சென்னை,மார்ச் 3- திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (3.3.2025) முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதலமைச்சரும் அக்கட்சியின் இளை ஞரணி செயலாளருமான உதயநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது.
இதில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்கும், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பார பட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கும் வகையில் சட்டப் பேரவை தொகுதி தோறும் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடை பெறுகின்றன.
இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். அவர்கள், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 72ஆவது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசுவார்கள்.
அணி நிர்வாகிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அன்பகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள துண்டறிக்கையை தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகித்து, அவர்களை கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையை தரமறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையிலும் இந்த பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் உதயநிதி கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, இன்றுமுதல் 10ஆம் தேதி வரை 67 இடங்களில் முதல் கட்டமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.