குளித்தலை, பிப்.27- குலதெய்வ ேகாயிலுக்கு சென்றபோது குளித் தலையில் நேற்று (26.2.2025) அதிகாலை காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர். இச்சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், குனியமுத்தூர் காந்தி நகர் சுகுனாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (52), பெயின்டர். இவரது மனைவி கலையரசி (50), மகன் அருண் (25), மகள் அகல்யா (26). இதில் அருண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. அகல்யாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இந்நிலையில் செல்வராஜ் குல தெய்வ கோயிலான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலில் சாமி கும்பிட மனைவி, மகன், மகளுடன் காரில் 25.2.2025 அன்று இரவு புறப்பட்டார். காரை அருணின் நண்பரும், மென்பொறியாளருமான ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியை சேர்ந்த விஷ்ணு (25) ஓட்டினார்.
நேற்று (26.2.2025) அதிகாலை 2.30 மணியளவில் கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து திருச்சி வழியாக திருப்பூருக்கு சென்ற அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பேருந்துக்கு அடியில் கார் பாதி அளவு சிக்கி நசுங்கியது. இதில் காரில் இருந்த 5 பேரும் இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி…
தகவலறிந்து முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள், குளித்தலை காவல் துறையினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த 5 பேரின் உடல்களையும் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு, உடற்கூராய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி. பெரோஸ்கான் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மருத்துவமனைக்கு நேரில் சென்று 5 பேரின் உடல்களை பார்வையிட்டார். விபத்து குறித்து செல்வராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 35 பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் காயமின்றி தப்பினர்.
இதையடுத்து திருப்பூர் சென்ற வேறு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் திருப்பூரை சேர்ந்த லோகநாதனை(51) குளித்தலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த விஷ்ணு சில நொடிகள் கண் அயர்ந்து விட்டதால், இந்த விபத்து நடந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.