பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

திருச்சி,பிப்.25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில் 22.2.2025 அன்று காலை 11.00 மணியளவில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன்னிலை வகிக்க, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளரும், தமிழ்நாடு அரசின் தூயத்தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவருமான தமிழ்ப்பணிச் செம்மல் டி.இராஜபிரபா சிறப்புக் கருத்தாளராகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

தனது சிறப்புரையில், பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களாகிய நீங்கள் உங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய மதிப்பு வழங்கி, அவர்கள் வழங்கும் அறிவுரைகளை உங்கள் வாழ்விற்கான வழிகாட்டும் மொழிகளாக ஏற்று நடப்பதே வாழ்வில் முன்னேறுவதற்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்கள், தன்னிடம் வரும் பொருட்களில் நல்லதை வெளியேற்றி கசடுகளை மட்டும் தங்க வைக்கும் சல்லடையாக இருக்காமல், தன்னிடம் உள்ள கசடுகளை வெளியேற்றி தூய்மையானவற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் முறமாக தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *