திருப்பத்தூர், மார்ச் 8 ஆதிதிராவிடா் மற்றும் பழங் குடியினா் தாட்கோ மூலம் உணவக மேலாண்மை (ஹோட்டல் மேனேஜ்மெண்ட்). கல்வி கற்கலாம்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு பி.எஸ்சி., (விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிா்வாகம்) 2 ஆண்டு முழு நேர பட்டப் படிப்பும், ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பும், 10-ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞா் ஆகிய படிப்புகள் சோ்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பயிலலாம். இதற்கு 10, 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான செலவுகள் தாட்கோவால் ஏற்கப்படும். இந்தப் படிப்பினை முடிக்கும்பட்சத்தில் திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி தெரிவித்தார்.