செவி பேசி (இயர் போன்) பாதிப்பிலிருந்து தப்பிப்போம்!

viduthalai
3 Min Read

இயர்போன், ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை பாதிப்பு ஏற்படும்’ எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை.
பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது.
‘இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது’ என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?
‘செவித்திறன் பாதுகாப்பு’ வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், கடந்த 27.2.2025 அன்று ‘செவித்திறன் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தார்.

அதில், இயர்போன் மற்றும் ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்சினை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஒலி சாதனங்களைப் பயன்படுத்தி நீண்டநேரம் மற்றும் அதிக அளவில் இசை மற்றும் பிற ஒலிகளைக் கேட்பதன் மூலம் திரும்பப் பெற முடியாத செவித்திறன் இழப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இயர்போன், ஹெட்போன் மற்றும் இயர்பிளக் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.

‘நீண்ட காலம் பாதுகாப்பற்ற ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவதால் செவித்திறனில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு காது கேளாமை ஏற்படும். சிலருக்கு நிரந்தர காது இரைச்சல் ஏற்படும்’ என்கிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை.

பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானவை சில கீழே தரப்பட்டுள்ளன.
நாள்தோறும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் பயன்பாட்டை 2 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஒலி சாதனங்களை பயன்படுத்துவதில் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாதாரண அளவில் ஒலி இருந்தாலும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் ஆகியவற்றின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இது செவியின் கேட்கும் திறனைக் குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
தேவை ஏற்பட்டால் இயர்போன், ஹெட்போன் போன்ற தனிப்பட்ட ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேல் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகள் இணையத்தில் விளையாடும் (online game) விளையாட்டின் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு ஆட்படுவதை தவிர்க்க முடியும்.

தூரமாக அமர்ந்து கேட்பது பிரச்சினை அல்ல “நாள்தோறும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூரமாக அமர்ந்து பாடல்களைக் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றால் காதில் பாதிப்புகள் வராது” எனக் கூறுகிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் இணைப் பேராசிரியர் இளஞ்செழியன்.

டி.ஜே போன்ற இசைக் கச்சேரி நிகழ்வுகள், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றில் அதிக ஒலிகளைக் கேட்கும் போது காதில் அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

“உதாரணமாக, மழைத்துளி ஓரிடத்தில் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடத்தில் குழி போன்ற பாதிப்பு ஏற்படுவதைப் போலவே காதுக்குள் தொடர்ந்து அதிக ஒலிகளைக் கேட்கும் போது பாதிப்பு ஏற்படும்” என்கிறார் அவர்.

இதை இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு (noise induced hearing loss) என்று மருத்துவர்கள் குறிப்பிடுவதாகக் கூறும் இளஞ்செழியன், “இதனை மருந்து, மாத்திரைகள் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. அதாவது பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்ய முடியாது” என்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *