1937இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி, சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
இந்த ஆணையை நீதிக்கட்சியும், தந்தை பெரியார் அவர்களும் கடுமையாக எதிர்த்ததுடன், ஹிந்தி திணிப்புத் தொடர்பான அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்ப்புப் போராட்டங்கள் சென்னை மாகாணத்தில் 1937 முதல் 1940 முடிய மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன. தந்தை பெரியாரின் வீரியமிக்க பேச்சால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் போராட்டக் களத்தில் நின்றனர். போராட்டத்தில் பெண் களும், சிறுவர்களும் கூட கைதானார்கள்.
அன்றைய காங்கிரஸ் கட்சி, 1939களின் இறுதியில் ஆட்சியிலிருந்து விலகியது. சென்னை மாகாண முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாரும் பதவி விலகினார். 1940இல் சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜான் எர்ஸ்கின் பிரபு, கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக கற்றுத் தரவேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றார். எனவே ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தன. என்ற வரலாற்றையெல்லாம் இன்றைய இளைஞர்கள் படித்து உணர்ந்திருக்கிறார்கள்.
அன்றைய முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி யாருக்கு தந்தை பெரியார் அவர்கள் எழுதியதை, அப்படியே ஆச்சாரியார் என்ற பெயரை மாற்றி இன்றைய பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பெயரை நிரப்பிக் கொண்டால் பொருத்தப்பாடாக இருக்கும்.
“ஆச்சாரியாரை நட்பு முறையில் கேட்டுக் கொள்கிறோம். ஆச்சாரியார் இது விஷயத்தில் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. ஹிந்தியோ ஹிந்துஸ்தானியோ கட்டாயப்பாடம் என்கின்ற முறையை நிறுத்திக் கொண்டால் ஒழிய -“மாற்றிக்கொண்டால்” ஒழிய கிளர்ச்சி நிறுத்தப்பட மாட்டாது. சில கூலிகளும் காலிகளும் எச்சிலைப்பத்திரிகைகளும் எவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் விஷமத்தனமாகவும் பிரச்சாரம் செய்தாலும் எதிர்ப்புக் காரியம் நிற்காது. இதில் இறங்கிவிட்ட பிறகு, இனி எந்த விதமான விஷமப் பிரச்சாரத்திற்கும் பயந்து பதுங்கப் போவதில்லை. (பொய் மானம் காப்பாற்றிக்கொள்ள கருதி யாரும் பின்வாங்கப் போவதில்லை. ஏனெனில் உண்மையில் இது அரசியல் போராட்டமல்ல; வகுப்புப்போராட்டம்) இதில் இறங்கியவர்கள் இரண்டிலொன்று தான் முடிவு பெறுவார்களே தவிர, மத்தியவாழ்வில் திருப்தி யடைய மாட்டார்கள். ஆதலால் மெய்யான மானம் போவதானாலும் சரி, இந்த முயற்சியில் ஹிந்திக் கிளர்ச்சிகாரர்கள் பின்வாங்கப்போவதில்லை. இதற்கு வள்ளுவர் வாழ்க்கை ஆதாரம். ஆச்சாரியார் குறளை மொழிபெயர்த்து, குறளைத் தனது பேச்சுக்கு அடிக்கடி ஆதாரம் காட்டி வருபவர் ஆகவே, அக்குறளையே ஆச்சாரியார் இனி ஒரு தரம் படித்துப் பார்க்கட்டும்.
அதாவது, 103 ஆவது அதிகாரம் “குடிசெயல் வகை” 1028 ஆம் குறள்,
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்”
என்பதாகும். இதன் பொருள்,
“ஒருவன் தான் பிறந்த குடியை உயரச் செய்யவோ காப்பாற்றவோ முயற்சிப்பானேயாகில் அவன் ஒரு காலத்தையோ தக்க சமயத்தையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதோடு, இம்முயற்சியில் சிறிதும் சோம்பல் கொள்ளக்கூடாது, தனது மானத்தையும் கூட இலட்சியம் செய்யக்கூடாது என்பதோடு அந்தப்படி எவனாவது இந்த விஷயத்தில் மாத்திரம் மானாபிமானம் பார்த்துக் கொண்டு சிறிதாவது தயங்குவானேயானால், அக்குடி அடியோடு கெடும்” என்பதாகும். (‘குடிஅரசு’ தலையங்கம் – 31. 7. 1938)
எத்தனைத் தெளிவாக ராஜாஜிக்கு தந்தை பெரியார் பாடம் புகட்டியிருக்கிறார் பாருங்கள்!
இன்றைக்குத் தந்தை பெரியாரின் சிந்தனையை முழுமையாகக் கடைப்பிடித்து கழகத்தை வழிநடத்தும் நம் தலைவர். ஆசிரியர் அவர்கள் “தமிழ் இன உணர்வாளர்களே, மாநில உரிமைகளைக் காக்க அனைவரும் ஆயத்தமாவீர்!” என்று ‘போர் சங்கு முழக்கம்’ செய்திருக்கிறார்கள். 23.2.2025 ஞாயிறு அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்ட தலைநகரங்களிலும் திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவித்தார்கள். அதன்படியே தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாட்டையே கலக்கியது.
நம் பணி தொடரட்டும்!
– செந்துறை மதியழகன்