புதிய கல்வி: பீகாரில் தோல்வி!
சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு
ராமநாதபுரம்,பிப்.23- சாமானிய ஏழை எளிய பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம்தான் புதிய கல்விக் கொள்கை திட்டம் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கையை அரசியலாக்கவில்லை.அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்திற்கான நிதியை நிறுத்தி ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது. 2022ஆம் ஆண்டு பீகார் மாநிலம் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. அச்சமயத்தில் அங்கு 51 சதவீதம் பேர் பள்ளிக் கல்விக்கு வந்திருந்தார்கள்;
ஆனால் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் 31 சதவீதம் மட்டுமே வந்துள்ளார்கள்; தேர்வில் தேர்ச்சி பெறாத 20 சதவீதம் பேர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சாமானிய ஏழை எளிய பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம்தான் புதிய கல்விக் கொள்கை திட்டம். ஹிந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காக வே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர். சமக்ர சிக்க்ஷா’ போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது.எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.