தந்தை பெரியாரை அவதூறாகப் பேசவில்லையாம்!

2 Min Read

சீமான் அந்தர் பல்டி!

சென்னை,பிப்.23- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சமீபகாலமாக அவதூறாக பேசி வருகிறார். தந்தை பெரியார், தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என பேசினார்; திருக்குறளை தங்கத் தட்டில் வைத்த மலம் என்றார்; பெண்களின் கர்ப்பப் பைகளை அகற்றச் சொன்னார்; திருமணமான பெண்கள், விரும்பிய ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என பிரச்சாரம் செய்தார்; தமிழ்ச் சமூகத்தை சீர்திருத்துவதாக சொல்லி தமிழ்ச் சமூகத்தை சீரழித்தவர்தான் பெரியார் என்பது சீமானின் விமர்சனம்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூறியதாலேயே பெரியாரை எதிர்த்து பேசுவதாகவும் சீமான் கூறினார். அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தந்தை பெரியாரின் தொண்டர்கள் மீது பிரபாகரன் கொடுத்து அனுப்பிய வெடிகுண்டுகளை வீசுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார்
சீமானின் இந்த இழிவான பேச்சுகளுக்கு எதிராக சென்னை உட்பட பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையில் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சீமானை கைது செய்யக் கோரி பெரியார் இயக்க தொண்டர்கள் புகார் மனு கொடுத்தனர்.

இந்த புகார் மனுக்களின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து சீமானுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அழைப்பாணைகளை ஏற்று சீமான் ஆஜராகாத நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீடு மற்றும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று காவல் துறையினர் அழைப்பாணையை வழங்கினர்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “தந்தை பெரியார் குறித்து பேசியதற்காக தமிழ்நாடு முழுவதும் 53 காவல் நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன; இந்த வழக்குகளில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நான் பெரியார் குறித்து அவதூறாக பேசவே இல்லை; பெரியார் எழுதியதையும் பேசியதையும் தான் நான் பொது மேடைகளில் குறிப்பிட்டேன்.

என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தவும், நீதிமன்றங்களுக்கு அலையவிடுவதற்காகவும் மட்டுமே இந்த வழக்குகள் தொடரப்பட்டன. ஆகையால் இந்த 53 வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என சீமான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காவல்நிலையங்களில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தம்மை கட்டாயப்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் சீமான் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *