பேங்க் ஆப் இந்தியாவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்களுக்கு கட்டாயம் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் இந்தியா. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியில் நாடு முழுவதும் 3,400 கிளைகள் உள்ளன. வெளிநாட்டிலும் 29 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பேங்க் ஆஃப் இந்தியாவில் 400 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மொத்தம் 400 அப்ரண்டீஸ் டிரையினிங் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு பணியிடம் உள்பட மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவ்வாறு மாநில வாரியாக 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பட்டப்படிப்பினை 01.04.2021 மற்றும் 01.01.2025 ஆகிய தேதிகளுக்கு இடையில் முடித்தவராக இருத்தல் வேண்டும். இவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2025 அன்று தேதிப்படி, 20 வயது முதல் 28 வயதுக்கு இடைப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எஸ் சி / எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஊதியம் எவ்வளவு: அப்ரண்டீஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நகரங்கள் என்றால் ரூ.15 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். நகரங்கள் என்றால் மாதம் ரூ.12 ஆயிரமும், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்கள் என்றால் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை: முதலில் இணைய வழித் தேர்வு நடைபெறும். இதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். பின்னர் உள்ளூர் மொழிகளில் தேர்வு நடைபெறும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பணியிடங்கள் இருப்பின் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பினை நன்கு படித்துக்கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது. ஓர் ஆண்டுக்கு மட்டுமே விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினர்கள் ரூ.800 செலுத்த வேண்டும். எஸ் சி / எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.600 கட்டணம் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.400 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 1.03.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.03.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.iob.in/Careers