தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தக’ங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கல்வியும், மருத்துவமும்தான் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள். சுதந்திர தினத்தன்று நான் அறிவித்த ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்வர் மருந்தகங்களைத் தொடங்க ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மருந்துகளுக்கு மக்கள் அதிக அளவில் செலவு செய்வதைத் தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டோம். சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு உதாரணம் தான் இந்த முதல்வர் மருந்தகங்கள். மாவட்ட மருந்துக் கிடங்குகளில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களுக்கு 48 மணி நேரத்தில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும். கரோனா காலத்தில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்தோம். தமிழ்நாட்டில் 8.57 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் காலத்தை உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு மக்களின் தனித்தனி தேவைகளை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாட்டுக்கு முன்மாதிரியாக வழிகாட்டியாக கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் உள்ளன. ஒன்றிய அரசு நிதி வழங்காமல் இருந்தாலும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பது இல்லை. ‘முதல்வர் மருந்தகம்’ தொடங்கப்பட்ட நோக்கம் சிதையாமல் செயல்படவேண்டும். ‘முதல்வர் மருந்தக’ங்கள் மேலும் அதிகரிக்கப்படும். ‘முதல்வர் மருந்தக’ங்கள் திட்டத்தின் நோக்கம் சிதையாமல் அதை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்,” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
பொதுவாக ஒரு நல்ல ஆட்சியை ‘மக்கள் நல அரசு’ (Welfare State) என்று குறிப்பிடுவது உண்டு. இந்த இலக்கணத்திற்கு நூறு விழுக்காடு பொருத்தமானது – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசாகும்.
தேர்தல் வாக்குறுதிகள் என்பது பொதுவாக சம்பிரதாயமானதுதான் – தேர்தல் அறிக்கையும் ஒரு சடங்காச்சாரமானது என்று தான் வாக்காளர்கள் கருதுவார்கள்.
அந்த எண்ணத்தை மாற்றி, தேர்தல் அறிக்கை என்பது தேர்தலின் கதாநாயகன் என்ற நம்பிக்கையை மக்களிடம்
நினை(லை)க்க வைத்தது திமுகவே!
இந்த ஆட்சியை வீழ்த்த எத்தனைக் கெஜ குட்டிக்கரணம் போட்டாலும், யாராலும் முடியாது, முடியவே முடியாது.
ஒன்றியத்தில் அதிகாரம் இருக்கிறது – ஊடகங்களின் பலம் இருக்கிறது என்று பிஜேபியோ, சங்பரிவார்களோ தப்புக் கணக்குப் போட்டால், தலைக்குப்புற விழ வேண்டியதுதான்.
உண்மையைச் சொல்லப் போனால் திமுகவுக்கு எதிரி என்று சொல்லத்தக்க கட்சிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்ட ஒற்றுமைப் பலத்துடன் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை சந்தித்து இந்தியத் துணைக் கண்டமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றிட வேண்டும் – வெற்றியை ஈட்டுவார்கள் என்பது கல்லின் மேல் எழுத்து!