“இரு மொழிக் கொள்கை என்பது – இரு விழிகள்”

Viduthalai
5 Min Read

உலகிலேயே மொழிக்காக களம் கண்டு வென்ற மண் ஒன்று உண்டு என்றால் அது தமிழ்நாடு தான். ‘‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்பதற்கேற்ப , தான் எழுச்சி பெற்றதோடு நில்லாமல் இந்திய துணைக்கண்டம் முழுவதும் மொழிஉணர்வை ஊட்டியது தமிழ்நாடு. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டிலிருந்து துவங்கியது போல், மொழிக்கான போராட்டமும் தமிழ்நாட்டில் இருந்து தான் துவங்கியது, இப்படி பெருமை பெற்றது என்பது சாதாரண சாதனைகளால் அல்ல எண்ணற்ற உயிர் தியாகங்கள் செய்து தமிழ்மண்ணின் உரிமைக்காக போராடி வென்றது. தனி வரலாறாகும்.
தமிழ் மொழி என்பது வெறும் பேச்சு மொழியல்ல, உலகின் மூத்த மொழி, உயிர் நாடியாக இயங்கும் மொழி தமிழ். மொழிக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்து என்றும் உயிர்ப்போடு இருப்பது தான் தமிழ் மொழி.
ஒரு மனிதனுக்கு எப்படி இருவிழிகள் தேவையோ அது போன்று தான் , தமிழ்நாட்டிற்கு இரு மொழிக் கொள்கை திட்டம் என்பது ஆகும்.

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை என்பது தமிழனின் இருவிழிகளாகும்.
அந்த இரு விழிகளை ஒளியாக தொடர்ந்து வழிநடத்துவது தான் தமிழ்நாட்டின் உரிமை.அதை தொடர்ந்து கடைப்பிடிப்பது தான் தமிழ் மண்ணின் கடமை.
தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது, பள்ளிகளில் ஹிந்தி உள்ளது. திராவிட இயக்கத்தின் வாரிசுகள் ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் தொடர்ந்து சில அதிமேதாவிகளும், பார்ப்பன ஏடுகள், ஊடகங்களும் கூப்பாடு போடு கின்றனர்.

இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட துணைக் கண்டம், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், உணவு, உடை என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. ‘‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’’ என்பது போல அவரவர் மொழி உயர்வானது , ஒருமைப்பாடு என்ற அரசமைப்புச் சட்டத்தினால் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
ஹிந்தி என்ற தனிப்பட்ட மொழிக்கு தமிழ் நாடு எதிரியில்லை, தான் தாய்மொழியாம் உயிராக எண்ணும் தமிழை தனது குருதியில் கலந்த ஒன்றை உயர்வாக இருக்கவேண்டும் என்று உரிமையோடு போராடுகிறான்.
தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்கப்படும் பள்ளிகளிலோ மற்றும் மய்யங்களுக்கோ சென்று ஹிந்தி மொழி கற்க வேண்டாம் என்று எவர் கரத்தையும் பிடித்து இழுக்கவில்லை, அவற்றின் கதவுகளை இழுத்து மூடவில்லை. மாறாக எந்த மொழியும் கற்கலாம் தவறில்லை.மாறாக தமிழ் மண்ணில் தமிழுக்குத் தான் முன்னுரிமை வேண்டும் என்பதற்காகத் தான் இருமொழிக்கொள்கையை உயர்த்தி, இறுகப் பற்றி கொண்டு செயல்பட்டு வருகிறது.
இது தெரியாமல் சில அதிமேதாவிகள் தமிழ் நாட்டில் ஹிந்தி உள்ளது என்று உளறித் திரிகின்றனர். பன்முகத்தன்மை உள்ள மண்ணில் ஹிந்தி யும் ஓரு மொழி தான் என்பதை உணர்ந்து தான் தமிழ்நாடு தனது தமிழுக்காக நெஞ்சுயர்த்தி களம் காண்கிறது.

தமிழ்நாடு எனும் ஆலமரத்தின் நிழலில் எந்த மொழியும் இளைப்பாற லாம். ஆனால் தமிழ்நாட்டு திண்ணையில் அமர்வதற்கு எவ்வித மொழிக்கும் உரிமை இல்லை.
மனிதனுக்கு எப்படி இருவிழிகள், இரு கரங்கள், இரு கால்கள் உள்ளதோ அது போன்று தமிழ்நாட்டிற்கு இரு மொழிக் கொள்கை என்பது உறுதியான ஒன்று.
அறிஞர் அண்ணா அவர்களால் இரு மொழிக் கொள்கை செயல் வடிவம் ஏற்று என்றும் அரியணையில் தான் தமிழ் மொழி இருக்கிறது.துணையாக ஆங்கிலம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பதை திராவிட இயக்கத்தினர் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் அனைத்து இயக்கங்களும் ஏற்றுத் தான் தமிழை உயர்வாக போற்றி வருகின்றனர்.
இதுவே தமிழ்நாட்டின் பெருமை.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கூற்றுப்படி இந்த திட்டம் என்றும் மாறாது, மாற்ற முடியாது, அதுவரை இந்த நாட்டை அண்ணா தான் ஆள்கிறார் என்று பொருள் என்பது எவ்வளவு மெய்யானது.
தமிழ்நாட்டின் மொழி வரலாறு தெரியாதவர்கள், திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்கள் , திராவிட இயக்கத்தையும், தமிழ் மொழிக்கும் எதிராக பேசுபவர்கள் திராவிட இயக்கத்தின் நூல்களை பலமுறை படியுங்கள். உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.
தாய்க்கு தமிழ் நாடு என்று சேய் அறிஞர் அண்ணா அவர்கள் பெயரிட்ட பெருமை மிகு மண் இது.
இந்தி ய விடுதலை வரலாற்றை எழுத துவங்கினால் அது தமிழ்நாடு மண்ணில் இருந்து தான் எழுதப் படவேண்டும் என்ற பெருமை போல்

தமிழ்மொழியின் சிறப்பை ஒன்றிய அரசு உணர்ந்து செயல்படுவது நல்லது.
ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் ஹிந்தி யை தமிழ்நாட்டில் திணிக்க மாட்டோம் என்று சொல்ல வைத்த மண் தமிழ்நாடு.
வள்ளுவப் பெருந்தகை, திருக்குறள் மேற் கோள் காட்டுவது, காசி தமிழ்ச்சங்கம் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டின் மீது பாசம் வைப்பது போல வேசம் காட்டி செயல்பட்டுக்கொண்டு வரும் ஒன்றிய அரசை தமிழ் நாடு புரிந்து தான் வைத்திருக்கின்றது.ஹிந்தி மொழியை ஏற்றால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் எண்ணம் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஈடேறாது.
ஹிந்தி கற்க எதிர்ப்பு இல்லை, ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்பதை அதிமேதாவிகள் புரிந்து கொள்வது நல்லது.
குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, பச்சைத் தமிழர் காமராசர் அவர்களால் கல்விச் சாலைகளை திறந்து அனைவரும் கற்று , பெருமையோடு உலா வரச் செய்த பெருமை பெற்ற மண் தமிழ்நாடு, நாட்டின் கல்வித் திட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு , ஹிந்தி யை ஏற்றுக் கொண்டால் தான் கல்விக்காக நிதி ஒதுக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் செயல் தோல்வியில் தான் முடியும்.
ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது ஒவ்வொரு முறையும் தொடர்ந்து புறக்கணிப்பு செய்து கடைசியில் தோல்வியைத் தான் பெற்று வருகிறது.

ஆனால் தமிழ்நாடு ஒருபோதும் தோற்றதில்லை, வெற்றி ஒன்றுதான் இலக்கு என்று செயல்பட்டு வருகிறது.
உயர் தனிச் செம்மொழி
தேன் இனித் தமிழ் மொழிமீது
மோதிட வேண்டாம் மோடி அரசு
ஹிந்தி ப் பெண்ணே கேள்
தமிழ் மண்ணே எமது எழுச்சி
வளர்ச்சியே என்றும் மகிழ்ச்சி
பயிற்சியே நமது வளர்ச்சி
வீழ்ச்சி பெறுவது ஹிந்தி
முயற்சியில் உயர்வது தமிழ்!

– மு.சு. அன்புமணி, மதுரை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *