சென்னை,மார்ச் 11- மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.
திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 9.3.2025 அன்று ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அண்ணா அறிவாலய வளாகத்தில் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:
ஒன்றிய அரசின் இப்போதைய கூற்றுப்படி தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எட்டு மக்களவைத் தொகுதிகள் வரை குறையும் வாய்ப்புள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வாா்.
மிகப் பெரும் அபாயம்
தொகுதி மறுசீரமைப்பால், தென்மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு தீா்மானமோ, சட்டத் திருத்தமோ வரும்போது தென்மாநிலங்களின் குரல் நலிந்ததாக இருக்கும்.
தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ள நிலையில், அதற்கான வழிமுறைகளை அவா் விளக்கவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதலமைச்சர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒத்திவைப்புத் தீா்மானம் அளிப்பதுடன், நேரமில்லாத நேரத்திலும் பேச முயற்சிப்போம்.
தென்மாநிலங்களின் எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்போம். இதில், ஒன்றிய அரசு எத்தகைய தீா்வை வைத்திருக்கிறது என்று கேட்போம்.
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துடன்தான் உள்ளன. எனவே, கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கருத்து வேறுபாடு இல்லாமல் எங்களுடன் ஒத்துழைக்கும் என்றாா் அவா்.