கோவை, மார்ச் 1- முதுகலை பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், 133 உறுப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பல்வேறு இளங்கலை, முதுகலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
முதுகலை பாடங்களுக்கான பருவத் தேர்வுகள், வரும், ஏப்., மாதம் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கு அனைத்து முதுகலை பாடப்பிரிவுகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
http://coe.b–u.ac.in/coll_pg/login.aspx என்ற இணையதள இணைப்பு (லிங்க்) வாயிலாக மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள இணைப்பு (லிங்க்), மார்ச் 5ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும். மாணவர்கள் அபராதம் இன்றி, வரும் மார்ச் 12ஆம் தேதிக்குள்ளும், அபராதத்துடன், மார்ச் 17ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன், கல்லுாரி முதல்வர் வாயிலாக பல்கலையின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு மார்ச் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கல்லுாரி முதல்வர்கள், அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அவர்களை முன்கூட்டியே கட்டணம் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என, பாரதியார் பல்கலை, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) அறிவித்துள்ளார்.