மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொன்னது கிடையாது!
அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ‘‘மொழிகள்’’ (Languages) என்று உள்ள தலைப்பில் ‘‘ஹிந்தி தேசிய மொழி’’ என்று எங்கேயாவது இருக்கிறதா?
தாம்பரம், பிப்.27 மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொன்னது கிடையாது. ‘தேசியம்’ என்ற வார்த்தையை சொல்லும் தேசியத்தார்களைப் பார்த்து நாங்கள் கேட்கின்றோம். அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ‘‘மொழிகள்’’ (Languages) என்று உள்ள தலைப்பில் ‘‘ஹிந்தி தேசிய மொழி’’ என்று எங்கேயாவது இருக்கிறதா? என்று வினா எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
கடந்த 23.2.2025 அன்று மாலை சென்னை தாம்ப ரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘‘ஹிந்தி அஃபிசியல் லாங்வேஜ்’’ என்று சொல்லு கின்ற நேரத்தில், அங்கேயே ஒரு பேதக் கோட்டைப் போட்டிருக்கிறார்கள்.
The Official Languages of the Union shall be Hindi என்று சொல்லும்பொழுது, ஹிந்தி என்று மொழியை மட்டும் சொல்லவில்லை. அதற்கடுத்ததாக Hindi in Devanagari script என்று சொல்லியிருக்கிறார்கள்.
எங்களுடைய கேள்விக்குப்
பதில் சொல்லுங்கள்!
அதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. பல பேருக்கு இது தெரியாது. தெரிந்தவர்கள் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராக இருந்தாலும் எங்களு டைய கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.
எங்களைப் பொறுத்தவரையில், திறந்த மனதோடு இந்தப் பிரச்சினையை அணுகுகின்ற பகுத்தறிவுவாதிகள். எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் விருப்பு – வெறுப்பு என்பது கிடையாது.
மாறாக, நீங்கள் மொழியைச் சொல்லுகின்ற நேரத்தில்கூட நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? தேவநகரி என்றால், கடவுள் பாஷை – தேவர்கள் பேசிய கடவுள் பாஷையாம்.
ஏனென்று கேட்டால், முதலில் வரும்பொழுதே, உருது மொழியை அழித்துவிட்டுத்தான் தேவநகரி வருகிறது.
வரும்பொழுதே பேதத்தை உண்டாக்குகிறார்கள்.
அண்ணல் காந்தியார்
விரும்பிய மொழி எது?
அண்ணல் காந்தியார் எது ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்று சொன்னார் என்றால், இந்துஸ்தானி என்று அவர் சொன்னார்.
இந்துஸ்தானி என்பது என்னவென்றால், பாசறை மொழியாகும். ராணுவ வீரர்கள் எடுக்கின்ற உறுதிமொழி. உருதுவும் – ஹிந்தியும் கலந்ததுதான் இந்துஸ்தானி.
அந்த உருதுமொழிதான் நீண்ட காலமாக இருந்தது. சமஸ்கிருத இணைப்பு என்பது பிறகு பார்ப்பனியம் உள்ளே நுழைந்து, மிக சாமர்த்தியமாக பேதத்தை ஏற்படுத்தினார்கள். வித்தியாசத்தை ஏற்படுத்தினார்கள்.
‘‘சமஸ்கிருதம் யாருக்குத் தாய்மொழி?’’
அதுமட்டுமல்ல, எல்லா மொழிகளையும் படியுங்கள், படியுங்கள் என்று இன்றைக்குச் சொல்கிறீர்களே, தாய்மொழி, தாய்மொழி என்று சொல்கிறீர்களே, ‘சமஸ்கிருதம் யாருக்குத் தாய்மொழி?’
அரசமைப்புச் சட்டப்படி நான் பேசுகிறேன். அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணை யில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?
இந்தப் புத்தகத்தை (அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பதிப்பு) ராகுல் காந்தி அவர்கள், எல்லா மேடைகளிலும் எடுத்துக் காட்டியவுடன், இப்போது நிறைய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கொடுத்தி ருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் மொழியைப் பொறுத்து இருக்கக்கூடியது.
ஆரம்பத்தில் 14 மொழிகள். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தார்கள். ஏனென்றால், அந்தந்த மாநில மக்களைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காக, அம்மாநில மொழிகளைச் சேர்த்தார்கள்.
அதற்கு என்ன தலைப்பு என்றால், (22 மொழி களுக்குத் தலைப்பு) ‘மொழிகள்’ (Languages).
இந்திய அரசமைப்புச் சட்டத்தில்
ஹிந்தி தேசிய மொழி என்று
எங்கேயாவது இருக்கிறதா?
தேசியம் என்ற வார்த்தையைச் சொல்லுகிறீர்களே, தேசியத்தார்களே – அவர்களைப் பார்த்து நாங்கள் கேட்கின்றோம். அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ‘மொழிகள்’ (Languages) என்ற தலைப்பு இருக்கிறதே, அதில், ‘‘ஹிந்தி தேசிய மொழி’’ என்று எங்கேயாவது இருக்கிறதா? தயவு செய்து காட்டுங்கள் பார்க்கலாம்?
அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த கர்த்தாக்கள் ஏன் அதைச் செய்யவில்லை. இத்த னைக்கும் பார்ப்பனர்கள் அந்த வரைவுக் குழுவில் பெரும்பான்மையானவர்களாக இருந்தார்கள். அம்பேத்கர் அவர்கள்கூட, ‘‘வாடகைக் குதிரையாக என்னைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்’’ என்று மனம் நொந்து சொன்னார்.
எட்டாவது அட்டவணையில் உள்ள
22 மொழிகள்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்ட வணையில் உள்ள 22 மொழிகள் பின்வருமாறு::
அசாமி: இந்தியாவின் ஒரு பாரம்பரிய மொழி
பெங்காலி: இந்தியாவின் ஒரு பாரம்பரிய மொழி
போடோ: 2003 ஆம் ஆண்டு 92 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
டோங்ரி: 2003 ஆம் ஆண்டு 92 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
குஜராத்தி: ஒரு இந்தோ-ஆரிய மொழி
கன்னடம்: கருநாடகாவில் பேசப்படும் ஒரு திராவிட மொழி.
காஷ்மீர்: காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அதி காரப்பூர்வ மொழி
கொங்கனி: 1992 ஆம் ஆண்டு 71 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
மணிப்பூரி: 1992 ஆம் ஆண்டு 71 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
மைதிலி: 2003 ஆம் ஆண்டு 92 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
மராத்தி: இந்தியாவின் ஒரு பாரம்பரிய மொழி
நேபாளி: 1992 ஆம் ஆண்டு 71 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
ஒடியா: இந்தியாவின் ஒரு பாரம்பரிய மொழி
(ஒரியா: என்று இருந்தது – 96 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் எழுத்துப்பிழை நீக்கி ஒடியா என மாற்றப்பட்டது).
பஞ்சாபி: எட்டாவது அட்டவணையில் உள்ள ஒரு மொழி
சமஸ்கிருதம்: இந்து மதத்தின் ஒரு வழிபாட்டு மொழி
சிந்தி: 1967 ஆம் ஆண்டு 21 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது.
தமிழ்: தொன்மைமிக்க மொழி– எட்டாவது அட்ட வணையில் உள்ள ஒரு மொழி
தெலுங்கு: தொடக்கம் முதலே எட்டாவது அட்ட வணையில் உள்ள மொழி.
உருது: எட்டாவது அட்டவணையில் உள்ள ஒரு மொழி
சாந்தாலி : 2003 ஆம் ஆண்டு 92 ஆவது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.
ஹிந்தி, இந்தியா முழுவதும் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழி. ஆகவே, நீங்கள் பெரும்பான்மை யைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். இப்பொழுது அந்த வாதத்தைச் சொல்வ தில்லை.
‘‘ஏன் நீங்கள் ஹிந்தியை எதிர்க்கிறீர்கள்; இங்கிலீஷ்தான் வேண்டும் என்று சொல்கிறீர்களே, பெரும் பான்மையோர் பேசுகின்ற மொழி ஹிந்தி மொழி யாயிற்றே’’ என்று மாநிலங்களவையில் சொன்னார்கள்.
மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நாங்கள் கேட்டகேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொன்னது கிடையாது.
நாடாளுமன்றத்தில் அண்ணாவின் கேள்வி!
அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து சொன்னார், ‘‘சரி; பறவைகளில் மிக அதிகமாக, பெரும்பான்மை இருக்கின்ற பறவை காக்கைதான். ஆனால், தேசியப் பறவை என்று நீங்கள் மயிலை தேர்ந்தெடுத்தீர்களே? ஏன் மயிலை தேர்ந்தெடுத்தீர்கள்? பெரும்பான்மையாக இருக்கின்ற காகத்தைத் தானே நீங்கள் தேசிய பறவை யாகத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்” என்று கேட்டார்.
அதற்குப் பிறகு அனைவரும் வாயை மூடிக் கொண்டனர்.
புள்ளி விவரத்தோடு எழுதியிருக்கின்றோம்!
பெரும்பான்மை, பெரும்பான்மை என்று சொல்லு கிறீர்களே, இப்பொழுது சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். நேற்றைய ‘விடுதலை’யை வாங்கிப் பாருங்கள்; எத்தனை மொழியை ஹிந்தி மொழி அழித்திருக்கின்றது என்பதை புள்ளி விவரத்தோடு எழுதியிருக்கின்றோம்.
எனவே, ஒரு கலாச்சாரத்தை அழிக்கவேண்டுமானால், ஓர் இனத்தை அழிக்கவேண்டுமானால், நாகரிகத்தை அழிக்கவேண்டுமானால், முதலில் அவர்களுடைய மொழியில் வைப்பார்கள்.
மாநிலங்களவைத் துணைத் தலைவரின் ஒப்புதல்!
தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ நேற்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ‘‘ஒரு நிலத்தைக் கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி’’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர்களுக்குள் என்ன சண்டையோ தெரியவில்லை. பச்சையாக பூனைக் குட்டி வெளியே வந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்குச் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாடு என்ற உணர்வு இருக்கக்கூடாது – தமிழின உணர்வு என்று சொன்னாலே எங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லக்கூடிய அளவிற்குத்தானே இருக்கிறார்கள்.
ஆகவே, மிக முக்கியமாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் எங்கேயேயும் தேசிய மொழி என்று இல்லை.
‘‘அடிப்படைக் கடமைகள்!’’
அடுத்ததாக, அரசமைப்புச் சட்டத்தில் 51-ஏ என்ற பிரிவில் ‘‘அடிப்படைக் கடமைகள்’’ என்று ஒன்று உண்டு.
நாங்கள் அடிக்கடி சொல்வோம், பகுத்தறிவு மனப்பான்மையை உண்டாக்கக் கூடியது
‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ என்று அடிக்கடி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்திருக்கின்றோம். இந்தியா முழுவதிலும் இதைத்தான் அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதைவிட மிக முக்கியம் இன்றைய சூழ்நிலையில், சுட்டிக்காட்டப்படவேண்டிய அடிப்படைக் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் – இந்தியா முழுமைக்கும் – தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்காரன்தான் புத்திசாலி, முதலில் புரிந்துகொண்டான். அதனால் எடுத்துச் சொன்னோம். நாங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை, இப்பொழுதுதான் மற்றவர்கள் பின்பற்றக் கூடிய அளவிற்கு இருப்பார்கள்.
தந்தை பெரியாரின்
‘இனிவரும் உலகம்’ உரை!
ஏனென்றால், ‘இனிவரும் உலகம்’ என்ற தலைப்பில், தந்தை பெரியார் பேசிய உரையில், அன்றைக்கே பரிசோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவார்கள் என்று சொன்னார்.
இன்றைக்கு எங்கே பார்த்தாலும் கருத்தரிப்பு மய்யம் என்று இருக்கிறதே, அதற்கு என்ன அர்த்தம்? பிரம்மாவிற்கு வேலை இல்லை என்று அர்த்தம்.
அவர்தான் பிண்டம் பிடித்து போடுகிறார் என்றெல்லாம் சொல்வார்கள். இப்பொழுது பிரம்மா அவுட் ஆஃப் எம்ப்ளாயிண்ட்மெண்ட்.
70 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டக் கல்வெட்டின்மீது
தலை வைத்து வணங்கிய மோடி!
நம்முடைய பிரதமர் இருக்கிறாரே, மிக அற்புத மான பிரதமர்!! எல்லோரும் பதவியேற்பின்போது, பிரமாண உறுதிமொழியை மட்டும் சொன்னார்கள். ஆனால், இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும்பொழுது மோடி அவர்கள், மேடை யிலிருந்து கீழே இறங்கினார். சரி, அவருடைய குருநாதரையோ, மற்ற யாரையோ பார்க்கப் போகிறார் என்று நாங்களெல்லாம் நினைத்தோம்.
மோடி என்ன செய்தார் என்றால், கல்வெட்டு போன்று ஒன்று இருந்தது. அதன்மீது தலை வைத்து கொஞ்சம் நேரம் வணங்கினார். அந்தக் கல்வெட்டு என்னவென்று பார்த்தால், அது இந்திய அரசமைப்புச் சட்டம்தான்.
அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவின் உட்பிரிவில்…!
அதாவது, அரசமைப்புச் சட்டத்தின்மீது அவ்வளவு பக்தியாம் அவருக்கு! அதில் இருக்கும் எல்லா பகுதிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டாம். ஒன்றே ஒன்றை எடுத்துச் சொல்கிறோம்.
It shall be the duty of every citizen of India
என்று சொல்வதில், ‘E’ பிரிவைப் பாருங்கள்!
to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic and regional or sectional diversities; to renounce practices derogatory to the dignity of women;
இதன் தமிழாக்கம்:
மத, மொழி, பிராந்திய அல்லது பிரிவு வேறு பாடுகளைக் கடந்து, இந்திய மக்கள் அனைவருக்கும் இடையே நல்லிணக்கத்தையும், பொதுவான சகோ தரத்துவ உணர்வையும் வளர்ப்பது; பெண்களின் கண்ணி யத்திற்குக் கேடு விளைவிக்கும் நடை முறைகளைக் கைவிடுவது ஆகியவற்றை முன்னிறுத்தவேண்டும்.
இவை அத்தனையும் செய்யவேண்டும் என்றால், சமஸ்கிருத கலாச்சாரத்தில் உண்டா? மனுதர்மத்தில் பெண்களை மதித்திருக்கிறார்களா?
சமஸ்கிருத கலாச்சாரத்தில், ஆணுக்கு உள்ள உரிமை, பெண்ணுக்கு உண்டா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
அதற்கடுத்தாக ‘F’ இல் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தெரியுமா? (தொடரும்)