எந்நிலையிலும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத அன்னை மணியம்மையார்.
அவருடைய வாழ்வியல் முறையை அவரின் தாயுள்ளத்தை இன்றைய பெண்களும் இத் தமிழ்ச் சமூகமும் கற்க வைக்க வேண்டும். ஒவ்வொரு பெண்களும் நாம் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்னை எத்தகைய தியாக வாழ்க்கையை, போராட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை உணர்ந்தால், பெண்கள் தம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள், தடங்கல்களை எல்லாம் எதிர் கொண்டு பயணிக்க அன்னையாரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக அமையும். திராவிட மாடல் அரசு அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடதிட்டத்தில் கொண்டுவந்தால் மிகப் பெரிய தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியில் உருவாக்க முடியும்.
அன்னை ஈ. வெ. ரா. மணியம்மையார்
விளம்பரமே விரும்பாத ஒரு மாபெரும் இயக்கத் தலைவர் உலகிலேயே ஒருவர் உளர் என்றால் அவர் அன்னை மணியம்மையாரே !
எப்போதும், எதிலும் தன்னை முன்னி லைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசையும் கர்வமும் கொள்ளாதவர். தந்தை பெரியார் மறைவுக்கு பின்னும் தன் ஒளிப்படம் எங்கும் வெளிவர வேண்டும் என விரும்பியதே இல்லை. அய்யா மறைந்த பின் தன் படப் பிரதிகள் எல்லாவற்றையும் கொண்டு வரச் செய்து அவற்றை எல்லாம் நொறுக்கி விடச் செய்தவர்.
தன் முகம் முக்கியமில்லை – நான் செய்யும் செயல் தான் முக்கியம் என்று தந்தை பெரியார் என்னும் மெழுகுவர்த்திக்கு திரியாக இருந்து தன்னை எரித்துக் கொண்டு திராவிடம் என்ற மானுட சமத்துவ தத்துவத்தை இந்த சமூகத்தின் மீது வெளிச்சமாக பாய்ச்சியவர் அன்னையார்.
உலகில் எவரும் எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் சமுதாயத் தொண்டாற்றிய தந்தை பெரியாருக்குத் தொண்டு புரிவதே தன் ஒரே பணி என்று இளமையைத், தன் வாழ்வைத் துறந்த ஒரே பெண்மணி அன்னையார்.
பால் நினைந்து ஊட்டிப் பேணிக் காக்கும் தாய் போலப் பெரியாரின் உடல்நலனைக் காத்து, அதன் பயனாய் பொது வாழ்வில் தந்தை பெரியாரின் தொண் டுகள் 95 ஆண்டுகள் நீட்டிக்க வழி வகை செய்தவர் அன்னையார்.
தந்தை பெரியார் அவர்கள் அன்னையாரை பற்றிக் கூறும் போது. இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறேன் என்றால் இந்த அம்மாவால் தான் என்பது யாருக்கும் தெரியாது. என் உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படி கொடுப்பது. உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மா தான் . இவர் தான் என் அம்மா என்பார்.
“தந்தை பெரியாருக்கு அம்மா எனில் நம் அனைவருக்கும் அம்மா தானே!”
அறிஞர் அண்ணா அம்மையாரைபற்றி கூறும்போது, அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது இப்போது எனக்கு என்ன வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்போது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று கூறினார். இப்படியான அம்மையாரின் தியாக வாழ்க்கை.
தன் முகத்தை பராமரிக்க சில ஆயிரங்கள், கூந்தலை பராமரிக்க ஆயிரங்கள். ஏன்? தன் நகத்தை பராமரிக்க கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் பெண்கள் மத்தியில், நகை அணிகலன்களை காது, மூக்கு, கழுத்து என எதுவுமே அணியாமல், விலை உயர்ந்த பட்டாடை அணியாமலும் தன் இளமைப் பருவத்திலும், வாழ் நாள் முழுவதும் கருப்பு சேலை வெள்ளை ரவிக்கை அணிந்து மிக மிக எளிமையாக, எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அன்னையார். (இன்றைக்கு ஒரு சவரன் தங்கம் விலை ஒரு இலட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.)
‘‘தந்தை பெரியார் அவர்களின் தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி – அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு – அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன்’’ என்பார் அன்னையார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தாயாக விளங்கியவர் . அவ் விடயத்தில் அன்னை தெரசா அம்மையாரின் முன்னோடி எனலாம். தந்தை பெரியாருக்கு அவர் தாய்தான், தாரம் அல்ல.
நம் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் தாய் அவர். அதனை அவரே , “தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்” என்று உணர்ச்சி மிகுந்து குறிப்பிடுவார் ஆசிரியர் அவர்கள். அவர் பெற்ற தாயை மிகச் சிறிய வயதில் இழந்தவர். அவரை போன்ற தாய் அன்பிற்கு ஏங்கியவர்களுக்குத் தாய் என காட்சி அளித்தவர் அன்னையார்.
தியாகச் சுடர் அன்னையார் குறித்து
புரட்சிக் கவிஞரின் புகழுரை இது.
‘‘காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு. அது பெரியாரின் பெருந்தொண்டுக்கு அருமருந்து. இப்படி பெரியாருக்கு அருமருந்தாக அய்யா வாழ தன் துடிக்கும் இளமையைப் ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?’’ என்று புகழுரைக்கிறார் புரட்சிக் கவிஞர்.
அன்னை மறைவின் போது
கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதிய கவிதை வரிகள்.
‘‘அம்மா மறையவில்லை – அய்யா
இலட்சியம் சாகவில்லை
அம்புவிமீதினிலே அவர்
பாதையை நாம் தொடர்வோம்
அம்மா என்ற சொல்லினிலே – அன்பின்
ஆறுபாயுதடா
அம்மா என்ற சொல்லினிலே – அய்யா
உருவம் தெரியுதடா
தியாகத் திரு உருவம் – தந்தை
ஆயுளின் இரகசியம்
தீயில் மெழுகாம் – இந்தத்
தாயின் கதையடா!
போராட்ட குணமடா – நெஞ்சம்
புலி வாழும் குகையடா
ஈரோட்டு எரிமலையில் – பூத்த
எழுச்சியின் சின்னமடா!
அம்மா மறையவில்லை’’
பிறவிப் பேதம் என்கிற போது உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதிப் பிரிவு மட்டும் அதில் அடங்கவில்லை. ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற பிறவி பேதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் தந்தை பெரியார் – அவர் வழியில் அன்னை மணியம்மையார் – அதே வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் – இவர்கள் வழியில் மானுட சமத்துவத்தை நோக்கி நாமும் பயணிப்போம். அன்னை பிறந்த நாள் அதை தொடர்ந்து நினைவு நாளில் பிறவிப் பேதம் ஒழியும் வரை நாம் அனைவரும் போராடுவோம் என்று உறுதி ஏற்போம்.