குடந்தை, மார்ச் 6- குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிந்தனைக் களம் நிகழ்ச்சி 2018 வரை நடைபெற்று வந்தது.
சிந்தனைக் களம்
18.01.2025 அன்று நடைபெற்ற பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டத்தில் கபிஸ்தலத்தில் மீண்டும் சிந்தனைக்களம் நடத்திட வேண்டுமென மாநில பகுத்தறிவாளர் கழகத் தின் பொதுச்செயலாளர் வி.மோகனின் வலியுறுத்தலுக்கு இணங்க அச்சிந்தனைக்களத்தை தொடர்ந்திட சா.வரதராசன், கோவி.பெரியார் கண்ணன், சே.ஆனந்தகுமார் ஆகிய மூவரை யும் பொறுப்பாளர்களாக நிய மித்து, பிப்ரவரியில் கூட்டத்தை தொடங்கி நடத்திட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
28.02.2025 அன்று மாலை 6 மணிக்கு பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் நடத்து வதற்கு திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி ஒப்புதல் கிடைத்தவுடன் பொறுப்பாளர்கள் விரைவாக செயல்பட்டு அழைப்பிதழ் மற்றும் பதாகைகள் தயார் செய்து இரு தினங்களில் கழகத் தோழர்களுக்கும் நேரடியாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் பாபநாசம் மற்றும் கபிஸ்தலம் பொதுமக்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்ததன் மூலமாக 28.02.2025 அன்று மாலை 6.00 மணிக்கு சிந்தனை களம் நடைபெறும் கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி பழைய கட்டட வளாகத்தில் கழக தோழர்களும் பொதுமக்களும் திரண்டனர்.
சிந்தனைக் களம் நடைபெறும் வளாகத்தினை பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, லண்டன் குணா இருவரும் நேர்த்தியாக ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். ஒலி, ஒளி அனைத்தையும் கணபதி அக்ரகாரம் மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சே.நெப்போலியன் சிறப்பாக அமைத்துக் கொடுத்தார். சரியாக மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை நினைவூட்டி வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தி, நலம் விசாரித்துக் கொண் டனர். அனைவரது முகத்திலும் புன்னகையும் , மலர்ச்சியையும் காண முடிந்தது. சரியாக 06.30 மணிக்கு சிந்தனை களத்தின் தலைவராக முன்மொழியப்பட்ட தலைவர், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.சேகர் தனது உரையில் இந்த இயக்கம் என்னை ஈர்த்தது எப்படி என்றும், இந்த இயக்கத்தால் தான் எப்படி மாற்றமடைந்தேன் என்பதையும் கூறி இதை சிந்தித்து பாருங்கள் என உரையாற்றினார்.
வரவேற்று உரையாற்றிய சா.வரதராஜன் தனது வரவேற்புரையில் இந்த கூட்டம் கூட்டப்படும் வழி முறையை அழகாக கூறினார். ஒவ்வொருவரும் ரூ100 வழங்கிட ஒப்புதல் அளித்த பின்னர் இக்கூட்டம் நடத்த தொடங்கினோம் என்றும், தொடர்ந்து அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வரவு –செலவு கணக்குகள் புலனத்தில் இரு நாட்களுக்குள் பதிவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குடந்தை மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு தனது உரையில் இக்கூட்டம் நடத்திட மாவட்ட கழகம் முழு ஆதரவு அளிக்கும் என்றும் உறுதி கூறினார்.
கழக பொது குழு உறுப்பினர் சு.விஜய குமார் இம் மாதாந்திரக் கூட்டத்திற்கு தொடர்ந்து அனைவரும் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் தனது உரையில் மாதாந்திரக் கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடியும் என்றும், தலைமை, வரவேற்புரை, நன்றியுரை என மூன்றும் 15 நிமிடங்கள் மட்டுமே நடக்கும். 7.00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவாளர் நேரம் என்றும் கூட்டம் அதிகபட்சமாக 08.15க்குள் முடிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதன்படியே 7.00 மணிக்கு திராவிடர் கழக துணைப்பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி ஏன்? ஏன்? ஏன்? என்னும் பொருளில் உரையாற்ற தொடங்கினார். தனதுஉரையில், கல்வி வேண்டும் ஏன்? சமூக நீதி வேண்டும் ஏன்? சமத்துவம் வேண்டும் ஏன்? மாநில உரிமை வேண்டும் ஏன்? பகுத்தறிதல் வேண்டும் ஏன்? சிந்திக்க வேண்டும் ஏன்? அறிவியல் மனப்பான்மை வேண்டும் ஏன்? பெண்ணுரிமை வேண்டும் ஏன்? என ஏன், ஏன், ஏன் என பல கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு உரிய விளக்கத்தை அளித்து உரை யாற்றினார்.
திரளாக கூடியிருந்த பெண் களிடம் பல கேள்விகளைக்கேட்டு ஏன் என்று இதுவரை ஏன் கேட்கவில்லை என வினா தொடுத்தார். நீங்கள் கேட்கவில்லை…. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் உங்கள் சார்பாக கேள்விகளைக் கேட்டு அடிமைத்தனத்தையும் ஆணாதிக்க சிந்தனை மனோ பாவத்தையும் உடைக்கத் தொடங்கினார். கூடியிருந்த இளைஞர்களிடம் பல்வேறு செய்திகளைக் கூறி இது தெரியுமா? எனக் கேட்டார்.
கூடியிருந்த 200 க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்களது நிலைக்கு ஏற்ப வினா தொடுத்து ஏன் ? ஏன்? எனக்கேட்டு விடை தெரியாத சூழலில் இதற்கு விடை இதோ பெரியார் தருகிறார் எனக்கூறி விளக்கமளித்து சிறப்பாக தெளிவுபடுத்தினார்.
மூளையில் இடப்பட்ட விலங்கை உடைத்தால் தான் உங்களால் முன்னேற முடியும். சமூக முன்னேற்றம் நடந்தால் தான் நாடு முன்னேற முடியும் என்பதையும், சிந்திக்க தொடங்கினால் மூளையில் இடப்பட்ட விலங்கு தானே உடையும். நீங்கள் சுயமாக உங்கள் அறிவை பயன்படுத்துவீர்கள். முன்னேறுவீர்கள். நம் சமூகம் முன்னேறும். தடைகள் உடையும்.. விடியல் பிறக்கும். இது தான் தந்தை பெரியார் வழி…. அது அறிவு வழி….. அறிவியல் வழி ….. எளிய வழி என்பதை எடுத்துக் கூறினார்.
தந்தை பெரியார் கூறிய அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகள் தான் என சுமார் 200 பேர்கள்…… தானாக கூடிய கூட்டத்தில்……. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கருத்தாக பேசிக்கொண்டார்கள். தனது பேச்சால் சிந்திக்க தூண்டி விட்டார் மதிவதனி.
இறுதியில் கோவி.பெரியார் கண்ணன் வந்திருந்த அனைவருக்கு நன்றியினை தெரிவித்தார்கள். இரவு 8.05க்கு கூட்டம் முடிவுற்றது. சிந்தனைக் களம் சிந்திக்கத் தூண்டியது. தொடந்து கூட்டம் நடத்த 5 பேர் தாங்களும் பங்களிப்பு தருவதாகக் கூறி இக்கூட்டத்திற்குரிய ரூ100/- வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.