‘‘மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்கப்பட முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும் அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாய் ஒத்துழைக்கக் கூடாதென்று வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார். தந்தை பெரியார் (‘விடுதலை’ 4.4.1968).
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறிய இந்தக் கருத்தை ஒவ்வொருவரும் கண்ணில் படும்படி வீட்டில் எழுதி வைத்துத் தொங்கவிட வேண்டும்.
குறிப்பாகப் பார்ப்பனர்கள் நம் மக்களைச் சிந்திக்க விடாதபடி, பக்தி என்னும் மயக்க மருந்தை ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியிலும், பருக்கையிலும் பதிய வைத்துள்ளனர்.
எதையும் சிந்தித்துப் பார் என்று சொல்லக் கூடிய ஒரு பார்ப்பன நூலையோ, புராணத்தையோ, இதிகாசத்தையோ காட்ட முடியுமா என்று பந்தயம் கட்டித் துணிவாய்க் கேட்கலாம்.
நம்பு – நம்பினால் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்று சொல்லிச் சொல்லி அச்சத்தையும், ஆசையையும் ஊட்டி மக்களின் அறிவைப் பாழ்படுத்தி, வளர்ச்சிப் பாதையைத் தடுத்துள்ளனர்.
அதனால்தான் கடவுளானாலும் காந்தியாரானாலும், மகானானாலும், நான் சொல்வதானாலும் யார் சொல்லியிருந்தாலும் நம்பாதே; உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார் என்றார் தந்தை பெரியார்.
ஏடுகள், ஊடகங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப் பனர்களின் உடைமைகளாக இருப்பதனால் எந்த அறிவியல் செய்தியையாவது தவிர்க்க முடியாமல் வெளிப்படுத்த வேண்டியிருந்தாலும், அதற்குள் மூடநம்பிக்கை நச்சு விதையை மறக்காமல் நுழைத்திருப்பார்கள்.
இஸ்ரோ என்ற நவீன விஞ்ஞான மய்யமாக இருந்தாலும், செயற்கைக் கோளை விண்வெளியில் அனுப்புவதாக இருந்தாலும், அதன் மாதிரியை திருப்பதி சென்று, ஏழு மலையான் என்ற பொம்மையின் பாதத்தில் வைக்கத் தவற மாட்டார்கள்.
இதைவிட மனித சக்தியை, அறிவை, உழைப்பைக் கேலி செய்வதும், கேவலப்படுத்துவதும் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
இராமாயணத்திலேயே ஆகாய விமானம் என்று சொல்பவர்கள், எழுதுபவர்கள் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
யானையின் தலையை வெட்டி விநாயகனின் முண்டத்தில் பொருத்தியிருக்கிறான் சிவபெருமான் – பிளாஸ்டிக் சர்ஜரி அன்றைக்கே இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்தியாவின் பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி பேசவில்லையா?
இனி இந்தியாவில் நடக்கும் இது போன்ற மாநாடுகளில் பங்கேற்கவே மாட்டேன் என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறிடவில்லையா?
பிரதமர் மோடி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியும், அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் சென்று விட்டாரே!
விஞ்ஞானத்தின் அரும் நன்கொடையான அச்சு இயந்திரமும், காகிதமும் இங்கு எதற்குப் பயன்படுத்தப் படுகிறது? அஞ்ஞான இருளைப் பரப்பத் தானே பயன்படுத்தப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘விஜயபாரதத்தில்’ ‘ஹிந்து வாழ்வியலில் – அறிவியல் பின்னணி’ என்ற தொடர் வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வார (7.3.2025) இதழில் சகிக்கவே முடியாத – மக்களை மிகவும் தவறான – இன்னும் சொல்லப் போனால் உயிருக்கே பங்கம் விளைவிக்கும் ஆபத்தான அபத்தங்களை வாரிக் கொட்டித் தள்ளியுள்ளது.
எடுத்துக்காட்டுக்காக ‘கோயில்களில் தீ மிதிப்பது ஏன்?’ என்ற தலைப்பில் ஒரு க(ா)ட்டுரை.
‘‘உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது. வெறும் காலுடன் கோவிலுக்குப் போவதற்கு இதுதான் காரணம்.
‘தெருக்களில் இருக்கும் சின்னஞ்சிறு கல்லுகள், மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயற்கையாகவே பல வியாதிகள் வராமல் தடுக்கப் படுகின்றன. இதுதான் சீனாவில் ‘அக்கு பஞ்சர்’ என்னும் ஊசியால் குத்தும் வைத்திய முறை’’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.
இது எத்தகைய அபத்தம்! செருப்பு அணியாமல் நடந்து சென்றால் எத்தனை எத்தனைக் கிருமிகள் காலில் தொற்றிக் கொள்ளும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் இப்படி எல்லாம் எழுதலாமா?
காலில் செருப்பு அணியாமல் செல்லும் நீரிழிவு நோயாளியின் நிலை என்ன? கல்லும் முள்ளும் குத்தினால் அதனால் ஏற்படும் ரணமும் காயமும் எளிதில் ஆறி விடுமா?
காலைத் துண்டிக்கும் அளவுக்கு விபரீதம் ஏற்படாதா? தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறுமாம். இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகிறதாம். மன பயம் அழிகிறதாம், துணிச்சல் பிறக்கின்றதாம், நரம்புத் தளர்ச்சி சரியாகிறதாம்! பல நோய்கள் குணமடைகின்றனவாம் – எழுதுகிறது ‘விஜயபாரதம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ்.
கோயிலில் தீ மிதிக்கிறவன் ஏன் ஓட்டமும் நடையுமாக செல்லுகிறான். பாதங்களுக்கு வெப்பம் தாங்கும் சக்தி சில நொடிகள் உண்டு என்பதைத் தவிர, இதில் எந்த வெங்காயம் இருக்கிறது? கடவுள் பக்தியோடு தீ மிதிக்கும் பக்தன் ஏன் தீக் குழியில் ஓட வேண்டும்? சிறிது நேரம் நிற்க வேண்டியது தானே!
சில கோயில்களில் தலையில் தேங்காய் உடைப்பதுண்டு. எத்தகைய விபரீதம். நரம்பியல் (Neurology) மருத்துவர்களை கேட்டுப் பாருங்கள் விடை கிடைக்கும்.
மனிதனுக்கு விபரீதத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் ஏடுகளைத் தடை செய்ய வேண்டாமா? எழுதுபவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டாமா?
அரசமைப்புச் சட்டத்தில், 51A(h) என்ற பிரிவில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்கிறதே – அதன்படி இந்தத் தீ மிதிப்புகளும், மண்டையில் தேங்காய் உடைப்பதும் குற்றச்செயல்கள் அல்லவா! மதம் என்ற பெயரால் நடைபெறும் இத்தகு நாசங்களைத் தடுத்திட வேண்டாமா?