எச்சரிக்கை! ஆன்லைன் டிரேடிங் – ஆசை வார்த்தை கூறி ஆசிரியையிடம் மோசடி செய்தவர் கைது

viduthalai
3 Min Read

சென்னை,பிப்.24- இணைய வழி விற்பனைத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை

சென்னை பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த சிறீபிரியா (37) என்பவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு அவரது நண்பர் மூலம் சேலம் மாவட்டம், ஆத்தூர், புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர், சென்னை வடபழனி, அழகிரி மெயின் ரோட்டில் இணையவழி விற்பனை (ஆன்லைன் டிரேடிங்) நிறுவனம் நடத்தி வருகிறார்.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக சிவகுமார் ஆசை வார்த்தை கூறியதை நம்பி ஆசிரியை சிறீபிரியா கடந்த 2019ஆம் ஆண்டு பல தவணைகளாக மொத்தம் ரூ.12 லட்சம் முதலீடு செய்துள்ளார். எனினும், உறுதி அளித்தபடி லாபம் தரப்படவில்லை என்றும் கொடுத்த பணமும் திருப்பித்தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தான் நடத்தி வந்த ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை மூடிவிட்டு சிவகுமார் தலைமறைவாகி உள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சிறீபிரியா இது குறித்து 2020ஆம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தலைமறைவான சிவகுமார் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

தலைமறைவானவர்களை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளை தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், கைதான சிவகுமார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவ காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு எழும்பூரில்
3 நாள் நடைபெறுகிறது

சென்னை,பிப்.24- தமிழ்நாடு சுகாதார துறையில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாடு சுகாதார துறையில் 2553 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 24,000 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் 4,585 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். அதன்பிறகு கூடுதலாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் 89 சேர்த்து 2642 மருத்துவர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு எழும்பூரில் நடக்கிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள், 15 நாட் களுக்குள் அந்தந்த மருத்துவ மனைகளில் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கு, அவர்கள் விருப்பப்படும் இடங்கள் கிடைக்காது, இறுதியாக காலியாக உள்ள இடங்களில் பணியமர்த் தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கும் விழா வரும் 26ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வன்சன் சென்டரில் நடக்கிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருந்தால்…

மருந்து அட்டைகளில் இருக்கும் இந்த குறியீடு மிகவும் முக்கியமானது. சிவப்பு கோடு இருக்கும் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளவே கூடாது என ஒன்றிய அமைச்சகம் அறிவுறுத்துகிறது. இந்த சிவப்பு கோடு, Antibiotics மருந்துகளில் காணப்படும். ஆகவே, மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், உடல்நல பிரச்சினைகள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

‘பாபா’ ஜோதிடம் பொய்த்தது!

நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான்தான் வெற்றி பெறும் என்று அய்அய்டி பாபா கணித்திருந்தார். அந்த கணிப்பை பொய்யாக்கி, இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து சோசியல் மீடியாவில் பாபாவை ரசிகர்கள் பஞ்சராக்கி வருகின்றனர். அய்அய்டியில் படித்து முடித்துவிட்டு சன்னியாசியான பாபா, கும்பமேளாவில் புகழடைந்தார். ஆனாலும், வருங்கால கணிப்புகள் அவருக்கு கை வராத கலை போல.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *