நாடா, கடும் புலி வாழும் காடா?

Viduthalai
3 Min Read

மத்தியப் பிரதேச மாநிலத்தில்  ஓடும் காரில் வைத்து இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கால்களை நக்க வைத்த சம்பவத்தின் காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சித்தி என்ற இடத்தில் பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத் என்பவர் மீது பா.ஜ.க. நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த நிகழ்வு நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி சூடு கிளப்பிய நிலையில், சுக்லா மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில முதலமைச்சர் சவுகான் அந்த தொழிலாளியை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்டதோடு  அவரது கால்களையும் கழுவினார் என்று செய்தி பரப்பப்பட்டது. அந்தப் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், இப்போது அதே மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.   அங்கே குவாலியர் பகுதியில் ஓடும் காரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு ஒருவரை மிகக் கடுமையாகத் தாக்குகின்றனர். காரில் இருந்த ஒருவர் வலுக்கட்டாயமாக அவரது கால்களை நக்க வைத்துள்ளார். இது குறித்த காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி  வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபரும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களும்,  குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா நகரில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இணையத்தில் அதிக அளவில் பரவி வரும் அந்தக் காட்சிப் பதிவில் காருக்குள்ளே இருந்த இளைஞர்களில் ஒருவர் மற்றொருவரை மிகக் கொடூரமாகத் தாக்குகிறார், கடுமையாகத் தாக்கும் அந்த இளைஞர், அத்துடன் நிற்காமல், தனது காலையும் நக்க வைக்கிறார்.  காதில் கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளால் அந்த இளைஞனைத் திட்டுகின்றனர். மேலும், முகத்திலேயே கடுமையாகத் தாக்கவும் செய்கிறார்கள். 

இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றொரு காட்சிப் பதிவும் இணையத்தில் உலா வருகிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செருப்பைக் கழட்டி அந்த இளைஞனின் முகத்தில் அடிப்பதும் இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித் துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலி யுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இது தொடர்பாக ஏற்கெனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். 

இது குறித்து தப்ரா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி விவேக் குமார் ஷர்மா கூறுகையில்,   “காரில் வைத்து இளைஞர் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிப் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த காட்சிப் பதிவை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பாதிக்கப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் அளித்த புகார் அடிப் படையில் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று  தெரிவித்தார்.  

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மிகவும் கொடுமையான நிகழ்வுகள் –  பெண்கள், தாழ்த்தப்பட்ட,, பழங்குடியின மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஆனால் கண் துடைப்பிற்காக சிறுநீர்கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று ஆள் மாறட்டம் செய்து வேறொருவரை அழைத்து அவரது கால்களைக்கழுவி நாடகம் நடத்திய முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது ஆட்சியில் மாநிலத்தின் பல பகுதிகளில் நடக்கும் கொடூரங்கள் குறித்து வாய்மூடி மவுனமாக உள்ளார்.

இது நாடா, கடும்புலி வாழும் காடா? பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் பாசிசத்தின் எல்லையைத் தொட்டு விட்டன.

வெளிநாடுகளுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி நீட்டி அளக்கும் உரைகள் எல்லாம் வெற்றுரைகள்தாம். ஆனால் உள்நாட்டில் மட்டும் விலை போகாது. 2024 மக்களவைத் தேர்தலில் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *