சென்னை, மார்ச் 2- நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 28.2.2025 அன்று நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொள்கை கூட்டணி அமைத்து போராடி வருகிறோம். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்கு கருத்து மாறுபடுகள் வரும். ஆனால், ஒருபோதும் விரிசல் வராது. நமது ஒற்றுமையை பார்த்து இதில் விரிசல் வராதா என்று சிலர் எதிர்பார்க்கலாம். அவர்கள் ஆசையில்தான் மண் விழும். என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துள்ள தோழமைக் கட்சி தலைவர்களை எனது இதய மேடையில் வைத்துள்ளேன். நமது ஒற்றுமை, தமிழ்நாட்டின் உரிமையை, சமூகநீதியை, தமிழ்நாட்டை ஏன் ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பாற்றியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தப்பித்தவறி ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாஜவிடம் அடகு வைக்கப்பட்டிருக்கும். பாஜக அதிமுகவை மிரட்டி கபளீகரம் செய்திருக்கும். இந்த கொடிய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்ட கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் கூட்டணி நமது கூட்டணி.
ஒன்றிய அரசு எப்படியெல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கலாம் என செயல்படுகிறார்கள். நீட் தேர்வை கொண்டுவந்தனர். புயல் வெள்ள நிவராண நிதி தருவதில்லை. கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். நாம் அதை ஏற்கவில்லை. உடனே கல்விக்கான நிதி தரமாட்டோம். என்கிறார்கள். வேதனையுடன் சொல்கிறேன். குழந்தைகளின் கல்விக்கும் ஆசிரியர்களின் ஊதியத்துக்கும் நிதி தராத கொடூர மனம் படைத்தோரின் ஆட்சி அதிகாரம் நடக்கிறது.
எங்கள் மீது ஹிந்தியை திணிக்காதீர்கள். தாய்மொழி தமிழ். உலக தொடர்புக்கு ஆங்கிலம். இது எங்களுக்குப் போதும். தேவைப்பட்டால் ஹிந்தி மொழி அல்ல; அரபு மொழியைக் கூட கற்றுக்கொள்வோம். தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு இருமொழிக் கொள்கைதான் காரணம். இதை வடமாநிலத்தினர் ஏற்றுக்கொள்கிறார்கள். அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடுதான். எங்களை மிரட்டினாலும் உங்களால் ஹிந்தியை திணிக்க முடியாது. மிரட்டலுக்கு ஒருபோதும் திமுக அடங்கிப்போகாது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். இப்போது பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டில் எண்ணிக்கை குறையாது என்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை அதி கரிக்குமா இல்லையா என்பது தெரியாது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலம் ஏன் பாதிக்கப்பட வேண்டும். ஏன் இது விடயமாக பிரதமர் உறுதி அளிக்கவில்லை. தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது. 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கொடுங்கள். இந்த விவகாரத்தில் உரிமைக் குரலை தெலங்கானா, கருநாடகா மாநிலங்கள் எழுப்பியுள்ளன. மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு துணையாக இருக்க வேண்டும். அதன்மூலம்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். இவ்வாறு பேசினார்.