பட்டர்வொர்த், பிப். 28- மலேசியத் திராவிடர் கழகத்தின் (மதிக) தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று தத்துவங்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்த சிறப்புமிக்க தலைவர் என அவரது இரங்கல் கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
இக்கூட்டம் பட்டர்வொர்த் டேவான் டத்தோ ஹாஜி அஹ்மட் படாவி மண்டபத்தில் மதிக பினாங்கு கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தை மதிக பினாங்கு மாநில செயலாளர் மு.நாராயணசாமி வழிநடத்த, பொது இயக்கத் தலைவர்கள், கழகத் தோழர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் மேனாள் மாணவர்கள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டத்தோ விருது
மதிக பொதுச் செயலாளர் பொன்வாசகம் உரையாற்றிய போது, “மலேசியத் திராவிடர் கழகத்தை ஒரு நிலையான இயக் கமாக உயர்த்தியதில் டத்தோ ச.த.அண்ணாமலையின் பங்கு அளப்பரியது” என பாராட்டினார். அவர் கழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மற்ற இயக்கங்களுடனும், அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதிலும் முன்னணி வகித்தார். இதன் அங்கீகாரமாக, பினாங்கு மாநில அர சாங்கம் அவருக்கு உயரிய “டத்தோ” விருதை வழங்கி கவுரவித்தது.
சமூகவியலாளர் மு.வி. மதியழ கன், மதிக உதவித் தலைவர் வீ. இளங்கோவன், இந்து சங்க தேசிய உதவித் தலைவர் மா.முனியாண்டி, அய்.பி.எப் பினாங்கு தலைவர் ச.குமரேசன், கெடா மாநிலத் தலைவர் லலித்தா குமாரி, வ.கதிரவன், பத்து கவான் மாறன், மு.நாராயணசாமி, டாக்டர் முரளி, மு.மாரிமுத்து மற்றும் மேனாள் மாணவர் சங்கத் தலைவர் வேலா யுதம் உள்ளிட்ட பலர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
டத்தோ ச.த.அண்ணாமலை மதிக கிளையில் தனது சமூக சேவையைத் தொடங்கி, தொடர்ந்து விடாப்பிடியாக உழைத்து தேசியத் தலைவர் பதவிவரை உயர்ந்தார். அவரது தன்னலமற்ற சேவை, சமூக நலக் கடமை மற்றும் திராவிட இயக்கத்திற்கு அளித்த சேவையை அனைவரும் நினைவுகூர்ந்தனர்.
இக்கூட்டத்திற்கு மதிக பினாங்குத் தலைவர் செ.குணாளன் தலைமை ஏற்றார். இரங்கல் கூட்டம் ஒரு நிமிட அமைதி மற்றும் மலர் வணக்கம் செலுத்தி நிறைவு பெற்றது.