சென்னை,மார்ச் 10- 1500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
இந்த திட்டம் உச்ச மின்தேவையின் போது தனியார் மின்சார கொள்முதலை தவிர்க்க உதவும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசார் எரிசக்தி ஆதாரங்கள் மூலமாகவும், சூரிய சக்தி, காற்றாலை, புனல் மின் நிலையங்கள், நீரேற்று மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.
மேலும் தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை மின்உற்பத்தி நிறுவனத்தையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தி உற்பத்தியை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நோக்கில் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் எனும் அளவு மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சேர்த்து வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகளான நீரேற்று மின் திட்டங்கள், மின்கல சேமிப்பு திட்டங்கள், உயிரி ஆற்றல் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மின் சேமிப்பு அமைப்புகள்
இந்நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை உருவாக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 1500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
இந்த திட்டம் மூலம் உபரியாக உள்ள மின்சாரத்தை சேமித்து மின் தேவை அதிகமாக உள்ள நேரங்களில் பயன்படுத்த முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் துணை மின்நிலையங்களில் இந்த மின்கல சேமிப்பு அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மின்கல சேமிப்பு அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை அடையாளம் காண 1,091 துணை மின்நிலையங்களில் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மின்கல சேமிப்பு அமைப்புகளுக்கு பெரிய இடம் தேவைப்படும். ஒரு மெகாவாட் திறன் கொண்ட அலகு அமைப்பதற்கு நான்கு முதல் அய்ந்து ஏக்கர் நிலம் தேவைப்படும்.
இதற்கான இடம் கிடைப்பது சவாலாகவே உள்ளது. மின் பகிர்மான கழகங்கள் உச்ச நேர மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றன, உச்ச நேரங்களில் தேவையை பூர்த்தி செய்ய தனியார் மின்சார கொள்முதலை நம்பி இருப்பதை குறைக்க இதுபோன்ற வசதிகளை திட்டமிடுவது இதுவே முதன்முறை என்றார்.