ஒசூர்,பிப்.23- ஒசூரில் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் ரூ.200 கோடி மானியத்துடன் கூடிய கடனை தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தொழில் முதலீட்டுக் கழகத்தை மீட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வந்து சேர்த்தார்.
நாட்டில் யார் முதலீடு செய்ய வந்தாலும் அவர்கள் முதலில் தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலக கதவை தட்டும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து தொழிற் சாலைகளையும் எளிதில் தொடங்க முடியும் என்ற அளவுக்கு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.
கலைஞர் வித்திட்ட தொழில் வளர்ச்சி
ஒசூருக்கு பல திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சர், இன்னும் பல திட்டங்களை ஒசூருக்கு அறிவிக்க உள்ளார். ஒசூரில் முதன் முதலில் தொழிற் சாலைகளைக் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களாவார்.
1970இல் டிவிஎஸ், அசோக் லேலண்ட், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களை இங்கு முதலில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
நாட்டில் தமிழ்நாடு என்றும் தனித்துவமான மாநிலமாகத் திகழ்ந்து வருவதற்குக் காரணம் அவர் போட்ட வித்து.
நாட்டில் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் தலைநகரில் மட்டும்தான் தொழில் வளர்ச்சி இருக்கும்.
ஆனால், தமிழ் நாட்டில் மட்டும்தான் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியைக் காண முடியும். இதற்காக முதலமைச்சர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
தொழில்துறையின் சிறப்பான பணி
தமிழ்நாட்டின் வரைபடத்தில் ஒசூர், சிறீபெரும்புதூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என கண்ணை மூடிக் கொண்டு நீங்கள் எங்கே கை வைத்தாலும் அங்கு தொழில்துறை கண்டிப்பாக இருக்கும்.
இதனை அரசு மட்டும் செய்யவில்லை தொழில்துறையினரும் இணைந்து தான் செய்துள்ளனர். தமிழர்கள் தனித்துவம் மிக்கவர்கள்.
அவர்களின் உழைப்பால் தொழில்துறை வளர்ந்துள்ளது. தொழில் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.