சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் ஒன்றிய அமைச்சர்களிடம் பேசி தமிழ்நாட்டிற்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங் கித் தாருங்கள் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நேற்று (3.3.2025) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும்போது, தமிழ்நாடு அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்தக் கடன் ரூ.9.5 லட்சம் கோடியை நெருங்கியிருக்கும். கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேசிய காணொலி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டைக் கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் ரூ.9.5 லட்சம் கோடி. நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு மு.க.ஸ்டாலின்’’ என முதலமைச்சர் பேசிய காட்சிப் பதிவை இணைத்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025-ஆம் ஆண்டு ரூ.181.74 லட்சம் கோடியாக மாறியுள்ளதே. அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள கல்வி, நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்டவற்றுக்கான நிதியைப் பெற்றுத்தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்கள் அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையை காட்டுகிறதே தவிர வேறு அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.