தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.,

Viduthalai
9 Min Read

‘‘ஜாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் வலியுறுத்திய பண்பாடுதான் ஆரியப் பண்பாடு;
ஆனால், தமிழோ சமத்துவத்தைப் போதித்த மொழி!’’

தி.மு.க. இளைஞரணி சார்பில், இளம் பேச்சாளர்க ளுக்கான பயிற்சி முகாமில் ‘‘அரை உண்மைகளும் முழுப் பொய்களும்’’ என்ற தலைப்பில், திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்குப் பதில் அளித்து, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா ஆற்றிய உரை வருமாறு:
‘‘இளைஞரணி நடந்தும் இந்த இளம் பேச்சாளர் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும்போது எனக்கு 40 வயது குறைந்தது மாதிரி ஓர் உணர்வு.
நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளிக்கூடத்தில் ‘கவிதை ஒப்புவித்தல் போட்டி’ நடக்கிறது. நான் ஒரு காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவன். என் அம்மாவின் அண்ணன், பின்னாளில் எனது மாமனார். பத்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரசில் இருந்தவர். ஒரு தலித் சமுதாயத்தில் 20 ஏக்கர் நிலம், வண்டி மாடு, நிலம், கல்வியறிவு எல்லாம் இருந்த காரணத்தினால், ஒரு செல்வந்தராக வாழ்ந்த சூழல் என் அம்மா பள்ளிக்கூடம் படிக்கும்போது, இரண்டு விபூதிகளை, எனக்குக் கொடுப்பார்
ஒன்று மாரியம்மன் கோயில் விபூதி.

அதைக் காலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் காத்து, கருப்பு, பேய்கள் எல்லாம் வரக்கூடாது என்ப தற்காக, எங்கள் ஊரில் ‘பழமலைக் கருப்பு’ என்று ஒரு கருப்பசாமி கோயில் விபூதியை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இரண்டு நேரமும் விபூதிகளை வைத்துக்கொண்ட ஆ.இராசா என்னும் நான், எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, ஓர் ஆசிரியர், என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, ‘‘இராசா இதை மனப்பாடம் செய். வரவிருக்கின்ற ‘தமிழ் ஒப்புவித்தல் போட்டி’யில் இதை வாசி. உனக்குப் பரிசு கிடைக்கும்‘‘ என்று சொன்னார். அந்தப் புத்தகத்தில் இருந்த கவிதைதான் என்னைப் பேச்சாளராக, வழக்குரைஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக, பெரியார், கலைஞர், அண்ணா என்ற முப்பரிமாணத்தையும் சேர்ந்து படிக்கின்ற ஆளுமையாக மாற்றியது. அதுதான் அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் கவிதை. அந்தக் கவிதைதான் என்னை அண்ணா, பெரியார், கலைஞரிடம் கொண்டுவந்தது.
பெரியாரும், அண்ணாவும் என்ன கனவு கண்டார்களோ, அதையெல்லாம் திட்டமாக்கித் தந்த ஒரு மிகப்பெரிய தலைவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்.

கலைஞரைக் காட்டிலும் இன்னும் வீரியமாக ‘திராவிட மாடலை’, இந்தியா முழுவதும் கொண்டு சேர்ந்த பெருமை நம் முதலமைச்சரைச் சாரும். இன்னும் கூடுதலாக தாத்தாவைவிட, அப்பாவைவிட ‘திராவிட மாடலைத்’ தூக்கிப் பிடிக்கின்ற மகத்தான பணியை என் ஆருயிர் இளவல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்’’ என்று தன் உரையைத் தொடங்கிய ஆ.இராசா அவர்களிடம், திராவிட இயக்கத்தின் மீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்களை, அவதூறுகளை அடுக்கடுக்காக முன்வைத்து இளம் பேச்சாளர்கள் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு அழுத்தமான, ஆழமான பதில்களை சொல்லி தெளிவுபடுத்தினார் ஆ.இராசா அவர்கள். அந்தக் கேள்வி பதில்களில் சில:
‘பெரியாருக்கு மொழிப்பற்றே இல்லை’ என்று தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படு கின்றனவே?
‘‘எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு, ‘‘அைர உண்மைகளும், முழு பொய்களும்.’’ இப்போது உங்களுக்குப் புரிகின்ற மாதிரி சொல்கிறேன். பெரியா ருக்குப் பாசாபிமானமும் கிடை யாது,தேசாபிமானமும் கிடையாது. ‘பிறகு எதற்கு பெரியார்’ என்று கேட்கிறார்கள். இதுதான் அரை உண்மை, முழுப் பொய்.

பெரியார் என்ன சொன்னார் என்றால். ‘எனக்குப் பாசாபிமானமும் கிடையாது, தேசாபிமானமும் கிடையாது, மதாபிமானமும் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் மனிதப்பற்று ஒன்றுதான்’ என்றார். மனிதன் சுயமரி யாதையோடு வாழ வேண்டும். ‘உனக்கு மொழி, இலக்கியம், பண்பாடு இருக்கலாம். உன் தமிழ் உயர்ந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், அந்தத் தமிழ் ஒருவேளை வர்ண பாகுபாட்டை ஆதரித்து இருந்தால், அந்த மொழியை நான் நேசிக்க மாட்டேன்’ என்பதுதான் அதன் அர்த்தம்.
பெரியார் சொன்ன மனிதப்பற்று என்பதைத் தவிர்த்து விட்டு அவருக்கு ‘நாட்டுப்பற்று’ கிைடயாது, ‘மொழிப்பற்று’ கிடையாது. ‘மதப்பற்று’ கிடையாது. ‘ஜாதிப்பற்று’ கிடையாது. பற்றே இல்லாமல் எப்படி ஒரு மனிதன் இருக்கலாம் என்று விமர்சிப்பது இருக்கிறது அல்லவா அதுதான் ‘அரை உண்மைகளும், முழுப்பொய்களும்’. முழுப்பொய்களையும் முன்வைத்து, திராவிட இயக்கத்தின் மேல் அவ தூறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

‘திராவிடம்’ என்ற கோட்பாடு ஏன் தமிழ்நாட்டைத் தாண்ட வில்லை?

இந்திய அளவில் மிகப்பெரும் சிந்தனையா ளர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஜாதி ஒழிப்பு குறித்து, பெரியார் என்னென்னவெல்லாம் தமிழில் சொன்னாரோ, அவை அனைத்தையும் அம்பேதகர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு என்ன வழி, இந்து மதத்தின் புதிர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் யார். ஒடுக்கப்பட்டவர்கள் யார், ஏன் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டார்கள். சூத்திரர்கள் யார், அவர்கள் எப்படி நான்காவது வர்ணமாக ஆக்கப்பட்டார்கள் என அனைத்தையும் தரவுகளோடு விளக்கியிருக்கிறார் அம்பேத்கர்.
அம்பேத்கர், பெரியார் ஆகிய இருவரது கருத்துகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் ‘ஆரியம்’, ‘திராவிடம்’ என்ற இரண்டு கோட்பாடுகளும் பண்பாடு, மொழி சார்ந்து இருப்பவை.

ஆரியப் பண்பாடு, சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவைதான் ‘பகவத் கீதை’யிலிருந்து ‘மனுஸ்மிருதி’ வரை உள்ள நூல்கள். கீதை என்ன சொன்னது என்றால், ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என்றது. அதாவது, ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்று கிருஷ்ணன் சொன்னதாக பகவத் கீதை கூறுகிறது.
‘மனு ஸ்மிருதி’ என்ன சொன்னது என்றால், ‘நீ சூத்திரன் படிக்கக் கூடாது’, ‘பெண்கள் எல்லாம் பாவ யோனியில் பிறந்தவர்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பருவம் அடையும் வரை, அப்பா பாதுகாப்பில் இருக்க வேண்டும். அதன்பிறகு திருமணம் ஆகிவிட்டால், கணவன் பாதுகாப்பில் இருக்கவேண்டும். அதன் பிறகு, பிள்ளைகள் பெற்று இறுதிக்காலத்தில் வயதாகிவிட்டால், மகன் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
‘பெண் என்பவள், ஏதேனும் ஓர் ஆணைச் சார்ந்த அடிமையாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று சொன்னது. ஜாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் வலியுறுத்திய இந்தப் பண்பாடுதான் ஆரியப் பண்பாடு. ஆனால், தமிழோ சமத்துவத்தைப் போதித்த மொழி. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றது நம் மொழி. ‘பெண்களுக்கு எது அழகு’ என்று தமிழ் இலக்கியம் சொல்கிறது தெரியுமா?

‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’ என்பது நாலடியார் பாடல்.
‘அழகான கூந்தலோ, சிவந்த முகமோ, பெரிய மார்புகளோ, இடை வனப்போ அழகில்லை பெண்க ளுக்கு கல்விதான் உண்மையான அழகு என்கிறது நாலடியார். இதுதான் தமிழ்; இதுதான் திராவிடப் பண்பாடு.
சமஸ்கிருதம் ஒரு மூத்தமொழிதான், ஒரு செம்மொழிதான், அதேபோல் தமிழும் செம்மொழிதான். ஆனால், இரண்டும் சொன்ன தத்துவங்கள் வெவ்வேறு. இரண்டு சிந்தனை மரபுகள் வெவ்வேறு மட்டுமல்ல, நேர எதிரானவை. இதை பெரியாரும் புரிந்துகொண்டார், அம்பேத்கரும் புரிந்துகொண்டார்.
ஆரியப் பண்பாட்டுக்கு எதிரான குரல்கள் இந்தியா முழுமைக்குமானவை. எனவே, திராவிடம் என்பது தமிழ்நாட்டுடன் சுருங்கிப் போய்விட்டது. என்று நினைக்கவேண்டாம். அம்பேத்கர் போன்ற பார்ப்பனிய எதிரப்பு சிந்தனையாளர்கள், இந்தியா முழுக்க இருந்தார்கள், இருக்கிறார்கள் என்றாலே ‘திராவிடம் என்ற கோட்பாடு’ இந்தியா முழுமைக்குமானது என்று தான் அர்த்தம்.’’

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்று நினைக்கிறீர்கள்?
‘‘சமூக நீதி என்பது வேறு. ஜாதி ஒழிப்பு என்பது வேறு. சமூகநீதி பேசுபவர்கள் ஜாதி ஒழிப்பிற்கு வருவார்கள் என்று சொல்லிவிட முடியாது. சமூக நீதி முதல் படி. ஜாதி ஒழிப்பு என்பது இரண்டாவது படி.
தமிழ்நாட்டில் ஜாதியே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதிப் பெருமிதத்தை வாக்கு வங்கியாக மாற்ற முடியாது. ஆனால், பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் ஜாதிப் பெருமிதத்தை அடிப்படையாக வைத்துத்தான் மதவாதத்தை வளர்க்கிறது. ஜாதிப் பெருமிதம் உடைபடாமல் அவர்கள் பார்த்துக் கொள்கி றார்கள். அதைத் தமிழ்நாட்டில் உடைத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர். அதனால்தான் பா.ஜ.க.வால் இங்கு வர முடியவில்லை.
இந்தப் பெருமிதத்தை இங்கு நாம் குறைத்து இருக்கிறோம். எப்படிக் குறைத்து இருக்கிறோம்? ஜாதி இருக்கிறது. ஆனால், மொழியால் ‘தமிழர்கள்’ இனத்தால் ‘திராவிடர்கள்’ நாம் எல்லோரும் சமம். எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.

அதுதான் சமூக நீதி

1959-இல் ‘குலக்கல்வித் திட்டம்’ வேண்டாம் என்று நாம் தூக்கிப் போட்டு விட்டோம். 73 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ‘விஸ்வகர்மா யோஜனா திட்ட’த்தைக் கொண்டு வருகிறார்கள். என்ன காரணம் என்றால், பி.ஜே.பி. வெற்றிபெற வேண்டும் என்றால், ஜாதி அப்படியே இருக்க வேண்டும். ஜாதி மட்டும் அல்ல, ஜாதித் தொழில்களும் அப்படியே இருக்க வேண்டும் அதற்குத்தான் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம். அதற்கு தான் நாம் எதிரி. அதற்கு நாம் எதிர் தளத்தில் இருக்கிறோம். அதனால்தான் அவர்களால் தமிழ்நாட்டில் காலுன்ற முடியவில்லை.
பெரியார் ரகசியமாக பிள்ளையார் சிலையை வீட்டுக்குள் வைத்து கும்பிட்டார் என்பது உண்மையா?
‘‘அது வேண்டுமென்றே சொல்லப்பட்ட அவதூறு. ஓர் உதாரணம் சொல்கிறேன்.

பெரியாரின் நண்பர் தமிழ்த்தென்றல்

திரு.வி.க. சைவத்தில் ஊறியவர். ஒருமுறை ஈரோட்டில் தங்கியபோது, திரு.வி.க. அவர்கள் திருநீறை எடுத்து வர மறந்துவிட்டு, ஆற்றிற்குக் குளிக்கச் சென்று விட்டார். தமிழறிஞர் திரு.வி.க. குளித்தவுடன் திருநீறு பூசக்கூடிய பழக்கமுள்ளவர்.
நம் நண்பன் சிவனை வணங்குகிறவர். திருநீறு வைத்துக் கொள்பவர், அதை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று, பல ஆண்டு காலமாக பெரியார், பூட்டி வைத்திருந்த தன் முன்னோர்கள் வழிபட்ட பூஜையறையைத் திறந்து, விபூதியை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை செல்கிறார். திரு.வி.க. குளித்துவிட்டு வெளியே வருகிறார்.
‘நீ வைத்துக்கொள்ள வேண்டிய விபூதியை மறந்துவிட்டு, குளிக்க வந்து விட்டாய். நான் பூஜை அறையை 45 வருடமாகப் பூட்டி வைத்து இருக்கிறேன். உள்ளே சென்று பார்த்தேன், விபூதி பத்திரமாக இருந்தது. உனக்காகதான் இன்றைக்குத் திறந்து எடுத்து வந்தேன்’ என்று சொன்னார். பூஜை அறையை தன் நண்பன் நம்பிக்கை உள்ளவன் என்பதற்காகத் திறந்தேன் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்தவர் பெரியார். அதனால், ரகசியமாகப் பிள்ளையார் சிலை வைத்துக் கும்பிட்டார் என்பதெல்லாம் பொய்ச் செய்தி.’’

2-ஜி வழக்கை ஆ.இராசாவே வாதாடி வெற்றி பெற்றது எப்படி?

2-ஜி வழக்கே அரை உண்ைமகளும், முழு பொய்களும்தான். முழுக்க முழுக்க அவதூறுகளின் அடிப்படையில் வைக்கப்பட்ட விமர்சனங்கள்தான் அவை. அப்படி 2-ஜி குறித்து, என்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததும், கலைஞர் என்னைத் தனியாக அழைத்து, என்ன நடந்தது என்று விசாரித்தார். ‘அய்யா அலைக்கற்றை ஏலத்தில் ஒரு மிகப்பெரிய ஆதிக்கம் இருந்தது. ஏழை, எளிய மக்களுக்கு செல்போன் சென்று சேரவில்லை. ஸ்பெக்ட்ரத்தை மறைத்து வைத்துக்கொண்டு, இரகசிய மாக சில பேரே எடுத்துக் கொண்டார்கள். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று ரிப்போர்ட் கொடுத்தேன். அதைத் தடுப்பதற்கு எத்தனையோ பேர் என்னிடம் வந்து பேரம் பேசினார்கள்.
எத்தனை ஆயிரம் கோடியெல்லாம் கொடுக்கிறேன் என்று என்னவெல்லாம் சொன்னார்கள். ‘‘என்னை நம்புங்கள் நான் செய்ததுதான் சரிதான்” என்று சொன்னேன். ‘நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன்’ என்றார் தலைவர்.
அவதூறுகளையும், வழக்கையும் உடைத்து வெளியே வந்த பிறகு சொன்னேன், ‘கலைஞர் என்னைப் பனிக்குடத்தில் வைத்துக் காப்பாற்றிய தாய்’ என்று. எனக்கு ஒரு மிகப்பெரிய பலம் ஆறுதல் என்பது, கலைஞர் என்மீது வைத்த நம்பிக்கை, எனக்குக் கொடுத்த பாதுகாப்புதான்.

2-ஜி வழக்கு என்னைச் செதுக்கி இருக்கிறது. 15 மாத சிறை என்னைச் செதுக்கி இருக்கிறது. இப்படித்தான் சவால்களும், சோதனைகளும் அரசியலில் செதுக்கும்.
கலைஞர் அவர்கள் ஒருமுறை ‘ராமர் எந்தக் கல்லூரி யில் பொறியியல் படித்தார்?’ என்று சொல்லிவிட்டார். அப்போதே ‘கலைஞர் தலையைச் சீவுவேன்’ என்று ஒருவன் சொன்னான். கலைஞர் ஒன்றும் கோபித்துக் கொள்ளவில்லை. ‘என் தலையை நான் சீவியே ரொம்ப நாள் ஆகிவிட்டதுய்யா’ என்று நகைச்சுவையாகச் சொன்னார். இளந்தலைவர் அவர்கள் ஸநாதனத்திற்கு எதிராகப் பேசியபோதும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார் ‘‘அவரின் தலையைக் கொண்டு வந்தால் பத்து கோடி தருகிறேன்’’ என்று மிரட்டினார். தாத்தா தலையையே சீவ முடியாதவர்கள், பேரனின் தலையையா சீவப்போகிறார்கள்? அது மாதிரியான சவால்கள் வரும் பொழுதுதான் உதயநிதி என்ற மனிதன், தமிழ்நாட்டில் மட்டும் தலைவராக இல்லாமல், இந்தியா முழுமைக்கும் தலைவனாக அறிமுகமானார். எனவே, மிரட்டல்களும், அவதூறுகளும் திராவிட முன்னேற்றக்கழகத்தை அசைக்க முடியாது.’’
இப்படி இளம் பேச்சாளர்களின் பல கேள்விகளுக்கும் தி.மு. கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் பதில்கள் சொல்லி விளக்கமளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *