ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையில்,
பெண் கல்விக்கு இடம் உண்டா? சமூகநீதிக்கு இடம் உண்டா?
மனுதர்மத்தை அமல்படுத்தத் துடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு
தாம்பரம், பிப்.28 ஒன்றிய அரசினுடைய தேசிய கல்விக் கொள்கையில், பெண் கல்விக்கு இடம் உண்டா? பெண்கள் படிப்பதற்கு சலுகைகள் உண்டா? சமூகநீதிக்கு இடம் உண்டா? மூன்றாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு. 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு. 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு ஏன்? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
கடந்த 23.2.2025 அன்று மாலை சென்னை தாம்பரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து – திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
சமஸ்கிருதக் கலாச்சாரத்தில், ஆணுக்கு உள்ள உரிமை, பெண்ணுக்கு உண்டா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
அதற்கடுத்தாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51–A(F) பிரிவு – அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தெரியுமா?
To value and preserve the rich heritage of our composite culture;
இதன் தமிழாக்கம்:
‘‘நமது கூட்டு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரி யத்தை மதிப்பதும், பாதுகாப்பதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்கிறது.”
‘‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்று சொல்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. அவர்கள் சொல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமானதாகும்.
அரசமைப்புச் சட்டத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!
அரசமைப்புச் சட்டத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இதனை வலியுறுத்துகின்ற ஒரே முதலமைச்சர் – இந்தியாவினுடைய ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கக்கூடிய நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர்தான்.
நம்முடைய முதலமைச்சரின் குரல், உலக ளாவிய அளவிற்கு வரவேற்கப்படக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
சமஸ்கிருத கலாச்சாரம் என்பது என்ன?
படிக்காதே என்று சொல்லுகின்ற ஒரு கலாச்சாரம். எதைக் கொடுத்தாலும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.
பகவத் கீதையில்
என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?
தாய்மார்கள், சகோதரிகள் மன்னிக்கவேண்டும். ‘பகவத் கீதை’யின்மேல் பதவிப் பிரமாணம் எடுக்கி றார்களே, அந்தப் பகவத் கீதையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?
பெண்களும், சூத்திரர்களும் ‘பாவ யோனி’யில் இருந்து பிறந்தவர்கள். அசுத்தமானவர்கள் என்று எழுதியிருக்கிறார்களே!
வடமொழியை எடுத்துக்கொண்டு, அதைப் பரப்புவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுத்துவிட வேண்டும். வெளிப்படையாக அதனைச் செய்யாமல், இப்படியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நுழைத்துக் கொண்டே வந்தால், வசதியாக இருக்கும் என்பதி னால்தான், இன்றைய ஹிந்தித் திணிப்பு. அதுதான் சமஸ்கிருதத் திணிப்பு, கலாச்சாரத் திணிப்பாகும்.
ஒரே நாடு – ஹிந்துராஷ்டிரம்
ஒரே மதம்- ஹிந்து மதம் (ஆரிய மதம்)
ஒரே கலாச்சாரம்- ஆரியக் கலாச்சாரம்
இதனைக் கொண்டு வந்து தமிழநாட்டில் திணிப்பீர்கள் என்றால், தமிழ்நாட்டுக்காரர்களாகிய நாங்கள் இளிச்சவாயர்களா? ஏமாளிகளா?
ஹிந்தித் திணிப்பை எதிர்த்து
சிறையேகிய கர்ப்பிணித் தாய்மார்கள் சிறையிலேயே உயிர்த் துறந்தனர்!
88 ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் தாய்மார்கள் வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டு சிறைச்சாலை ஏகியிருக்கிறார்கள்; அங்கேயே உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.
எனவே, எங்களை நீங்கள் அலட்சியமாக நினைக்கா தீர்கள். உங்களுடைய கூட்டணியில் இருக்கின்ற கட்சிக்கா ரர்கள் யாராவது வெளிப்படையாக, ‘‘நாங்கள், ஒன்றிய அரசின் மும்மொழித் திட்டத்தைத்தான் ஆதரிப்போம்’’ என்று சொல்லுகின்ற தைரியம் உண்டா?
இந்த நிலைக்கு என்ன காரணம்?
வெட்கப்படவேண்டிய ஒரு செய்தி!
இங்கே காய்கறிக் கடைகள் இருக்கின்றன; அந்தக் கடைகளில் எல்லா காய்கறிகளையும் வைத்திருக்கிறார்கள். யாருக்கு என்ன தேவையோ, விருப்பமோ அதைத்தானே வாங்குவார்கள். அப்படி யில்லாமல், காய்கறிக் கடைக்காரர், ‘‘இந்தப் பொருளை எடுத்தால்தான், நீங்கள் எடுத்த பொருளைக் கொடுப்போம்; இல்லையென்றால் உங்களுக்கு அபராதம் விதிப்போம்; நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கமாட்டோம்” என்று சொன்னால், காய்கறிக் கடைக்காரரை நீங்கள் சும்மா விடுவீர்களா?
ஆனால், இவர்களுக்கு இருக்கின்ற நாணயம்கூட, இன்றைக்கு டில்லியில் இருக்கின்ற ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்றால், எவ்வளவு வெட்கப்படவேண்டிய ஒரு செய்தி!
எதைச் சாப்பிடுவது என்று யார் முடிவு செய்வது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
29 ஆவது பிரிவு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய ஒவ்வொரு பகுதியையும் நினைத்துப் பார்க்கவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 29 ஆவது பிரிவு!
Protection of Interests of Minorities:
Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same..
இதன் தமிழாக்கம்:
சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல்:
இந்தியாவின் பிரதேசத்திலோ அல்லது அதன் எந்தப் பகுதியிலோ வசிக்கும் எந்தப் பிரிவைச் சார்ந்த குடிமக்களும் தமக்கென ஒரு தனித்துவமான மொழி, எழுத்து அல்லது கலாச்சாரத்தைக் கொண்டிருந்தால், அதைப் பாதுகாக்க உரிமை உண்டு.
ஜீவாதார உரிமையை
நீங்கள் பறிப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் உண்டா?
அடிப்படை உரிமை – ஜீவாதார உரிமையாகும். அந்த ஜீவாதார உரிமையை நீங்கள் பறிப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் உண்டா?
எனவே, தமிழ்நாடு போராடுகிறது; தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு நிதியைத் தராமல், பேரம் பேசுவதா? இது அசிங்கமாக இல்லையா, யாரு டைய நிதி? என்று நம்முடைய முதலமைச்சர் கேள்வி கேட்டார்கள்.
இன்னுங்கேட்டால், நிதியைத் தரவேண்டு மென்றால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் சொன்னபோது, அதற்கு உடனடியாக பதிலளித்தார் நம்முடைய முதலமைச்சர்.
முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் எங்களுடைய முதலமைச்சர்!
அதுதான் தன்மானம், சுயமரியாதை உணர்வு உள்ள மண்; அதன் காரணமாகத்தான் சொன்னார்,
‘‘5 ஆயிரம் கோடி என்ன? நீங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்; தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமே கிடையாது’’ என்று முழங்கிய முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் எங்களுடைய முதலமைச்சர்.
ஒன்றிய அரசு இப்பொழுதுதான் முதன் முதலில் இப்படி செய்கிறது என்று நினைக்கவேண்டாம்.
நல்ல வார்த்தையைச் சொன்னார் நம்முடைய முதலமைச்சர், ‘‘பிளாக் மெயில் செய்து எங்களை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள்’’ என்றார்.
அப்படி எங்களை ஒன்றிய அரசு மிரட்டிப் பார்த்தால், மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள்.
தந்தை பெரியாருடைய தலைமையை ஏற்றுத் தமிழ்க்கொடி ஏந்திய
நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்
‘‘ஓடி வந்த ஹிந்திப் பெண்ணே கேள்
நீ தேடி வந்த கோழையுள்ள நாடு
இது அல்லவே!”
என்று நம்முடைய பாவலர் பாலசுந்தரம் எழுதிய பாட்டினை, தன்னுடைய 14 வயதில் தந்தை பெரியாருடைய தலைமையை ஏற்றுப் பாடியவர்தான், தமிழ்க்கொடி ஏந்திய நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அப்படிப்பட்ட ஓர் உணர்வை உருவாக்கிக் கொண்டி ருக்கின்ற மண், இந்த மண். இந்த மண்ணி னுடைய வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். டில்லியினுடைய எஜமானர்கள் போன்று அமர்ந்து கொண்டு அலட்சியமாகப் பேசக்கூடாது.
தமிழ்நாடுதானே, என்ன செய்யும்? என்று நீங்கள் நினைக்கலாம்.
என்ன செய்யும் என்பதற்கு வேறு எங்கேயும் போகவேண்டாம்; உங்கள் ரயில்வே நிலையத்திற்குச் சென்று பாருங்கள்.
பெரியார் என்ன செய்வார்? பெரியார் மண் என்ன செய்யும்? திராவிட மண் என்ன செய்யும்? திராவிட அணி என்ன செய்யும்? என்பதை அங்கே சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. இளைய தலைமுறையினருக்கு அந்த வரலாற்றை நான் சொல்கிறேன்.
1950 ஆம் ஆண்டுகளில் பார்த்தீர்களேயானால், மும்மொழித் திட்டம் என்று ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், ரயில் நிலையத்தில் உள்ள ஊர்ப் பெயர் பொறித்தி ருக்கும் பலகையில் தாம்பரம் ரயில்வே நிலையம் என்றால், முதலில் ஹிந்தியிலும், அதற்கடுத்ததாக ஆங்கிலத்திலும், மூன்றாவதாக தமிழிலும் இருக்கும்.
தந்தை பெரியார் கொடுத்த
அந்தத் தார்ச் சட்டியும், பிரஷ்சும் என்றைக்கும் பயன்படுகிறது!
அதனை எதிர்த்து, அன்றைக்குத் தந்தை பெரியார் கொடுத்த அந்தத் தார்ச் சட்டியும், பிரஷ்சும் என்றைக்கும் பயன்படுகிறது என்பதை இன்றைக்குப் பொள்ளாச்சியில் காட்டியிருக்கிறார்கள். மற்ற மற்ற ஊர்களிலும் காட்டியிருக்கிறார்கள். அதனை நாங்கள் நிரந்தரமாக வைத்திருக்கின்றோம்.
அன்றைய காலகட்டத்தில் தார்ச் சட்டியை எடுத்து என் கைகளில் கொடுத்தவர் கலைஞர். நானும், புலவர் நன்னனும் ஹிந்தி எழுத்தைத் தார் கொண்டு அழித்தோம். அதற்காக எங்களைத் தண்டித்தார்கள்.
ஆகவே, தார்ச் சட்டியும், பிரஷ்சும் எப்பொழுதும் எங்களிடத்தில் இருக்கிறது. சில தலைவர்கள் கேட்டார்கள், ‘‘இத்தனை ஆயிரம் ராணுவத்தினரை வைத்திருக்கிறார்களே, அதற்கு முன் உங்கள் தார்ச் சட்டியும், பிரஷ்சும் என்ன செய்யும்?’’ என்று கேட்டார்கள்.
அதே மேடையில் நாங்கள் அதற்குப் பதில் சொன்னோம், ‘‘இந்தத் தார்ச் சட்டியும், பிரஷ்சும் என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள்’’ என்று.
திராவிட இயக்க ஆட்சியைத் தவிர,
வேறு ஆட்சிக்கு இங்கே இடமில்லை!
அப்படி செய்தது மட்டுமல்ல, அன்றைக்கு ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டவர்கள், இன்றுவரையில் திராவிட இயக்க ஆட்சியைத் தவிர, வேறு ஆட்சிக்கு இங்கே இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆக்கியிருக்கிறது.
அது வெறும் மொழி உணர்வு அல்ல நண்பர்களே, உரிமை உணர்வு. நாங்கள் ஒருபோதும் அடிமைகளாக ஆவதற்குத் தயாராக இல்லை என்று காட்டுவது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
நிதி தருகிறோம், நிதி தருகிறோம் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று சொல்லுகின்ற ஆட்களை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன்றைக்கே அடையாளங் கண்டுதான்,
‘‘தாயின்மேல் ஆணை!
தந்தைமேல் ஆணை!
தமிழகம்மேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமை நத்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
“தமக்கொரு தீமை” என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!’’
என்று பாடியிருப்பார்.
அதைத்தான் எங்களுடைய முதலமைச்சர் சொன்னார் ‘‘எமை நத்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்!’’
வாங்கக் கூடியவரிடத்தில் கொடுப்பார்கள். ஆனால், தொடக்கூடத் தயாராக இல்லாத மக்களை நீங்கள் தொட முடியாது. அந்த ஆட்சியை நீங்கள் தொட முடியாது.
எதற்கும் துணிந்திருக்கிறார் மக்களுக்காக – நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி தருவீர்களா? என்று இங்கே உரையாற்றிய அருள்மொழி யும் மற்ற நண்பர்கள் கேட்டார்கள்.
நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதற்காக….
மனுதர்மத்தை அமல்படுத்துவதற்காக, நம் பிள்ளை கள் படிக்கக்கூடாது என்பதற்காக மறைமுகமாக அந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வர நினைக்கிறார்கள்.
அந்தக் கல்வித் திட்டத்தைப்பற்றி தமிழ்நாடு முழு வதும் பிரச்சாரம் செய்து விளக்கிச் சொன்னோம்.
அந்தக் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறதா? ஒன்றிய அரசும் அதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்தது. தாஜா செய்து பார்த்தார்கள்; அதற்குப் பிறகு உருட்டல், மிரட்டல் செய்து பார்த்தார்கள். சாம, பேத, தான, தண்ட என்று எங்கே வேண்டுமானாலும் நீங்கள் போவீர்கள்?
ஏனென்றால், மனுதர்மத்தில் அதுதானே எழுதி யிருக்கிறது. மனுதர்மத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றுதானே அவர்கள் துடிக்கிறார்கள்.
பெண் கல்விக்கு இடம் உண்டா? சமூகநீதிக்கு இடம் உண்டா?
பெற்றோருக்குச் சொல்கிறேன், தாய்மார்களுக்குச் சொல்கிறேன், ஒன்றிய அரசினுடைய தேசிய கல்விக் கொள்கையில், பெண் கல்விக்கு இடம் உண்டா? பெண்கள் படிப்பதற்கு சலுகைகள் உண்டா? சமூக நீதிக்கு இடம் உண்டா? அதேநேரத்தில், மூன்றாவது வகுப்புக்குப் பொதுத் தேர்வு. 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு. 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு ஏன்?
(தொடரும்)