பக்… பக்தீ….!

Viduthalai
2 Min Read

கேள்வி: லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நதியில் நீராடும்போது நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது அல்லவா?
பதில்: நாம் இதை எழுதும்வரை கும்பமேளாவில் 45 கோடி பேர் நீராடியிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் தொற்று நோய் வருமேயென்ற பயம் இல்லை. காரணம் பக்தி. பக்தி இருந்தால் பயம் இல்லை.
(‘துக்ளக்’, 26.2.2025, பக்கம் 28)
பதிலடி: நாம் இதை எழுதும் வரை என்று எழுதியதிலிருந்தே ஒன்று மட்டும் உறுதியாகிறது. இனிமேல் நோய்த் தொற்றும் என்ற அய்யப்பாடு குருமூர்த்தி அய்யர்வாளுக்கு உள்ளுக்குள் குத்துகிறது – குடைகிறது என்பது தெரிகிறது.
குருமூர்த்தி கும்பலுக்கு இதோ ஒரு டாக்டர் பதிலடி:
கும்பமேளா நீரைக் குடித்தவர் கோமாவில் செல்லும் நிலைக்கு இலக்காகிவிட்டதாக மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் தீப்ஷிகா கோஷ் என்ற மருத்துவர் வெளியிட்ட பதிவில்,
‘‘என்னிடம் மிகவும் அவரச சிகிச்சைக்கு பெண் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். அவர் கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் முழுக்குப் போட்டுள்ளார். அப்போது அதிக அளவு மலத்துகள்கள் கலந்த நீர் அவரது மூக்கில் சென்றுவிட்டன. அதில் உள்ள ஆபத்தை விளைவிக்கும் கிருமிகள் நேரடியாக அவரது நுரையீரலை அடைந்துவிட்டன. இதனால் அவர் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நுரையீரல் சரியாக வேலை செய்யாத காரணத்தால், செயற்கைக் கருவி (வெண்டிலேட்டர்) மூலம் ஆக்சிஜன் உடலில் செலுத்தப்பட்டு வருகிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு மிகவும் ஆபத்தான மூறையில் குறைந்துவிட்டது. இதனால் அவர் கோமா நிலைக்குச் செல்லும் துவக்க நிலையில் உள்ளார்.
மத நம்பிக்கை முக்கியமானதுதான். அது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், சில நேரங்களில் உயிரைக் காப்பாற்ற அறிவியல் தான் முன்னுக்கு நிற்கிறது.
இது போன்று ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால், ஏதோ ஒரு நிர்ப்பந்தம் இதை எவரும் வெளியே சொல்லத் தயங்குகின்றனர்.
உயிர் இருந்தால் தான் சாமி கும்பிடமுடியும்; சாமிகும்பிடுவதற்காக உயிரை விடாதீர்கள்’’ என்று பதிவு செய்திருந்தார் அந்த டாக்டர்.
இதற்கு என்ன பதில் ‘துக்ளக்கே’?

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *