சென்னை,பிப்.26- மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் (24.2.2025) நடைபெற்றது.
மாநில திட்டக் குழுவால் இதுவரை தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட அரசின் முன்னோடி திட்டங்களுக்கான மதிப்பீட்டு ஆய்வுகள், சிறப்பு ஆய்வுகள் குறித்தும், தற்போது நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்தும், மாநில திட்டக் குழுவால் நடைமுறைப்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்கள் குறித்தும் துணை முதலமைச்சர் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களால், தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் உள்ள சாமானிய மக்கள் முதல் நகரத்தில் வாழும் மக்கள் வரை எந்த அளவில் பயன் பெற்றுள்ளார்கள், இந்த திட்டங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்கள், மாற்றங்கள் குறித்து திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த புள்ளி விவரங்களை துணை முதலமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், முதலமைச்சரின் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலர் எஸ்.சுதா, முழு நேர உறுப்பினர் இராம.சீனுவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினர் ம.விஜயபாஸ்கர் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.