சென்னை,மார்ச் 9- சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்
.
கூடுதல் ரயில் பாதை
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, எழும்பூர் – கடற்கரை வரை 4-ஆவது பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பேரில், 4-ஆவது பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, 4-ஆவது பாதை அமைக்கும் பணி ரூ.274.20 கோடி மதிப்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணி காரணமாக, கடற்கரை – சிந்தாரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ரயில் பாதை பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. பணியை முடித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
பணிகள் நிறைவு
பின்னர், நிலத்தைப் பெற்று, பணிகள் மீண்டும் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதேநேரம், தண்டவாளம், சிக்னல் அமைப்பு மற்றும் மின்சாதனம் நிறுவுதல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தற்போது 100 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில், இப்பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தலைமை பொறியாளர் சோதனை:
கடற்கரை – எழும்பூர் இடையே 4-ஆவது பாதை அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது, மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதை ஆகும். இந்த ரயில் பாதையை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையரை அழைக்க உள்ளோம்.
அவர் இப்பாதையை ஆய்வு செய்து, ஒப்புதல் கொடுப்பார். அதன்பிறகு, ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும். இதன்மூலமாக, அதிக ரயில்களை இயக்க முடியும்.
இதற்கிடையே, இப்பாதையில், தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் தொடர்ந்து, சோதனையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், சரி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.