தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை போராட்டக் குணம் கொண்டது திமுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 2- ‘தமிழ்நாட்டின் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72-ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் நேற்று (1.3.2025) கொண்டாடினார். இதையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர் களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக எதைக் கூற விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறீர்கள். என்னுடைய பிறந்த நாளையொட்டி நேற்று (28.2.2025) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னி லையில் நான் தெளிவாகப் பேசி இருக்கிறேன்.
மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். குறிப்பாக, ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும். அதுதான் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாகும்.

என்னுடைய கவலை எல்லாம் நாட்டைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் மட்டும்தான். மாநில உரிமையை நாம் பெற வேண்டும். இதுபற்றியே கவலைப்படுகிறேன். மாநில உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டைப் பின்பற்றும் பிற மாநிலங்கள்: தாய்மொழியைக் காக்க, தமிழ்நாட்டின் வழிமுறைகளை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி யுள்ளதாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெரு மிதமாக தெரிவித்துள்ளார்.

இருமொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து கட்சியினருக்கு அவர் அய்ந்தாவது நாளாக நேற்று (1.3.2025) எழுதிய கடிதத்தின் விவரம்:

‘ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிப்போம்; மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம்’ என்பதே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை. இதை நேரடியாகத் தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. அதன் வழியில் சகோதர மாநிலங்களும் தங்கள் தாய்மொழியைப் பாதுகாக்க அரண் அமைக்கும் சட்ட வழிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஒரு மாநிலத்தில் பல வகையான பாடத் திட்டங்களைப் பின்பற்றக்கூடிய பள்ளிகள் உண்டு. எந்த வகைப் பாடத் திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதை இன்று பஞ்சாபும், தெலங்கானாவும் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இதை இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளி களிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் என சட்டமாக நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருந்தாலும், வேறு வகை பாடத் திட்டங்களைக் கொண்டுள்ள பள்ளிகளாக இருந்தாலும் தமிழ் மொழியைக் கற்றே ஆக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதால்தான், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வரைவை வெளி யிட்ட சிபிஎஸ்இ, அதில் பிற மாநில மொழிகளைத் தவிர்த்திருந்தபோதும் தமிழைத் தவிர்க்க முடியாத நிலை உருவானது.

தமிழ்நாடு வகுத்த பாதையில் மற்ற மாநிலங்களும் தங்கள் தாய்மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டு வருகின்றன.
இனம், மொழி காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் எனது தலைமை யிலான திமுகவும்,

போராட்ட குணம் மிகுந்த இயக்கமாகச் செயல்பட்டு, இந்திய ஒன்றியத்தின் திசை வழியைத் தீர்மானிக்கிறது.
எப்போதெல்லாம் ஆதிக்கம் செலுத் தும் எண்ணத்துடன் எல்லைப் புறமாகவோ, கொல்லைப் புறமாகவோ ஹிந்தி மொழி நுழைய முயல்கிறதோ, அப்போதெல்லாம் திமுக விழிப்புணர்வுடன் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *