குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தான் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் தெரியாத வெளிமாநில ஓட்டுநர்கள் வந்தால் என்ன செய்வார்கள் என்று கேட்டால், அவர்கள் குஜராத் மண்ணில் வாகனம் ஓட்டும் போது குஜராத்தி மொழி கற்றுக்கொள்ளட்டும் என்று அங்குள்ள நெடுஞ்சாலைத்துறை வாரியம் பதில் கூறுகிறது.
நீண்ட ஆண்டுகளாக மகாராட்டிராவில் மோடியின் புகழ்பாடிக்கொண்டிருந்த பிரபல அமித் பகேரா என்ற மராட்டிய கவிஞர்
ஹிந்தி எதிர்ப்பு தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் அதை ஆங்கிலத்தில் எழுதி பகிர்ந்துள்ளார்.
அதில்,
‘‘ஆம் 40 ஆண்டுகளாக ஹிந்தியால் மெல்ல மெல்ல மராட்டியை இழந்துவருகிறோம் எங்களுக்கே தெரியவில்லை, ஹிந்தி மாராட்டியை அழித்துக்கொண்டு இருக்கிறது என்று, இன்றும் மாட்டுக் கூட்டம் (ஹிந்தி பேசும் மாநிலத்தை மாராட்டியர்கள் இப்படி அழைக்கிறார்கள்) இங்கு வந்து எங்களது மொழியை ஏளனம் செய்யும் போதுதான் தாமதமாக உணர்ந்தோம், எங்களுக்குத் தேச உணர்வு என்ற பெயரில் ஹிந்தியை எதிர்க்கக்கூடாது என்று ஏதோ ஒருவகையில் பிணைத்து எங்களை அடக்கி வைத்திருந்தார்கள்; விளைவு – இன்று மராட்டிய நகரங்களில் மராட்டி மொழி காணாமல் போய்க்கொண்டிருக்கும் நிலைகடந்து – கிராமங்களில் கூட மராட்டியின் இடத்தை ஹிந்தி பிடித்துக்கொண்டு விட்டது. எங்கள் சிற்றுண்டி உணவை நாங்கள் மறந்துவிட்டு ஹிந்திக்காரர்கள் மூலைக்கு மூலை விற்பனை செய்யும் பானிபூரி, சேவ்பூரி போன்ற எங்கள் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உணவை குழந்தைகள் விரும்பிச்சாப்பிடும் நிலையை உருவாக்க இடம் கொடுத்து விட் டோம்’’ என்று வருத்தத்தோடு பதிவிட்டிருந்தார்.
ஒரு மொழி என்ன செய்யும் என்பதற்கு மராட்டிய எழுத்தாளர், கவிஞர் பகிர்ந்துள்ள இந்தக் காரணங்கள் போதுமானவை.
இதையே தமிழ்நாடில் உள்ளோர் பதி விட்டிருந்தால் ‘‘அய்யய்யோ! மொழி துவேஷம்! மொழி துவேஷம்!’’ என மூர்க்கத் தனமாகக் கத்துவார்கள் – கதறுவார்கள்.
இப்பொழுது மகாராட்டிராவிலேயே ஹிந்திக்கு எதிரான குரல் கிளம்பி விட்டதே – என்ன செய்யப் போகிறார்கள் – என்ன சொல்லப் போகிறார்கள்?
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சொல்லியிருக்கிறாரே!
‘‘ஒரு நிலத்தைக் கைப்பற்றுவதற்கு, அதன் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி! – நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் இதைத்தான் செய்தார்கள்’’ என்று பேசி இருக்கிறாரே – இதற்கு என்ன பதில்?
ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என்பது பண்பாட்டுப் படையெடுப்பு என்று திராவிடர் கழகம் கருத்தாகக் கூறுவதும், பரப்புரை செய்வதும் எவ்வளவுப் பெரிய உண்மை என்பது புரிகிறதா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வீட்டுப் பிள்ளைகளுக்கே ஆதிகேசவன், நிஜலிங்கம், கஜலட்சுமி என்றெல்லாம் பெயர் சூட்டியிருப்பது எதைக் காட்டுகிறது?’ மொழி ஊடுருவலால் ஏற்பட்ட பண்பாட்டுப் படை எடுப்புத்தானே – எச்சரிக்கை! எச்சரிக்கை!!