இந்து தமிழ் திசைஇதழுக்கு முதலமைச்சரின் பேட்டி
“சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கி இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாகக் கருதுகிறீர்களா?”
“எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் பாஜக. வெற்றி பெறுகிறது. தமிழ்நாட்டில் இதனை ஒருமுகப்படுத்தியதைப் போல இந்தியா முழுமைக்கும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
பாஜக-வை எதிர்க்கும் சில கட்சிகளுக்கு காங்கிரசுடன் சேர்வதில் நெருடல் இருந்தது. மாநில அளவிலான பிரச்சினைகள்தான் அவை. அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அகில இந்திய அளவில் ஒற்றைச் சிந்தனையுடன் ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்பதை ஒன்றரை ஆண்டுகளாகச் சொல்லி வந்தேன். மூன்றாவது அணி சாத்தியமில்லை; பாஜக-வை வீழ்த்தக் காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியே சரியானது என்பதை வலியுறுத்தி வந்தேன். அதுதான்,’இந்தியா’ கூட்டணியாக உருப்பெற்றுள்ளது”
“வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளாத திமுக ஆட்சியின் முக்கியமான 3 சாதனைகள் என்று எதைக் கூறுவீர்கள்?”
* “பேருந்துகளில் மகளிருக்கான ‘விடியல் பயணம்’ திட்டம்.
* மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.’
* பள்ளிக் குழந்தைகளுக்கான ‘முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம்.’
இந்த மூன்றும் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்ற திராவிட மாடல் அரசின் முத்தான மூன்று சாதனைத் திட்டங்கள். இத்துடன் சாதனைகள் நிறைவடைந்து விடவில்லை. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம். முதல்வரின் முகவரி, முதலீட்டாளர்களின் முதல் முகவரி என கல்வி, மருத்துவம்,தொழில், கட்டமைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சாதனைத் திட்டங்கள் நிறைய உள்ளன”
இரண்டு திராவிடக் கட்சிகள் தவிர வேறுகட்சிகள் காலூன்றிவிடக் கூடாது என அதிமுக-வின் பழனிசாமியுடன் நீங்கள் கைகோத்துச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?”
“பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிடக் கட்சியாக நினைப்பது இல்லை. அவர்களுக்கும் திராவிடக் கொள்கைக்கும் தொடர்பு இல்லை. அண்ணாவுக்கும் அவர்களுக்கும் கூட எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கொள்கைக்கு எதிராகக் கட்சி நடத்துவதுதான் அந்தக் கூட்டம். அவர்களோடு கை கோத்துள்ளோம் என்பது மிகத் தவறான குற்றச்சாட்டு. தமிழ்நாடு என்பது பெரியார் மண்! சமூகநீதி மண்! தமிழன் என்ற இன உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண்! இங்கு மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது. இதனை பாஜக முதலில் உணரவேண்டும். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லையே என்ற வேதனையோடு இந்த அவதூறு கிளப்பப்படுகிறது. பருத்தி விளையும் மண்ணில் பேரிக்காய் விளையாது என்பதை பாஜக. முதலில் உணர்ந்து திருந்த வேண்டும்”
– இந்து தமிழ் திசை, 1.4.2024