தீட்சதர்களின் அடாவடி செயல்

viduthalai
2 Min Read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள்
ஓரமாக நின்று வழிபாடு செய்ய வேண்டுமா?
தீட்சதர்களின் அடாவடி செயலுக்கு உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கடும் எதிர்ப்பு

சென்னை,பிப்.23- சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனகசபை மீது நின்று
பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர்? என்ன நடைமுறை பின்பற்றப் படும்? என்பன குறித்த திட்ட விவரங்களை தாக்கல் செய்யப்படும் என பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும், நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காலை பூஜை களுக்கு இடையில் கனகசபையில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏதுவாக சாய்வுதளப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை தரப்பு வழக்குரைஞர், “பக்தர்கள் சுவாமிக்கு எதிரில் நின்று தரிசனம் செய்ய வேண்டும்.

அதை விடுத்து ஒரு ஓரத்தில் நின்று தரிசனம் செய்து கொள்ள பக்தர்களை அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது,”என்று வாதிட்டார்.
கூடுதல் வழி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கோயில் திறந்திருக்கும் 11 மணி நேரத்தில், ஆறு கால பூஜைகள் பால் நெய்வேத்தியம் உள்ளிட்ட பிற பூஜைகள் 8 மணி நேரம் நடத்தப்படுகிறது. மீதமுள்ள 3 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய ஏதுவாக, ஒரே வழியில் சென்று வருவதை தவிர்த்து கூடுதல் வழியை ஏற்படுத்துவது குறித்து கட்டடக்கலை வல்லுனர்களுடன் ஆலோசித்து திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்,” என்று பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும் கருத்துகளை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *