சேலம், மார்ச் 9- சேலம் அருகே சாய்பாபா கோவிலில் அய்ம்பொன் சிலைகள், உண்டியல் பணம் உள்ளிட்டவை கொள்ளை போயின.
சேலம், அயோத்தியாப் பட்டணம், மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையோரம் சாய்பாபா, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் 7.3.2025 அன்று இரவு, 11:30 மணிக்கு பூட்டப்பட்டது.
காலை, 6:00 மணிக்கு, மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூஜாரி பிரபாகர், 35, கோவிலை திறக்க வந்தார். அப்போது, அய்ம்பொன் சாமி சிலைகள் கொள்ளைபோனது தெரிந்தது. அவர் புகாரின்படி அம்மாபேட்டை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவிலில், அரை அடி உயரத்தில் இருந்த, விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், துர்க்கை, வாராகி அம்மன் ஆகிய, அய்ந்து அய்ம்பொன் சிலைகள் கொளையடிக்கப்பட்டுள்ளன. தவிர 1.5 அடி உயரத்தில் இரு அய்ம்பொன் வேல்கள், இரு மணிகள் மட்டுமின்றி, உண்டியலும் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போயுள்ளது.
இருவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கேமராவில் பதிவாகியுள்ளது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்று கூறினர்.