சென்னை, மார்ச் 2- சென்னை உயர்நீதிமன்றத்தில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், “எழும்பூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தேதி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் 400 பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை காவல் துறை அனுமதி பெறாமல் நடத்தியதாக எங்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், போராட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அனு மதி கேட்டு நாங்கள் கொடுத்த மனுவை காவல்துறையினர் பரிசீலிக்காமல் வைத்திருந்தனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த போராட்டம் நடந்தது. ஆனால், எழும்பூர் காவல்துறை துணை ஆய்வாளர் சிங்காரவேலன் என்பவர் தாமாகவே இந்த வழக்கை எங்களுக்கு எதிராகபதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் எங்கள் மூவரை மட்டும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். எங்கள் மீது வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. அதனால், அதை ரத்து செய்யவேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்கிறேன்” என்று உத்தரவிட்டார்.