தஞ்சாவூர். ஜூலை 12– கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்திய மங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி நேற்று (12.7.2023) அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்தது. இந்த சிலையை மீனவர்கள் மீட்டனர். இந்த சிலை 4 அடி உயரம் கொண்டுள்ளது.
இந்த புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது. இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர். அதன்பேரில் சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய் துறையினர் நிகழ்வு இடத்துக்கு சென்று சிலையை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே புதைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.